தனியார் பள்ளிக் கொள்ளைகளே-மீண்டும்
தாங்கிட இயலாத் தொல்லைகளே!
இனியார் எம்மைக் கேட்பாரே-இன்று
எமக்கே உரிமையும் தந்தாரே!
அணியாய்த் திரண்டு வழக்கிட்டார்-நீதி
அவர்கே வெற்றி! முழக்கிட்டார்!
பணிவாய்க் கேட்கிறோம் ஆள்வோரே-இன்னும்
பாரா முகமேன் ஆள்வோரே!
கொண்டதே கொள்கை என்கின்றார்-தாம்
கூறுதல் வேதம் என்கின்றார்!
விண்டதேக் கட்டணம் என்கின்றார்-கேட்டால்
விரட்டியே வெளியே தள்ளுகின்றார்!
தண்டமும் வேறு விதிப்பாரே-இதைத்
தடுத்திட இயலா! பெற்றோரே!
கண்டிட வேண்டும் ஆள்வோரே-உடன்
கண்டிக்க வேண்டும் ஆள்வோரே!
சேவையாய் கல்வியை பள்ளிகளே-எண்ணி
செய்திட வேண்டும் பள்ளிகளே!
தேவையாம் பொருளென வழிதேடி-இப்படி
தேடினால் வருமே பழிநாடி!
எழுத்தே தருபவன் இறைவன்தான்-என
எழுதினர் நமது முன்னோர்தான்!
கழுத்தை நெறிப்பதா பள்ளிகளே-மேலும்
கட்டணம் எரியும் கொள்ளிகளே!
புலவர் சா இராமாநுசம்

