Showing posts with label கவிதை புனைவு துணைவி மறைவு ஆற்றாமை. Show all posts
Showing posts with label கவிதை புனைவு துணைவி மறைவு ஆற்றாமை. Show all posts

Monday, May 7, 2012

என்னவள் மறைந்ததும் இந்நாளே


ஓடின மூன்று ஆண்டுகளே-என்
  உயிரென வாழ்ந்து மாண்டவளே!
தேடியே காணும் இடமன்றே-அன்புத்
   தேவதை மறைந்த இடமொன்றே!
வாடிய மலராய் நானாக –அதன்
   வாசனை, அவளோ விண்னேக!
பாடிய பாடல் அன்றிங்கே-இன்று
   படைத்தேன் படித்திட நீரிங்கே!

தன்னலம் காணாத் தகவுடையாள்-எதிலும்
       தனக்கென நற்குணம் மிகவுடையாள்!
 இன்னவர் இனியவர் பாராமல்-உதவ
        எவருக்கும் மறுப்பு கூறாமல்!
 என்னவள் இவளே செய்திடுவாள்-வரும்
       ஏழைக்கே மருந்தும் தந்திடுவாள்!
 அன்னவள் மருத்துவ மாமணியே-புகழ்
       அறிந்திட இயலாப் பாவழியே!


என்றும் அன்புடன் இருப்பாயா
என்னை விட்டுப் பிரிவாயா!
அன்று உன்னைக் கேட்டேனே
அதற்கு என்ன சொன்னாய்நீ!
நன்று அன்று இக்கேள்வி
நமது காதல் பெருவேள்வி!
என்று சொன்ன தேன்கனியே
எங்கே போனாய் நீதனியே!

கட்டிய கணவன் கண்முன்னே
காலன் அழைக்க என்கண்ணே!
விட்டுப் போனது சரிதானா
விதியே என்பது இதுதானா!
மெட்டியைக் காலில் நான்போட
மெல்லியப் புன்னகை இதழோட!
தொட்டுத் தாலி கட்டியன்
துடிக்க வெடிக்கப் போனாயே!

பட்டு மேனியில் தீவைக்க
பதறும் நெஞ்சில் முள்தைக்க!
கொட்டும் தேளாய் கணந்தோறும்
கொட்ட விடமாய் மனமேறு்ம்!
எவ்வண் இனிமேல் வாழ்வதடி
என்று உன்னைக காண்பதடி
செவ்வண் வாழ்ந்தோம் ஒன்றாக
சென்றது ஏனோத் தனியாக!

எங்கே இருக்கிறாய் சொல்லிவிடு
என்னையும அழைத்துச் சென்றுவிடு!
அங்கே ஆகிலும் ஒன்றாக
அன்புடன் வாழ்வோம் நன்றாக!
இங்கே நானும் தனியாக
இருத்தல் என்பது இனியாக!
பங்கே என்னில் சரிபாதி
பரமன் காட்டிய வழிநீதி!
செய்வாயா--?

                       புலவர் சா இராமாநுசம் 


இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...