Thursday, July 17, 2014

ஆடிப் பட்டம் தேடிவிதை-என்ற ஆன்றோர் பழமொழி என்மனதை



ஆடிப் பட்டம் தேடிவிதை-என்ற
    ஆன்றோர் பழமொழி என்மனதை
நாடி  வந்திட இக்கவிதை-ஐயா
    நவின்றேன் இங்கே காணுமிதை
தேடி நல்ல நாள்பார்த்தே-அதற்கு
   தேவை அளவே நீர்சேர்த்தே
பாடிப் பயிரிட எழுவாரே-உழவர்
   படையல் இட்டுத் தொழுவாரே


இன்றே ஆடிப் பிறப்பாகும்-போற்றி
     எழுதுதல் மிகவும் சிறப்பாகும்
ஒன்றே சொல்வேன் உழுவாரே-இவ்
     உலகம் ஏத்தி தொழுவாராய்
நன்றே ஏற்கும் நாள்வரையில்-ஏதும்
     நன்மை விளையா அதுவரையில்
அன்றே சொன்னார் வள்ளுவரே-நீர்
     அகத்தில் அதனைக் கொள்ளுவரே

உழவர் கைகள் மடங்கிவிடின்-இந்த
     உலக வாழ்வே முடங்கிவிடும்
வழுவே அறியா தொழிலன்றோ-வரும்
    வருவாய் ஒன்றும் நிலையன்றோ
எழவே முடியா நட்டத்தில்-அரசு
    எந்திரம் போடும் சட்டத்தில்
அழவே வாழ்கிறான் ஊர்தோறும்-தேடி
    அனைவரும் வருகிறார் நகர்தோறும்

இந்நிலை தொடரும் என்றாலே-அவர்
    இவ்விதம் நாளும் சென்றாலே
எந்நிலை ஏற்படும் நாட்டினிலே-அடுப்பு
    எரியுமா நமது வீட்டினிலே
அந்நிலை ஏற்படும் முன்னாலே-ஆளும்
     அரசு செய்யுமா சொன்னாலே
தந்நிலை மறக்க வேண்டாமே-செய்ய
     தவறின் பஞ்சம் ஈண்டமே

                         புலவர் சா இராமாநுசம்

8 comments :

  1. எழவே முடியா நட்டத்தில்-அரசு
    எந்திரம் போடும் சட்டத்தில்
    அழவே வாழ்கிறான் ஊர்தோறும்-தேடி
    அனைவரும் வருகிறார் நகர்தோறும்.......
    இன்றைய நாட்டு நடப்பை ஓவியமாய் தீட்டும் வரிகள் அய்யா........

    ReplyDelete
  2. "இன்றே ஆடிப் பிறப்பாகும் - போற்றி
    எழுதுதல் மிகவும் சிறப்பாகும்" - அது
    ஆடிப் பட்டம் தேடிவிதை - என்ற
    ஆன்றோர் பழமொழி என்பதனை
    நன்றே சொன்னீர் நாமறிய...

    "உழவர் கைகள் மடங்கிவிடின்-இந்த
    உலக வாழ்வே முடங்கிவிடும்" என்கிறீர்
    அரசு ஒரு பக்கம்
    இயற்கை மறுபக்கம்
    உழவர் நிலை யாரறிவார்...?

    ReplyDelete
  3. // உழவர் கைகள் மடங்கிவிடின்-இந்த
    உலக வாழ்வே முடங்கிவிடும்... //

    சிறப்பான உண்மை வரிகள் ஐயா...

    ReplyDelete
  4. \\உழவர் கைகள் மடங்கிவிடின்-இந்த
    உலக வாழ்வே முடங்கிவிடும்\\ உண்மை உரைக்கும் அருமையான வரிகள் ஐயா.

    ReplyDelete
  5. வணக்கம்
    ஐயா
    சிறப்பான கவி கண்டு மனம் மகிழ்ந்தது. பகிர்வுக்கு நன்றி
    த.ம 3வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. அருமையான நற் கருத்துக்களைத் தாங்கி வந்த ஆடிப் பிறப்புக் கவிதைக்குத்
    தலை வணங்குகின்றேன் ஐயா .தங்களின் மகளுக்கும் வாழ்த்துச் சொல்ல
    வேண்டிய நேரமிது வாருங்கள் மனதார வாழ்த்துங்கள் ஐயா !
    http://rupika-rupika.blogspot.com/2014/07/blog-post_7674.html

    ReplyDelete
  7. சிறப்பான வரிகள் ஐயா
    நன்றி

    ReplyDelete
  8. உழவர் கைகள் மடங்கி விடின் இந்த உலக வாழ்வே முடங்கிவிடும்//

    உண்மை உண்மை உண்மை! மிகச் சிறப்பான வரிகள் ஐயா!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...