Showing posts with label கவிதை புனைவு உலகியல் வாழும் முறை. Show all posts
Showing posts with label கவிதை புனைவு உலகியல் வாழும் முறை. Show all posts

Wednesday, January 23, 2013

மண்ணில் பிறந்த மனிதர்களே-இதை மறப்பின் இல்லை புனிதர்களே!




       மனிதா மனிதா ஏமனிதா-நாளை
           மரணம் வந்தே நெருங்குமுன்னே
       புனிதா புனிதா என்றுலகு-நாளும்
          போற்ற   ஏதும்     செய்தாயா
       நனிதா அல்ல ஒன்றேனும்-வாழ்வில்
           நலிந்தோர் தமக்குத் தந்தாயா
       இனிதா இதைநீ செய்திடுவாய்-உடன்
           இணையில் இன்பம் எய்திடுவாய்
      
       பிறந்தேம் என்பது பெரிதல்ல-மனிதப்
           பிறவியாய் பிறப்பதும் எளிதல்ல
       சிறந்தோம் ஏதோ ஒருவகையே-பிறர்
           செப்பிட வாழ்பவர் பெருந்தகையே
       துறந்தார் முற்றும் துறந்தாராய்-அவரும்
           தூய்மையை சற்றே குறைந்தாராய்
       இருந்தால் அவரையும் ஏற்காதே-பிறகு
           இவ்வுலகம் அவரைச் சேர்க்காதே
       
      தேவைக்கு மேலே பொருள்தேடி-அவர்
           தினமும் சேர்த்தது பலகோடி
       சாவைத் தடுக்குமா அப்பணமே-மன
           சாந்தியைக் கொடுக்குமா அப்பணமே
       நாவைத் தாண்டினால் சுவையறியா-நாம்
           நாளும் உண்ணும் உணவறியா
       பாவைக் கூத்தாம் இகவாழ்வே-அதிக
           பணம்பெரின் இல்லை சுகவாழ்வே
      
     அன்னை வயிற்றில் உருவானோம்-எரியும்
           அக்கினி தனக்கே எருவானோம்
      பொன்னை எடுத்துப் போனோமா-சேர்த்த
           பொருளை எடுத்துப் போனோமா
      கண்ணை மூடின் திறப்பதில்லை-இரு
           கையும் காலும் ஆடவில்லை
      மண்ணில் பிறந்த மனிதர்களே-இதை
           மறப்பின் இல்லை புனிதர்களே!
         
                     புலவர் சா இராமாநுசம்
          

Monday, April 2, 2012

யாதும் ஊரே யாவரும் கேளீர்! ஓதினான் அன்றே புலவன் நன்றே!


யாதும் ஊரே யாவரும் கேளீர்!
ஓதினான் அன்றே புலவன் நன்றே
கோதில் அன்னோன் கூற்றை ஏற்றே
மேதினி அறியதன் மேன்மையை சாற்றே!

தீதும் நன்றும் பிறர்தர வாரா!
சேதியை எடுத்தும் செப்பினான் அவனே!
நோதலும் தணிதலும் அதுபோல் என்றே
நுவன்றவன் அவனே! மேலும் நன்றே!


இப்படிப் பல்வகைக் கருத்துகள் கொண்டே
ஒப்பிட இயலாத் தமிழில் உண்டே!
செப்பிட முடியா இலக்கியப் பாடல்
எப்படி யேனும் படித்திட வேண்டும்!


பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல என்றே வகுத்தனர் இலக்கணம்!
பிழையென எதையும் தள்ளுதல் வேண்டா
விழைவன தவறெனில் கொள்ளுதல் வேண்டா!


உள்ளுவ தெல்லாம் உயர்வென இருப்பின்
எள்ளும் நிலையே என்றும் வாரா!
தெள்ளிய தமிழில் திருமறை வடித்த
வள்ளுவன் வகுத்த வழிதனில் செல்வீர்!


ஏதிலார் குற்றம் கண்டது போதும்
வாதமே செய்து வாழ்ந்தது போதும்!
சோதனைப் பற்பல! மோதும் போதும்
சாதனைச் செய்திட முனைவீர் ஏதும்!


இரவும் பகலுமாம் இன்பம் துன்பம்!
வரவும் போதலும் வழிவழி யாகும்!
உறவும் உணர்வும் ஒன்றிடவாழின்
துறவும் வேண்டா துன்பமும் தீண்டா!


நல்லன செய்தே நலமிக வாழும்
அல்லன நீக்கி அறமது சூழும்
வல்லமை ஒன்றே! வாழும் வழியாம்!
இல்லறம் காக்கின் இல்லை பழியாம்!

                                   புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...