Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Friday, July 14, 2017

வடக்கிருந்து வருகிறதே ஊதக் காற்றும்-ஏதும் வாய்திறவா தமிழரசே உண்மை சாற்றும்





நடக்கிறதா  அரசுயென   தெரிய வில்லை-நாட்டில்
  நடப்பதென்ன  ஒன்றுமே   புரிய வில்லை!
முடங்கியதோ செயல் படுதல்  என்றே-குழப்பம்
  மனமுழுதும் தோன்றிவிட ஏனோ!  ஒன்றே
படச்சுருளாய் ஒடுதய்யா எண்ணத் திரையில்-நின்று
   பாழுமனம் தேடுதய்யா அந்தோ குறையில்
வடக்கிருந்து  வருகிறதே  ஊதக்   காற்றும்-ஏதும்
    வாய்திறவா தமிழரசே உண்மை  சாற்றும்

புலவர் சா  இராமாநுசம்

Sunday, April 30, 2017

மெச்சவொரு ஆட்சிவரும் நாள்தான் என்றோ-உழவன் மேதினியல் மேன்மைகெட அழிதல் நன்றோ!?



உச்சநீதி மன்றம்வரை சென்றப் பின்பும்- எண்ணில்
உயிர்துறந்த உழவர்தமை மறைத்தல் துன்பம்
அச்மின்றி பொய்கூறிய தமிழக அரசே-இனியும்
ஆள்வதெனில் என்றென்றும் அழியா மாசே
பிச்சைதனை போடுவதாய் நடுவண் அரசும்-ஏதோ
பேருக்கு உதவியென தருவது பெரிசாம்
மெச்சவொரு ஆட்சிவரும் நாள்தான் என்றோ-உழவன்
மேதினியல் மேன்மைகெட  அழிதல் நன்றோ!?


புலவர் சா இராமாநுசம்

Friday, February 8, 2013

கொலைகாரா உன்னுடலை உண்ணா பேயும் !



ஏடெடுத்தேன் கவிஎழுத நெஞ்சில் வந்தே-அந்த
ஈழத்து கொடுமையது துயரம் தந்தே
பாடெடுத்த பாடுயென இங்கே அதனை-நான்
படைத்திட்டேன படியுங்கள நீரும் இதனை
ஓடெடுத்து தெருத்தெருவாய் பிச்சை கேட்டே-பக்சே
ஓடிவர கண்டுமனம் மகிழ்ந்து பாட்டே
தேடிவரும் தீந்தமிழில் எடுத்துச் சொல்ல-வெற்றி
தேடிவரும் தனிஈழம் காண்போம் வெல்ல

பால்மணமே மாறாத குழந்தை கூட-பக்சே
பாவியவன் படையாலே சாவை நாட
காலிழந்தார் கரமிழந்தார் கண்ணும் இழந்தார்-மேலும்
கணக்கற்றோர் மடிந்தீழ மண்ணில வீழ்ந்தார்
தாலிதனை இழந்திட்ட தாய்மார் சாபம்-துயர்
தணியாத ஈழத்து மறவர் கோபம்
கூலியென கொடுத்திடுமே அழிவாய் நீயும்-பெரும்
கொலைகாரா உன்னுடலை உண்ணா பேயும்

இளம்பெண்கள் கற்பிழந்தார் உனதுப் படையால்-ஈவு
இரக்கமெனும் குணமில்லா அரக்க நடையால்
வளமிக்க வன்னிகா டழிந்தே போக-நீ
வான்வழியே குண்டுமழை பெய்து ஏக
களமறவர் எம்தமிழர் விடுதலைப் புலிகள்-அந்தோ
கண்மூடி பலியாக சிங்கள எலிகள்
உளமகிழ கூத்தாடும் நிலையும் கண்டோம்-கண்ணீர்
உதிரமென உதிர்கின்ற நிலையே கொண்டோம்

