தலைமீது கூடையிலே கீரைக் கட்டே-தன்
தலைவிதியை நினத்தபடி துன்பப் பட்டே!
விலைகூறி முடிந்தவரை சத்த மிட்டே-இந்த
வீதிவழி போகின்றான் நாளுந் தொட்டே!
நிலைகெட்டுத் தடுமாறி நடையும் தளர-சற்று
நின்றபடிக் கத்துவான் நாக்கு முலர!
விலைகேட்டு அதிகமென விலகிச் செல்ல-படும்
வேதனையை விளக்கிடலோ! எளிதே யல்ல!
இப்படியே வாழ்கின்றார் எத்தனை பேரே-இந்த
ஏழைகளின் துயர்தன்னை தீர்ப்போர் யாரே!
தப்படியே வைக்கின்றார் ஆள்வோர் யாரும்-இதை
தடுத்திடவே முனைவோரும் உண்டா கூறும்!
எப்படியோ போகட்டும்! வேண்டும் நன்மை-என
எண்ணுகின்ற நிலைதானே நமதுத் தன்மை!
செப்பிடவே இயலாத கொடுமை தானே-கண்டு
சினந்தென்ன நாமெல்லாம் அடிமை தானே!
கோபுரமாய் வீடெல்லாம் மாறக் கண்டோம்-ஆட்சிக்
கோட்டையிலே மாறிமாறி ஏறக் கண்டோம்!
ஆபரண துணிமணிகள் மாற்றம் கண்டோம்-வெட்டி
அரசியலும் பேசுவதில் இன்பம் கண்டோம்!
பாபிகளாய் ஏழைகளைத் தினமும் கண்டோம்-சற்று
பரிதாபம் பட்டதுடன் முடித்துக் கொண்டோம்!
ஹாபியென ஆங்கிலத்தில் சொல்லைக் கண்டோம்-மன
ஆறுதலாய்ச் சொல்வதற்கும் கற்றுக் கொண்டோம்!
புலவர் சா இராமாநுசம்

