Saturday, July 20, 2013

என் முகநூல் பதிவுகள் -4





         பிச்சையெடுத்தாவது கற்பது இனிது. அப்படி கற்ற கல்வி நல்ல சபையில் உதவுவது மிக இனிது. முத்தையொக்கும் மகளிரது வாய்ச்சொல் இனிது. அதுபோல பெரியோர்களைத் துணையாகக் கொள்ளுதல் இனிது.

பொருள் உடையவனது ஈகை இனிது. மனைவியுள்ளமும் கணவன் உள்ளமும் ஒன்றுபடக் கூடுமாயின் மனை வாழ்க்கை இனிது. நிலையாமையை ஆராய்ந்து முற்றும் துறத்தல் நன்கு இனிது.

                  இழந்த பொருள்களுக்காக வருந்துதல் கற்றுணர்ந்த பெரியோர்களுக்கு இல்லை. சிறந்த நிலையை அடைய ஊக்கத்துடன் செயல்படுபவரிடத்து அந்நிலை விரைவில் கிட்டவில்லையே என்ற முயற்சித் துன்பம் இல்லை. அறத்தின் நல் இயல்புகளை அறிய முடியாமல் வீண்
கோபம் கொண்டால், அவர் முன் எல்லா நன்மைகளும் புலப்படாமல் போகும்.


                   நல்லொழுக்கம் செல்வம் போன்றது. முறையான இல்லற ஒழுக்கம் துறவறத்தைப் போன்று தூய்மையானது. பிறரைப் பழித்துப் புறங்கூறுதல் கொலை செய்தல் போன்றது. தம்மை மதியாதவரை மதித்தல் என்பதும் இழிதகைமையான போக்கு போன்றதாகும்


            தூக்கம் இல்லாதவர்கள் !

திருடர்களுக்கும் தூக்கம் இல்லை. ஒரு பெண்ணை விரும்பும் தலைமகனுக்கும் தூக்கம் இல்லை. செல்வத்தை ஈட்டுபவனுக்கும் தூக்கம் இல்லை. அச்செல்வத்தைத் திருடு போகாது காப்பாற்றுபவனுக்கும் தூக்கம் இல்லை.

                                புலவர்  சா  இராமாநுசம்

                           

Thursday, July 18, 2013

அன்பின் இனிய உறவுகளே!





அன்பின்  இனிய  உறவுகளே!

                   காலை வணக்கம்!

          வரும் ஆகஸ்டு 2-ம் தேதிமுதல் 18-ம் தேதி வரை   நான்
வெளிநாடு, சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்துள்ளேன்   என்பதை மிக
மகிழ்வோடு  தெரிவித்துக்  கொள்கிறேன்

          இங்கிலாந்து, பிரான்சு ,பெல்ஜியம் ,நெதர்லாந்து ,ஜெர்மனி
சுவிட்சர்லாந்து ,லைச்டென்ஸ்டின் ,ஆஸ்திரியா , இத்தாலி  ஆகிய
(9, நாடுகள்) செல்லவும், அங்கு ,( 15- இரவுகள், 16- பகல்)தங்கவும்
ஆவன செய்யப் பட்டுள்ளது

         விரிவான திட்டம்  விரைவில்  வெளியிடுவேன்.

    மேற்கண்ட நாடுகளில், ஆங்காங்கு உள்ள  நம் ,வலையுலக  உறவுகளை 
சந்திக்கவும் பேசவும்  ஆவலா உள்ளேன்! எனவே ,அங்குள்ள  உறவுகளே ,உங்கள்
 தெலைபேசி  எண்ணை , என் வலைப் பதிவின் மறுமொழிப்  பெட்டியில்

குறிப்பிட, வேண்டி, விரும்பி கேட்டுக்  கொள்கிறேன்.

