Wednesday, March 18, 2015

சுரக்கவில்லை ஐயகோ! கருணை நெஞ்சில்-எனில் சொல்வதென்ன காதடைத்தீர்! அந்தோ பஞ்சில்!


இரக்கமெனும் குணமில்லார் அரக்கர் என்றே-கம்பன்
எழுதியது உண்மையென உணர நன்றே
அரக்கமனம் கொண்டீரா!? கைதும் செய்தீர் –விழி
அற்றவர்மேல் அடக்குமுறை அம்பை எய்தீர்
உரக்கபலர் ஆதரவுக் குரலைத் தந்தும் –ஏனோ
உணராது இருக்கயவர் உள்ளம் வெந்தும்
சுரக்கவில்லை ஐயகோ! கருணை நெஞ்சில்-எனில்
சொல்வதென்ன காதடைத்தீர்! அந்தோ பஞ்சில்


விழியில்லை என்றாலும் படித்து விட்டே –ஏற்ற
வேலைதனை நாளும்பல கெஞ்சிக் கேட்டே
வழியின்றி வந்தாராம் வீதி தேடி-அவர்
வாழ்வதற்கு அறவழியில் போரும் ஆடி
பழியின்றி அதைத்தீர்க ஆளும் அரசே-உடன்
பரிவுடனே செய்வீராம் ஆள அரசே
கழியன்று கண்ணற்றோர் கையில் கோலே-வழி
காட்டுவது அதுவன்றோ ! தருவீர் வேலை

புலவர் சா இராமாநுசம்

13 comments :

  1. வாக்களித்த மக்களெல்லாம் வீணர் என்ன - காசை
       விட்டெறிந்தால் வால்குழைப்பர் என்ற எண்ணம்
    பூக்குளமென் றோர்பெயரும் இட்டால் நாறும் - கழிவு
       புன்னகைத்துப் போமிடமோ புதிதாய் மாறும் ?
    தீக்கனலாய் எழுமுங்கள் தமிழின் அம்பு - சென்று
       துளைக்கட்டும் தோன்றட்டும் அவர்பால் அன்பு!
    ஆக்கமுற அருங்கவிதை யாக்கின் றீரே - பாழும்
        அவலநிலை மாறுமென்றே எதிர்பார்ப் பாரே..‘!


    பாழும் அவலநிலை மாறும் என்று எதிர்பார்      பாரே!!!!


    சமூகத்திற்குத் தேவையான பாடல் அய்யா!!

    அருமை.

    த ம 1

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  2. வணக்கம்
    ஐயா

    அருமையான பாடல்.. பகிர்வுக்கு நன்றி ஐயா. த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  3. அருமை ஐயா வேதனையைத் தீயை கொட்டித்தீர்த்தீர்....
    தமிழ்மணம் 3

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  4. சமூகத்தைப் பற்றி கவலைகொள்ளாமல் கவிதைகளை எழுதிவிட்டு திடீரென்று சமூக அக்கரை சீர்கெட்டுவிட்டதாக புலம்பும் பல கவிஞர்களை பார்த்திருக்கிறேன் (ஜெ அவர்களை கைது செய்கையில் கண்கூடாக கண்ட ஒன்று) அவ்வாறு இருக்கும் இன்றைய கவிஞர்களுக்கு தக்கப் பதிலடியாக தோழர் ராமானுசம் தந்திருக்கிறார் என்றே கருதுகிறேன்.

    " தலைவணங்குகிறேன் கவிஞருக்கு"
    பார்வையற்றோரின் போராட்டத்திற்கு விரைவில் தீர்வெட்டுமென நம்புவோமாக!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  5. விரைவில் நல்லது நடக்க வேண்டும் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  6. அரசியல்வாதிகளும் ஒரு வகையில் பார்வை அற்றவர்கள்தான்
    இறக்கம் என்ற பார்வை அற்றவர்கள்

    ReplyDelete
  7. பார்வையற்றவர்களை இம்சிக்கும் அரசு...எப்படி இரக்கமுள்ள மக்களின் அரசாக இருக்கமுடியும், ஆளுவோரும் மக்களின் முதல்வராக எப்படி இருக்க முடியும்

    ReplyDelete
  8. அன்புள்ள புலவர் அய்யா,

    விழிபடைத்தவர் எனயெண்ணி...
    வழிகேட்டார் வாழ...
    விழியிருந்தும் குருடர்களாய் இருக்கின்றனரே...!
    விழித்துக்கொண்டனர்
    மாற்றுத் திறனாளிகள்...!

    மாற்றம் வரும் என...
    ஏமாற்றம் வந்தததை நொந்து
    விழித்துக் கொண்டனர்!

    அவர்களின் ராஜபார்வை...
    ஆளும் ராஜாக்களைச் சுட்டெரிக்கட்டும்!
    நன்றி.
    த.ம. 9.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...