Showing posts with label கவிதை புனைவு ஏழைகள் துயரம் தீர்வு. Show all posts
Showing posts with label கவிதை புனைவு ஏழைகள் துயரம் தீர்வு. Show all posts

Thursday, May 10, 2012

தலைமீது கூடையிலே கீரைக் கட்டே!


தலைமீது கூடையிலே கீரைக் கட்டே-தன்
   தலைவிதியை நினத்தபடி துன்பப் பட்டே!
விலைகூறி முடிந்தவரை சத்த மிட்டே-இந்த
    வீதிவழி போகின்றான் நாளுந் தொட்டே!
நிலைகெட்டுத் தடுமாறி நடையும் தளர-சற்று
    நின்றபடிக் கத்துவான் நாக்கு முலர!
விலைகேட்டு அதிகமென விலகிச் செல்ல-படும்
    வேதனையை விளக்கிடலோ! எளிதே யல்ல!

இப்படியே வாழ்கின்றார் எத்தனை பேரே-இந்த
   ஏழைகளின் துயர்தன்னை தீர்ப்போர் யாரே!
தப்படியே வைக்கின்றார் ஆள்வோர் யாரும்-இதை
   தடுத்திடவே முனைவோரும் உண்டா கூறும்!
எப்படியோ போகட்டும்! வேண்டும் நன்மை-என
   எண்ணுகின்ற நிலைதானே நமதுத் தன்மை!
செப்பிடவே இயலாத கொடுமை தானே-கண்டு
   சினந்தென்ன நாமெல்லாம் அடிமை தானே!

கோபுரமாய் வீடெல்லாம் மாறக் கண்டோம்-ஆட்சிக்
    கோட்டையிலே மாறிமாறி ஏறக் கண்டோம்!
ஆபரண துணிமணிகள் மாற்றம் கண்டோம்-வெட்டி
    அரசியலும் பேசுவதில் இன்பம் கண்டோம்!
பாபிகளாய் ஏழைகளைத் தினமும் கண்டோம்-சற்று
    பரிதாபம் பட்டதுடன் முடித்துக் கொண்டோம்!
ஹாபியென ஆங்கிலத்தில் சொல்லைக் கண்டோம்-மன
   ஆறுதலாய்ச் சொல்வதற்கும் கற்றுக் கொண்டோம்!

                  புலவர் சா இராமாநுசம்


இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...