ஆன்றோரே பெரியோரே வாருமய்யா –பதவி
அடைவதற்குக் கூட்டணியா !? பாருமய்யா!
சான்றோரே நாள்தோறும் செய்திவருதே –அரசியல்
சாக்கடையா !? ஐயகோ! துயரம்தருதே!
கொள்கையென ஏதொன்றும் தெரியவில்லை-என்ன
கூட்டணியோ ! கடவுளே! புரியவில்லை!
எள்ளுகின்ற நிலைதானே முடிவில்வருமே-மக்கள்
எண்ணியிதை ஆய்ந்தாலோர் விடிவுவருமே!
நேற்றுவரை பகைவராம்! காணயின்றே –அந்த
நினைவின்றி சேர்வதா நாணமின்றே!
போற்றுவதா!? இச்செயலும் எண்ணவேண்டும்-நாளும்
புலம்புவதால் தீராது திண்ணமீண்டும்!
தூற்றுவதும் மாற்றுவதும் வழக்கமாக-மெகாத்
தொடராக ஆற்றுவதும் பழக்கமாக!
சாற்றுவதா!? இக்கொடுமை ஆயவேண்டும் –உடன்
சரிசெய்த பின்பேநாம் ஓயவேண்டும் !
புலவர் சா இராமாநுசம்