   மேலும் , என்னுடைய, சுற்றுலா  நலமுற அமைய , வலைத்தள,
முகநூல் உறவுகள் வாழ்த்தையும்  வேண்டுகிறேன்

                                            அன்புள்ள
                                                                                                                                  
                                       புலவர் சா இராமாநுசம்


                                               

Tuesday, July 16, 2013

இன்றே ஆடிப் பிறப்பாகும்-போற்றி எழுதுதல் மிகவும் சிறப்பாகும்



ஆடிப் பட்டம் தேடிவிதை-என்ற
    ஆன்றோர் பழமொழி என்மனதை
நாடி  வந்திட இக்கவிதை-ஐயா
    நவின்றேன் இங்கே காணுமிதை
தேடி நல்ல நாள்பார்த்தே-அதற்கு
   தேவை அளவே நீர்சேர்த்தே
பாடிப் பயிரிட எழுவாரே-உழவர்
   படையல் இட்டுத் தொழுவாரே


இன்றே ஆடிப் பிறப்பாகும்-போற்றி
     எழுதுதல் மிகவும் சிறப்பாகும்
ஒன்றே சொல்வேன் உழுவாரே-இவ்
     உலகம் ஏத்தி தொழுவாராய்
நன்றே ஏற்கும் நாள்வரையில்-ஏதும்
     நன்மை விளையா அதுவரையில்
அன்றே சொன்னார் வள்ளுவரே-நீர்
     அகத்தில் அதனைக் கொள்ளுவரே

உழவர் கைகள் மடங்கிவிடின்-இந்த
     உலக வாழ்வே முடங்கிவிடும்
வழுவே அறியா தொழிலன்றோ-வரும்
    வருவாய் ஒன்றும் நிலையன்றோ
எழவே முடியா நட்டத்தில்-அரசு
    எந்திரம் போடும் சட்டத்தில்
அழவே வாழ்கிறான் ஊர்தோறும்-தேடி
    அனைவரும் வருகிறார் நகர்தோறும்

இந்நிலை தொடரும் என்றாலே-அவர்
    இவ்விதம் நாளும் சென்றாலே
எந்நிலை ஏற்படும் நாட்டினிலே-அடுப்பு
    எரியுமா நமது வீட்டினிலே
அந்நிலை ஏற்படும் முன்னாலே-ஆளும்
     அரசு செய்யுமா சொன்னாலே
தந்நிலை மறக்க வேண்டாமே-செய்ய
     தவறின் பஞ்சம் ஈண்டமே

                         புலவர் சா இராமாநுசம்

Friday, July 12, 2013

வேண்டாம் வெளிச்சம் என்கின்றேன் !


வேண்டாம் வெளிச்சம் எதனாலே-நெஞ்சு
வேதனைப் படுமாம் அதனாலே
இங்கே

இயற்கை படைத்த ஓவியமே
இந்த உலகமென்ற காவியமே
செயறகை என்னும் ஆயுதமே
சிதைக்க நாளும் பாயுதம்மே
இயற்கை அழிய அழியத்தான்
இன்னல் பல்வகை வழியத்தான்
செயற்கை செய்யும் சீரழிவை
செப்பியும் கேளா பேரழிவை
பார்க்க
வேண்டாம் வெளிச்சம் என்கின்றேன்

யாதும் ஊரே என்றானே
யாவரும் கேளீர் என்றானே
தீதும் நன்றும் பிறராலே
தேடி வாரா தென்றானே
சாதிச் சண்டை ஊரெங்கும்
சமயச் சண்டை உலகெங்கும
மோதிப் பார்க்க பலநாடும்
முடிவில் விளைவே சுடுகாடாம்
பார்க்க
வேண்டாம் வெளிச்சம் என்கின்றேன்

பற்று பாசம் எல்லாமே
பறக்க நெஞ்சில் இல்லாமே
சுற்றம் தாங்கும் நிலையுண்டா
சொன்னால ஆட்டும் தலையுண்டா
குற்றம் காண்பதே குணமாக
கொலையும் இங்கே கலையாக
பெற்றோம் நாமே பெரும்பேறும்
பேச்சும் செயலும் வெவ்வேறும்
பார்க்க
வேண்டாம் வெளிச்சம் என்கின்றேன்

இன்னும் சொல்ல பலவுண்டே
எழுதவும் இங்கே இடமுண்டே
பன்னும் பாவம் தெரியாமல்
பாதை எதுவென அறியாமல்
மின்னும் மின்னல் மேகத்தில்
மறைய அதுபோல் லோகத்தில்
பின்னும் எழுத மனமின்றி
பிரிந்தேன் நானும் மிகநன்றி

