மாயா மாயா மாயாவே-நீர்
மறைந்த துயரம் ஓயாவே!
காயாய் உதிர்ந்து போனீரே-அந்தோ
காலன் கைவசம் ஆனீரே!
தேயா பிறையாய் மனவானில்-என்றும்
தெரிய வாழ்வாய் குணவானே
சாயா குன்றே பதிவுலகில்-ஏனோ
சாய்ந்தாய் நிலைப்பது எதுவுலகில்?
உன்னை நினைத்தே வாடுகின்றோம்-உம்
உறவைப் புகழ்ந்தே பாடுகின்றோம்
என்ன துயரம் என்றேனும்-உங்கள்
எழுத்தில் அறியோம் ஒன்றேனும்
மின்னல் இன்றி இடியொன்றே-வந்து
மேலே விழுந்தது போலின்றே
கன்னல் எழுத்துக் கலைவாண-உமக்கு
கண்ணீர் அஞ்சலி செய்கின்றோம்!
தனக்கெனத் தனித்திறன் மிகுந்தவரே-உறவு
தவிக்க விண்ணில் புகுந்தவரே
மனத்துயர் ஆற்றிட மருந்துண்டா-உமை
மறந்திட எமக்கே வழியுண்டா?
கனவென மறைந்து விட்டீரே-எம்
கண்ணின் பார்வைக்கு எட்டீரே
அனைவரின் அழுகுரல் கேட்டீரா-ஒரு
ஆறுதல் உரைக்க மாட்டீரா?
நாளை உமது துக்கதினம்-என
நம்ப மறுக்குது எமதுமனம்
வேளை வந்தா? போய்விட்டீர்!-தலை
விதியென சொல்லவா உயிர்விட்டீர்!
ஆளை எங்கே காணோமென-செய்தி
அறியார் கேட்டால் சொல்வதென
காளை போல வலம்வந்தீர்!-என்ன
கருத்தில் விண்ணாம் புலம்சென்றீர்!
புலவர் சா இராமாநுசம்

