Monday, February 6, 2012

நாளை உமது துக்கதினம்!


மாயா மாயா மாயாவே-நீர்
     மறைந்த துயரம் ஓயாவே!
காயாய் உதிர்ந்து போனீரே-அந்தோ
     காலன் கைவசம் ஆனீரே!
தேயா பிறையாய் மனவானில்-என்றும்
    தெரிய வாழ்வாய் குணவானே
சாயா குன்றே பதிவுலகில்-ஏனோ
     சாய்ந்தாய் நிலைப்பது எதுவுலகில்?


உன்னை நினைத்தே வாடுகின்றோம்-உம்
    உறவைப் புகழ்ந்தே பாடுகின்றோம்
என்ன துயரம் என்றேனும்-உங்கள்
    எழுத்தில் அறியோம் ஒன்றேனும்
மின்னல் இன்றி இடியொன்றே-வந்து
    மேலே விழுந்தது போலின்றே
கன்னல் எழுத்துக் கலைவாண-உமக்கு
    கண்ணீர் அஞ்சலி செய்கின்றோம்!


தனக்கெனத் தனித்திறன் மிகுந்தவரே-உறவு
    தவிக்க விண்ணில் புகுந்தவரே
மனத்துயர் ஆற்றிட மருந்துண்டா-உமை
    மறந்திட எமக்கே வழியுண்டா?
கனவென மறைந்து விட்டீரே-எம்
    கண்ணின் பார்வைக்கு எட்டீரே
அனைவரின் அழுகுரல் கேட்டீரா-ஒரு
    ஆறுதல் உரைக்க மாட்டீரா?


நாளை உமது துக்கதினம்-என
     நம்ப மறுக்குது எமதுமனம்
வேளை வந்தா? போய்விட்டீர்!-தலை
     விதியென சொல்லவா உயிர்விட்டீர்!
ஆளை எங்கே காணோமென-செய்தி
     அறியார் கேட்டால் சொல்வதென
காளை போல வலம்வந்தீர்!-என்ன
     கருத்தில் விண்ணாம் புலம்சென்றீர்!
     

             புலவர் சா இராமாநுசம்

     


           
          

17 comments :

  1. இரங்கல் கவிதை மனதைக் கனக்க வைததது. நாளை அவர் துக்க தினத்தை அவரின் நினைவாக அனுஷ்டித்து அஞ்சலி செலுத்துவோம்!

    ReplyDelete
  2. மனம் கனக்கச் செய்து போகும் துயரம்
    எங்கள் எண்ணங்களை இரங்கற்பாவாக படைத்து
    அஞ்சலி செய்தமைக்கு நன்றி
    அவர் ஆன்மா சாந்தி பெற பிரார்த்திப்போம்

    ReplyDelete
  3. ஆழ்ந்த இரங்கல் அன்பருக்கு

    ReplyDelete
  4. மாயபிம்பமாய் அளவளாவிய பின்
    அரூபமாய் மறைந்து சென்றாயே மாயா!
    இதற்காகவா எம்மிடம்
    நட்பு பாராட்டினாய்!
    மனம் ஏற்கவில்லை ஐயா
    இதுவும் மாயமென உரைத்திட
    செய்து வருமோ?!

    அருமை நண்பர் மாயா ராஜேஷிற்கு
    மௌன அஞ்சலிகள்.

    ReplyDelete
  5. கவிதை கண்ணில் நீரை வரவழைத்துவிட்டது .

    ReplyDelete
  6. Emathu thuyarkalaiyum pakirnrhukolkierom nalla kavithai

    ReplyDelete
  7. இரங்கல் கவிதை வாசித்து விட்டீகள்..மாயாவின் ஆத்மா சாந்தியடையட்டும்..

    ReplyDelete
  8. மாயா ராஜேஷ் அவர்களுக்கு மௌன அஞ்சலிகள்.

    ReplyDelete
  9. அண்ணே எதிர் பாராத நிகழ்வு..மனது மிகவும் வலித்தது!

    ReplyDelete
  10. அதிகம் அறிமுகமில்லாதபோதும் நட்பொன்றை இழந்த வலியை உணர்கிறேன். தங்கள் கவிதை உணர்த்தும் வலியோ பன்மடங்கு வேதனை தருகிறது. அவருக்கு என் மானசீக அஞ்சலிகள்.

    ReplyDelete
  11. இரங்கல் கவிதை மனதை இன்னும் கனமாக்கியது..நாளை துக்க தினம் அனுஷ்டிப்போம்.

    ReplyDelete
  12. மாயாவிற்கு எனது கண்ணீர் அஞ்சலி!

    ReplyDelete
  13. மறக்கமுடியாத நல்ல நண்பர்.அவரது இறுதிப் பதிவைக்கூடப் படித்தால் எமக்குப் போகிறேன் என்று சொல்லி விடைபெற்றதுபோலவே இருக்கு.அதோடு அவர் தளத்திற்கு மாய உலகம் என்கிற பெயரிலும்கூட ஏதோ ஒன்று.கண்ணீர் அஞ்சலி மாயாவுக்கு !

    ReplyDelete
  14. அற்புதமான இரங்கள் கவிதை,
    இந்த கவிதையை வாசித்த பின்பாவது, மாயா உயிர்பிப்பாராக.....

    ReplyDelete
  15. மனது கனத்தது....

    மறைந்த நண்பருக்கு எனது அஞ்சலிகளும்...

    ReplyDelete
  16. வேதனையை கவிதை இன்னும் அதிகரித்தே செல்கிறது...படிக்க படிக்க மனம் கனக்கிறது !

    நாளை அனைவரும் ஒன்றாக துக்கத்தை பகிர்ந்து கொள்வோம்...பிரார்த்திப்போம் அவரது ஆத்மா அமைதி அடையட்டும்.

    அஞ்சலிகள் ராஜேஷ் :((

    ReplyDelete
  17. நண்பர் மாய உலகம் ராஜேஸ்க்கு என் அஞ்சலி...

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...