Tuesday, November 12, 2013

எங்கு காணிலும் குப்பையடா-நம் எழில்மிகு சென்னை காட்சியடா!



எங்கு காணிலும் குப்பையடா-நம்
   எழில்மிகு சென்னை காட்சியடா
பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில்
    போடுவார் மேலும் எட்டியடா
தங்கும் மழையின் தண்ணீரும்-செல்ல
   தடைபட அந்தோ! மிகநாறும்
இங்கே எடுக்க ஆளில்லை-அதை
   எடுத்துச் சொல்லியும் பலனில்லை

பாதையில் நடக்கவே வழியில்லை-குப்பை
      பரவிக் கிடப்பது பெருந்தொல்லை
வேதனை  தீரும் வழிகாண்பீர்-எனில்
      வீணே நீரும் பழிபூண்பிர்
சோதனை போல கொசுக்கடியே-எடுத்து
      சொல்ல இயலா நெருக்கடியே
நாதம் இசைத்தே படைபோல-எமை
      நாடி வருமோர் தினம்போல

தொற்று நோயும்  வருமுன்னே-எண்ணி
     தொடங்குவீர் தூய்மைப் பணிதன்னை
மற்றது பின்னர் ஆகட்டும்-குப்பை
     மலையென கிடப்பது போகட்டும்
குற்றம் சொல்வது  நோக்கமல-இது
     குத்தும் கவிதை ஆக்கமல
வெற்றுச் சொல்லும் இதுவல்ல-பட்ட
     வேதனை விளைவாம் இதுசொல்ல

அண்மை காலமாய் இவ்வாறே-ஏனோ
    அடிக்கடி நடப்பது எவ்வாறே
உண்மை எதுவோ வேண்டாமே-உரியோர்
    உணர்ந்தால் போதும் ஈண்டாமே
நன்மை ஒன்றே  உடன்தேவை-மா
     நகர ஆட்சிக்கு இப்பாவை
சொன்னேன் ஐயா! தவறில்லை-ஆவன
    செய்வீர் வேறு வழியில்லை!

       புலவர் சா இராமாநுசம்

13 comments :

  1. என்னதான் சட்டம் கொண்டு வந்தாலும் நாமளும் முயற்சி செய்யனும். கண்ட இடங்களிலும் கொட்டாம பிளாஸ்டிக் பொருட்களை அதிகம் பயன்படுத்தாமலும் இருத்தல் நன்று

    ReplyDelete
  2. ஊதுகிற சங்கை ஊதி வைப்போம் என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது. யாரும் கேட்பதாக இல்லை.

    ReplyDelete
  3. மன உளைச்சல்தான்....
    உணரவேண்டும் அனைவரும்!
    தன் நலனையும் தன்னுடன் இருப்போர் நலனையும்
    எண்ணினால் வழி பிறக்கும்.

    நல்ல கருத்துக் கவிதைப் பகிர்வு ஐயா!

    ReplyDelete
  4. பொதுமக்களாகிய நமது பங்களிப்புதான் இதில் பெரிய இடத்தினை வகிக்கின்றது ஐயா. எங்கு பார்த்தாலும் குப்பைகளைக் கொட்டுகிறோம். தவிர்க்க வேண்டும்

    ReplyDelete
  5. மேயருக்கு பாடல் வழி விடும்
    தூதாக இதை அனுப்பி வைக்கலாம்
    கவியின் அழகில் மயங்கியேனும்
    நிச்சயம் ஆவன செய்வார் என நினைக்கிறேன்
    பகிர்வின் கரு குறைதொடர்பாக இருப்பினும்
    கவிதை மனம் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. குப்பை களைதலை வெறும் குப்பையாகக் கருதிவிட்டது தான் விந்தை. மு.க.ஸ்டாலின் முதல் முறை மேயரான பொழுது மிகச் சிறப்பாகக் குப்பை அகற்றம் செயல்பட்டது. அதன் பிறகு என்ன ஆயிற்று? இந்த ஆட்சியில் எல்லாமே அம்மா அவர்களின் கவனத்திற்குக் கொண்டுபோனால் தான் தீர்க்கப்படும் என்றால் அது சரியா? அறிவுத்திறன் மிக்க சைதையார் ஏன் சும்மா இருக்கிறார்?

    ReplyDelete
  7. சென்னை மட்டுமல்ல புலவர் ஐயா.... தலைநகரிலேயே பல இடங்களில் இப்படி இருக்கின்றது. இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை தான் ”டலாவ்” என அழைக்கப்படும் குப்பைக் கூடங்களிலிருந்து குப்பைகளை எடுக்கிறார்கள்.....

    ReplyDelete
  8. வேதனையிலும் வருதிங்கேக் கவிதை
    இதைப்படித்தே நம் மனம் தேற்றவேணும் இங்கே.
    நியாயம் கிடைத்திட முயற்சித்திடுவோம்
    நன்மைகள் நடக்குமென்றே நினைத்திடுவோம்..மிகவும் சிறப்பு ஐயா.._/\_

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...