Wednesday, November 4, 2015

சூதும் வாதுமே வாழ்வாகும் சொல்லில் இன்றைய மனிதநிலை!



போதுமென்ற மனம் கொண்டே
புகலுமிங்கே யார் உண்டே?
யாதும் ஊரே என்றிங்கே
எண்ணும் மனிதர் யாரிங்கே
தீதே செய்யார் இவரென்றே
தேடிப் பார்பினும் எவரின்றே
சூதும் வாதுமே வாழ்வாகும்
சொல்லில் இன்றைய மனிதநிலை!


மாறிப் போனது மனிதமனம்
மாறும் மேலும் மனிதகுணம்
ஊரும் மாறிப் போயிற்றே
உணர்வில் மாற்றம் ஆயிற்றே
பேருக்கே இன்றே உறவெல்லாம்
பேச்சில் இருப்பதோ கரவெல்லாம்
யாருக்கும் இதிலே பேதமிலை
இதுதான் இன்றைய மனிதநிலை!

மேடையில் ஏறினால் ஒருபேச்சே
மேடையை விட்டால் அதுபோச்சே
ஆடைக்கும் மதிப்புத் தருவாரே!
ஆளை மதித்து வருவாரோ?
வாடையில் வாட்டும் குளிர்போல
வார்த்தையில் கொட்டும் தேள்போல
கோடையின் வெயில் கொடுமையென
குணமே இன்றைய மனிதநிலை!


பற்று பாசம் எல்லாமே
பறந்தது அந்தோ! இல்லாமே
சுற்றம் தாழல் சொல்லாமே
சொன்னது போனதே நில்லாமே
முற்றும் துறந்தது கபடமென
முழுதும் கலைந்தது வேடமென
கற்றும் அறியா மூடநிலை
காண்பதே இன்றைய மனிதநிலை!

புலவர் சா இராமாநுசம்

17 comments :

  1. //பற்று பாசம் எல்லாமே
    பறந்தது அந்தோ! இல்லாமே
    சுற்றம் தாழல் சொல்லாமே
    சொன்னது போனதே நில்லாமே
    முற்றும் துறந்தது கபடமென
    முழுதும் கலைந்தது வேடமென
    கற்றும் அறியா மூடநிலை
    காண்பதே இன்றைய மனிதநிலை!//

    ரசித்தேன் அய்யா!
    த ம 1

    ReplyDelete
  2. போலித்தனமும், சுயநலமும் மலிந்து விட்டன.

    ReplyDelete
  3. மனிதர் நிலையால் வருந்தித் தந்த கவிப்படையல்!
    இனியென்று திரிந்துவர் இவர்களென
    எண்ண வைக்கின்றது ஐயா!
    வேதனைதான்!...

    ReplyDelete
  4. கூறியவை பொதுவான மனித குணம் என்று தோன்றினாலும் விதிவிலக்குகளும் இருக்கலாம் அல்லவா

    ReplyDelete
  5. இரண்டாம் வாரத்தில் சென்னைக்கு வர இருக்கிறேன் தொடர்புகொள்வேன்

    ReplyDelete
  6. இன்றைய சூழலை சிறப்பாய் சொன்ன கவிதை! அருமை!

    ReplyDelete
  7. \\வாடையில் வாட்டும் குளிர்போல
    வார்த்தையில் கொட்டும் தேள்போல
    கோடையின் வெயில் கொடுமையென
    குணமே இன்றைய மனிதநிலை\\ இன்றைய மனிதர்களின் குணங்களைப் பற்றித் துல்லியமாக வரைந்துவிட்டீர்கள்.. அருமை ஐயா.

    ReplyDelete
  8. பற்று பாசம் எல்லாமே
    பறந்தது அந்தோ! இல்லாமே
    சுற்றம் தாழல் சொல்லாமே
    சொன்னது போனதே நில்லாமே
    முற்றும் துறந்தது கபடமென
    முழுதும் கலைந்தது வேடமென// ம்ம்ம் வேஷதாரிகள் வாழும் இடமாகியது இந்த உலகம்..யதார்த்தம் சொல்லிய விதம் அருமை ஐயா...

    ReplyDelete
  9. இந்த நிலை என்று மாறுமோ :)

    ReplyDelete
  10. அருமை ஐயா இன்றைய சமூக நிலையை அழகாக விவரித்தீர்கள் நன்று
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  11. இன்றைய மனிதர்களின் மனவோட்டம் கவிதையில் .வலிக்கிறது


    மிகச் சிறப்பான கவிதை புலவரே வாழ்க நூறாண்டு
    தம +1

    ReplyDelete
  12. சிறப்பு மிகு வரிகள் ஐயா
    நன்றி
    தம +1

    ReplyDelete
  13. புலவர் அய்யாவுக்கு வணக்கம்! நாட்டு நடப்பை நயம்படச் சொன்னீர்கள். நம்மை நாமே நொந்து கொள்வதைத் தவிர வேறு ஒன்றும் செய்வதற்கு இல்லை.

    ReplyDelete
  14. உன்மை நிலை இதுவே!
    அருமை

    ReplyDelete
  15. மேடையில் ஏறினால் ஒருபேச்சே
    மேடையை விட்டால் அதுபோச்சே

    மேடை விட்டு இறங்கும்போதே மறந்து விடும் பேச்சு அது!

    நல்ல கவிதை ஐயா.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...