இனிஒன்றாய் வாழ்வதற்கே இயலா தென்றே-அவர்
எண்ணித்தான் முடிவாக எதிர்த்து அன்றே
தனிநாடாய் ஈழத்தை பிரியு மென்றார்-ஆனால்
தரமறுக்க ஆயுதத்தை ஏந்தச் சென்றார்
நனிநாடும் உலகத்தில் உரிமைப் போரே-எங்கும்
நடத்தாமல் பெற்றாரா சொல்லும் யாரே
கனியிருக்க காயுண்ணும் மடையர் இல்லை-ஈழம்
காணாமல் இனியுறக்கம் இல்லை இல்லை


(நன்றி முத்துக்கமலம்)

                    புலவர் சா இராமாநுசம்

Sunday, January 20, 2013

ஓடி உதைத்து விளையாடு!-தமிழ் உணர்வை ஊட்டி நீயாடு!





ஓடி உதைத்து விளையாடு!-தமிழ்
உணர்வை ஊட்டி நீயாடு! 
பாடுபட்டே பொருள் தேடு-நல்ல 
பண்பை என்றும் நீநாடு! 
பீடுபெறுமே உன் வாழ்வு -உண்மைப் 
பேசிடின் பெறுவாய் நல்வாழ்வு 
கோடி தரினும் மயங்காதே-ஏற்ற 
கொள்கையைக் காக்க தயங்காதே! 

இயற்கையை பேணிக் காப்பாயே-நன்கு 
எண்ணி எதையும் செய்வாயே! 
செயற்கையைத் தேடி அலையாதே-நம் 
செந்தமிழ் பேச மறக்காதே! 
முயற்சி ஒன்றேத் திருவினையாம்-நீ 
முயன்றால் வெற்றி அவ்வினையாம் 
அயர்ச்சிக் கொள்ளா வேண்டாமே-வீணே 
அலட்டிக் கொள்ளவும் வேண்டாமே! 

ஒவ்வொர் நாளும் விளையாடு!-பழுது 
உரிமைக்கு வந்தால் போராடு! 
எவ்வழி நல்வழி அதைநாடு-பிறர் 
ஏய்க வந்தால் நீசாடு 
இவ்வழிப் போற்றி விளையாடு-எனில் 
என்றும் வாரா ஒருகேடு 
செவ்வழி இவையே நலங்காண-பிறர் 
செப்பும் பெருமை உளம்பூண
 
                     புலவர் சா இராமாநுசம்
   

Saturday, January 5, 2013

பழகிவிட்டால் எல்லாமே சரியாய்ப் போகும் –இதை, பார்த்தோமே ! மின்வெட்டு ! அதுபோல் ஆகும்!




பழகிவிட்டால்  எல்லாமே  சரியாய்ப் போகும் இதை,
   பார்த்தோமே ! மின்வெட்டு ! அதுபோல்  ஆகும்!
அழுதுகிட்டே  மீன்பிடிக்கும்  மீனவன்  போல -அவன்
   அல்லலுக்கு  விடிவுண்டா  என்றும்  சால!

பழகிவிட்டால்  எல்லாமே  சரியாய்ப் போகும் இதை,
   பார்த்தோமே ! மின்வெட்டு ! அதுபோல்  ஆகும்!

பொழுதுமுட்ட  குடிக்கின்றான்   கவலை  அகல இல்லம்
   போனபின்னர்  அவன்செயலை  எடுத்துப்   புகல!
விழுதுகளாம்  பிள்ளைகளும்  மனைவி  என்றே படும்
    வேதனையை  விளக்குவதும்  எளிதும்  அன்றே!

பழகிவிட்டால்  எல்லாமே  சரியாய்ப் போகும் இதை,
   பார்த்தோமே ! மின்வெட்டு ! அதுபோல்  ஆகும்!


                                             
நஞ்சுண்ட  விவசாயி  கண்டோம்  இன்றே வரும்
    நாட்களிலே  நடக்குமிது  காணும் ஒன்றே!
பஞ்சுண்டு  நெய்வதற்கும்  ஆலை யுண்டே ஆனா
    பலநாளாய்  மூடியது   அரசின்  தொண்டே!

