Monday, November 13, 2017

ஒன்றே செய்யினும் நன்றே செய்க நன்றே செய்யினும் இன்றே செய்க!



மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தன்னால் இயன்ற உதவிகள் செய்வீர்!
ஏழைகள் என்றும் இன்புடன் வாழவும்
பேழையுள் வைக்கும் பணமது கொண்டும்
அற்றார் அழிபசி தீர்தல் இன்றே
பெற்றான் பொருளை வைப்புழி என்றே
ஐயன் வள்ளுவர் அறைந்தார் அன்றே
பொய்யில்!உண்மை! உணர்வோம் நன்றே!

முன்னோர் உரைத்த முதுமொழி தன்னை
பொன்னே போல போற்றுவோம்! அன்னை
தன்நிகர் இல்லாத் தமிழ்மொழி போற்றி
இன்முகம் காட்டி இன்சொல் சாற்றி
மாற்றார் ஆயினும் மதித்து நடக்கும்
ஆற்றல் கொள்வீர்அன்பால் வெல்வீர்
இயற்கை தன்னின் இயல்பைக் காப்போம்
செயற்கை செய்யும் சிதைவை தடுப்போம்!

நல்லன கண்டு நாளும் செய்வோம்!
அல்லன செய்ய அஞ்சின்! உய்வோம்!
உடுக்கை இழந்தவன் கைபோல் சென்றே
இடுக்கண் களைவது நட்பாம் என்றே
வாழின் வையம் வாழ்த்திடும்! ஆமே!
சூழும் பெருமையும் வந்திடும்! தாமே!
கண்ணியம் கடமை கட்டுப் பாடனென
அண்ணா வழியில் அனைவரும் வாழ்வோம்



இப்படி வாழின் என்றுமே பெருமை
ஒப்பிட இயலா! உரைப்பதோ அருமை!
எப்படி யேனும் வாழ்ந்தால் சரியென
தப்படி வைத்தால் தண்டணை உரியன
அறிவீர்! தெளிவீர்! ஆவன உணர்வீர்!
பெறுவீர் வெற்றி!பேதமை அகற்றி
ஒன்றே செய்யினும் நன்றே செய்க
நன்றே செய்யினும் இன்றே செய்க!

                  புலவர் சா இராமாநுசம்

11 comments :

  1. அருமை ஐயா. இனியெனும் நல்லது நடக்கும் நம்புவோம்.
    த.ம.பிறகு

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா

    காலம் பதில் சொல்லும் நல்லதே நடக்கும் அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. //இன்முகம் காட்டி இன்சொல் சாற்றி
    மாற்றார் ஆயினும் மதித்து நடக்கும்
    ஆற்றல் கொள்வீர்அன்பால் வெல்வீர்///

    அழகிய வரிகள்.

    ReplyDelete
  4. அருமை ஐயா
    நல்லதே நடக்கட்டும்
    தம +1

    ReplyDelete
  5. அருமை ஐயா! நல்ல வரிகள்!

    ReplyDelete
  6. வணக்கம் ஐயா அருமையான புனைவு

    ReplyDelete
  7. எழுத்தில் சொன்ன ஆலோசனைகள் மனதில் நிற்க வேண்டுமே

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...