மனிதா மனிதா ஏமனிதா-நாளை
மரணம் வந்தே நெருங்குமுன்னே
புனிதா புனிதா என்றுலகு-நாளும்
போற்ற ஏதும் செய்தாயா
நனிதா அல்ல ஒன்றேனும்-வாழ்வில்
நலிந்தோர் தமக்குத் தந்தாயா
இனிதா இதைநீ செய்திடுவாய்-உடன்
இணையில் இன்பம் எய்திடுவாய்
பிறந்தேம் என்பது பெரிதல்ல-மனிதப்
பிறவியாய் பிறப்பதும் எளிதல்ல
சிறந்தோம் ஏதோ ஒருவகையே-பிறர்
செப்பிட வாழ்பவர் பெருந்தகையே
துறந்தார் முற்றும் துறந்தாராய்-அவரும்
தூய்மையை சற்றே குறைந்தாராய்
இருந்தால் அவரையும் ஏற்காதே-பிறகு
இவ்வுலகம் அவரைச் சேர்க்காதே
தேவைக்கு மேலே பொருள்தேடி-அவர்
தினமும் சேர்த்தது பலகோடி
சாவைத் தடுக்குமா அப்பணமே-மன
சாந்தியைக் கொடுக்குமா அப்பணமே
நாவைத் தாண்டினால் சுவையறியா-நாம்
நாளும் உண்ணும் உணவறியா
பாவைக் கூத்தாம் இகவாழ்வே-அதிக
பணம்பெரின் இல்லை சுகவாழ்வே
அன்னை வயிற்றில் உருவானோம்-எரியும்
அக்கினி தனக்கே எருவானோம்
பொன்னை எடுத்துப் போனோமா-சேர்த்த
பொருளை எடுத்துப் போனோமா
கண்ணை மூடின் திறப்பதில்லை-இரு
கையும் காலும் ஆடவில்லை
மண்ணில் பிறந்த மனிதர்களே-இதை
மறப்பின் இல்லை புனிதர்களே!
புலவர் சா இராமாநுசம்