பழகிவிட்டால்  எல்லாமே  சரியாய்ப் போகும் இதை,
   பார்த்தோமே ! மின்வெட்டு ! அதுபோல்  ஆகும்!


கஞ்சுண்டு  வாழ்வதற்கும்  தொட்டி  கட்ட அரசு
     கருணையுடன்  மானியமே  நம்முன்  நீட்ட!
நெஞ்சுண்டு  நன்றிமிக  வாழ்வோம்  நாமே பெரும்
      நிம்மதியாய்  அஞ்சலின்றி  நாளும்  தாமே!

பழகிவிட்டால்  எல்லாமே  சரியாய்ப் போகும் இதை,
   பார்த்தோமே ! மின்வெட்டு ! அதுபோல்  ஆகும்!
                       
                          புலவர்  சா  இராமாநுசம்

Wednesday, January 2, 2013

வடநாடுச் சென்றும் வாளாய் திரும்பிட





வடநாடுச்  சென்றும்  வாளாய்  திரும்பிட
கொடநாடும்  சென்றாராம்  இன்றும் திடமான
திட்டமின்றி!  மக்கள்  தினந்தோறும்  தேம்பியழ
வெட்டும்மின் வெட்டே விளம்பு

ஆள்வோர்க்கும்  துன்புண்டா ஆண்டோர்க்கும்  துன்புண்டா
மாள்வார்கள்  மக்கள்தான்  மாறாதா நாள்போதல்
சொல்லும்  தரமல்ல  சோகம்தான்  என்றுமினி
கொல்லும் நிலைதானே  கூறு

இப்படியே  போனாலே  என்செய்வோம்  சொல்லுங்கள்
ஒப்பிடவே  ஏதுண்டா? உண்மையிலே செப்பிடவே
பஞ்சம்  பசிப்பிணி   பரவிடுமே  ஊரெங்கும்
நெஞ்சம்  பதற  நிதம்

எங்கும்போர்  என்றேதான்  ஏங்கும்  நிலைதானே
பொங்கும் செயல்கண்டே  புண்படுமே தங்கமென
வாங்கும்  பொருளெல்லாம்  வானுயர  ஏறவிலை
தாங்கும்  நிலையுண்டா  தான்!

                    புலவர்  சா இராமாநுசம்

Saturday, December 22, 2012

ஒழிந்ததா மரண பயமேதான் –அடடா! உலகே மகிழ்வின் மயமேதான்!




ஒழிந்ததா  மரண  பயமேதான் அடடா!
   உலகே  மகிழ்வின்  மயமேதான்!
அழிந்ததா ? இல்லை!  அகிலம்தான்-என்ன
   ஆகுமோ  என்றத்  திகிலில்தான்!
எழுந்திட  பொழுதும்  விடிந்தனவே ஆனால்
   எதுவுமே  இன்றி  முடிந்தனவே!
மொழிந்திட  மேலும்  ஏதுமிலை வாழும்
    முறைப்படி  வாழ்ந்தால்  தீதுமிலை!

இயற்கையை  ஒட்டியே  வாழ்வோமா அதை
    எதிர்த்து  அழித்தே  வீழ்வோமா!?
செயற்கை  நம்முடை  சீரழிக்கும் தினமும்
     செய்தால்  அதுநம்   வேரழிக்கும்!
உலகம்  அழிதல்நம்   கையில்தான் நான்
     உரைப்பது  சற்றும்  பொய்யில்தான்!
கலகம், கயமை, போராட்டம் என
    காண்பது  முற்றிலும்  மாறட்டும்!

பிறந்தார்  இறப்பதில்  மாற்றமுண்டா இதில்
    பேதம்  ஏதும்  காண்பதுண்டா !
சிறந்தார்!  செயலால்!  என்றேதான் உலகம்
     செப்பிட  வாழ்தல்   நன்றேதான்!
இறந்தார்  என்றால்  பெருங்கூட்டம் நம்
    இல்முன்  கூடின்  அதுகாட்டும்!
வருந்தார்  இல்லை  ஒருவரென நாமும்
     வையத்தில்  வாழ்வோம்  ஒருவரென!

                                புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...