புலவர் சா இராமாநுசம்

Wednesday, July 10, 2013

ஏதம் இல்லா நல்வாழ்வே-அழியா இன்பம் காணும் சுகவாழ்வே


சாதலே மிகவும் இன்னாது-என
சாற்றிய வள்ளுவன் மாற்றியதை
ஈதல் இயலா தென்றாலே-அதுவும்
இனிதெனச் சொல்லிப் போற்றியதை
காதில் வாங்கி நடப்பீரா-ஏழைக்
கண்ணிர் தன்னைத் துடைப்பீரா
ஏதம் இல்லா நல்வாழ்வே-அழியா
இன்பம் காணும் சுகவாழ்வே

பெற்றான் பொருளைக் காப்பாக-அதனைப்
பேணிக் காக்கும் நோக்காக
அற்றார் அழிபசி தீர்ப்பீரே -பெரும்
அறமென செல்வம் சேர்ப்பீரே
உற்றார் இல்லார் உறவில்லை-பசி
உற்றார் எவரோ? கணக்கில்லை
நற்றா யாக ஏற்றிடுவீர்-நாளும்
நற்பணி யாகவே ஆற்றிடுவீர்

ஈத்து உவக்கும் இன்பந்தான்-வாழ்வில்
ஈடில் ஒன்றென அறியாதான்
பார்த்துப் பார்த்துப் பொருள்தேடி-அதை
பதுக்க பாவம்! மண்மூடி
காத்திருந் தவன் கைபற்ற-அந்தோ
காணா தவன்கண் நீர்வற்ற
சேர்த்தேன் அனைத்தும் என்னபலன்-வீணே
சென்றதே இன்று கண்டபல

புலம்பி அழுதால் வந்திடுமா-போன
பொருளும் பாடம் தந்திடுமா
விளம்பும் குறளின் வழிசெல்வீர்-அதுவே
விவேகம்! உணரின் நீர்வெல்வீர்
தளும்பா நிறைகுட நிலைபெற்றே-எதுவும்
தனக்கென வாழா உளம்பெற்றே
அழுவார் துயரைப் போக்கிடுவீர்-அவர்
அன்பை நெஞ்சில் தேக்கிடுவீர்

-புலவர் சா. ராமாநுசம்

Monday, July 8, 2013

நாட்டளவில் இன்றுவரை நடக்கும் ஒன்றே- இதனை நம்புகின்ற மக்கள்தான் உணர்தல் என்றே!?





அணைந்துவிட்ட  சாதித்தீ  மீண்டும்  இன்றே –கொடிய
    ஆலகால விடமாக  மாற  நன்றே!
இணைந்துவிட்ட  காதலர்கள்  பிரிந்தோர்  ஆக –அந்தோ
    இளவரசன்  உயிர்மட்டும்  பறந்து  போக!
நனைந்துவிட  துயராலே பல்லோர் உள்ளம் – இன்றே
    நாடெங்கும்  பாயுதய்ய ! கண்ணீர் வெள்ளம்!
நினைந்திதனை  வருந்துமா ! பாழும் உலகம் –மேலும்
    நீளாது  திருந்துமா  மூளும்  கலகம்!

உண்மையிலே  சாதிதன்னை  ஒழிக்கும்  எண்ணம் –இங்கு
   உருவாக  வில்லையெனில், ! அழிக்கும்!  திண்ணம்!
அண்மையிலே நடக்கின்ற  நிகழ்வு  எல்லாம்- அதற்கு
   ஆதார  மானதென காட்டும்  சொல்லாம்!
புண்மைமிகு அரசியலே  காரணம்  ஆகும் –சாதிப்
    புற்றுநோய் பல்லுயிரைக் கொண்டே  போகும்!
வண்மைமிகு  சட்டத்தால்  பயனே  இல்லை! –நாளும்
    வளர்ப்பவரின் சுயநலமே! உண்டோ  எல்லை!

ஓட்டுதனைக்  குறிவைத்தே  சாதி இங்கே – மனித
    உணர்வுகளை  தூண்டிவிடின் ஒழிதல்  எங்கே!?
ஆட்டுவித்தால் ஆடுகின்ற  பொம்ம  லாட்டம் –கட்சி
    அரசியலார் அனைவருமே கொள்ளும்  நாட்டம்!
ஏட்டளவில் கொள்கையென  திட்டம்  போட்டே –அறியா
    ஏழைகளை  ஏமாற்றி  ஓட்டு  கேட்டே!
நாட்டளவில் இன்றுவரை  நடக்கும்  ஒன்றே- இதனை
    நம்புகின்ற  மக்கள்தான்  உணர்தல் என்றே!?

                           புலவர்  சா  இராமாநுசம்
    

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...