Saturday, June 11, 2011

மறவாதீர் மரபுக் கவிதை

மறவாது எழுதுங்கள் மரப்பில் கவிதை-அது
                    மனமென்னும் நிலத்திலே போட்ட விதை
          இறவாது எண்ணத்தில் கலந்தே விடும்-சொல்ல
                  எண்ணினால வந்துடன் கண்ணில் படும்
          புறமாக அகமாக சங்கம் தொட்டே-புலவர்
                  புனைந்தது பத்தோடு தொகையும் எட்டே
          அறமாக வந்தப்பின் நூல்கள் கூட-மரபு
                  வழியொற்றி வந்ததாம்  பலரும் பாட

              ஒருமுறை உள்ளத்தில் தோன்றி விட்டால்-நம்
                    உயிருள்ள வரையிலே நினவைத் தொட்டால்
          வருமுறை மரபுக்கே உண்டு யொன்றே-கவிதை
                  வடிக்கின்ற அனைவரும் அறிந்த ஒன்றே
          இருமுறை சொன்னாலே எதுகை மோனை-நெஞ்சில்
                எடுத்ததை தந்திடும் கவிதைத் தேனை
        திருமுறை எந்நாளும் மரபே ஆகும-இன்றேல்
                தீந்தமிழ் சீர்கெட்டே மங்கிப் போகும்

இலக்கியம் கண்டேபின் இலக்கணம கண்டார்-பின்
                  எதற்காக அன்னவர் மரபினை விண்டார்
     கலக்கமே மொழிதன்னில் வருதலும் வேண்டாம்-என
                கருதியே மரபென வகுத்தனர் ஈண்டாம்
     விளக்கமாய் அவரதை செல்லியும் உள்ளார்-அதன்
                வீணென்று எண்ணிட எவருமே சொல்லார்
      அளக்கவே இயலாதாம் செம்மொழி சிறப்பே –அதை
            அழியாமல் காப்பதும் நமக்குள்ள பொறுப்பே

          மழைநாளில் தோன்றிடும்  காளானைப் போல-உடன்
                மறைவதா எண்ணுவீர் கவிதையும்  சால
          விழைவீரா அருள்கூர்ந்து கவிஞரும் நீரே-இதென்
              வேண்டுகோள் மட்டுமே  மாசில்லை வேறே 
          பிழையாக யாரையும் நானசொல்ல மாட்டேன்-வீண்
              பிடிவாதம் பிடித்திங்கே கவிதீட்ட மாட்டேன்
          அழையாத விருந்தாக ஏதோநா னில்லை-நெஞ்சின்
              ஆதங்கம் எழுதினேன் வேண்டாமே தொல்லை

                                                புலவர் சா இராமாநுசம் 

6 comments :

  1. வரிகள் அற்புதம் ஐயா ...

    ReplyDelete
  2. ""அழையாத விருந்தாக ஏதோநா னில்லை-நெஞ்சின்
    ஆதங்கம் எழுதினேன் வேண்டாமே தொல்லை""

    தன் கடமையை
    தன்மானத்தோடு
    கடக்கும்
    தமிழ்ச்சிங்கமைய்யா
    நீங்கள்
    கவிதையின் மரபும்
    வாழ்க்கையின் மரபும்
    உங்களிடம் தான் கற்க வேண்டும்
    உன்னதம்

    ReplyDelete
  3. நல்லாயிருக்குங்க...
    அத்தனையும் அருமையோ அருமை ஐயா!!!!

    !!பெரியவரே நம்ம பக்கமும் உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்!!!

    ReplyDelete
  4. மரபுக்கவிதை எழுத ஆசைதான் நிச்சயம் ஒருநாள் ஒரு முழுக்கவிதையையும் மரபாக எழுதிப்பார்ப்பேன்.

    தங்கள் பக்கம் வந்ததில் மிகுந்த மகிழ்ச்சி..

    ReplyDelete
  5. மரபுக் கவிதை எழுத ஆசை தான்.உங்கள் கவிதைகளைப் படிக்கும் போது மலைப்பாய் இருக்கிறது.அருமை.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...