Friday, October 2, 2015

அண்ணலே காந்தி நீங்கள்-மீண்டும் அவனியில் பிறக்க வேண்டும்!

அண்ணலே காந்தி நீங்கள்-மீண்டும்
அவனியில் பிறக்க வேண்டும்!
கண்ணியம் இல்லாக் கையர்-ஊழல்
கறையது மிகுந்த பொய்யர்!
எண்ணிலார் மிகுந்து விட்டார்-இங்கே
ஏழைகள் துயரப் பட்டார்!
புண்ணிய வந்தே பாரீர்-மக்கள்
புலம்பலை நீக்க வாரீர்!


உத்தம காந்தி நீங்கள் –மீண்டும்
உதித்திட வேண்டும் வேண்டும்!
எத்தர்கள் செயலால் இங்கே –என்றும்
ஏழ்மைக்கும் விடுதலை எங்கே?
சித்தமே கேட்கும் கேள்வி –அன்று
செய்தீரே தியாக வேள்வி!
புத்தரே காந்தி நீவீர்-உடன்
பூமியில் பிறந்து காவீர்!

தன்னலம் இல்லாத் தொண்டே –நீர்
தந்ததை மக்கள் கண்டே!
பொன்னென மக்கள் போற்றி –அறப்
போரினை உம்மொடு ஆற்றி,
கண்ணெணப் பெற்ற விடுதலை –இன்றே
கயவரால் உற்ற கெடுதலை
எண்ணியே நீக்க வாரீர் !–மக்கள்
இன்னலைப் போக்க வாரீர்!

புலவர் சா இராமாநுசம்
   ( மீள் பதிவு)

16 comments :

  1. Replies
    1. நன்றி! நண்பரே!நலமா!

      Delete
  2. இன்றைய தினத்திற்க்கான நல்லதொரு பதிவு ஐயா
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  3. இன்றைய தேவை காந்தி. நல்ல கவிதை. நன்றி.

    ReplyDelete
  4. நாட்டு நிலைமை யாதென கூறி மகாத்மாவை அழைத்தது அழகான வரிகள். பகிர்வுக்கு நன்றிங்க அய்யா.

    ReplyDelete
  5. அன்புள்ள அய்யா,

    காந்தி பிறந்த நாளில் மீண்டும்
    அவனியில் பிறக்க வேண்டும்!
    கவிதைக்கான காரணங்கள் அருமை.

    த.ம. 5

    ReplyDelete
  6. வணக்கம்
    ஐயா
    காலம் உணர்ந்து கவிதை மலர்ந்த விதம் சிறப்பு ஐயா த.ம 6
    நிகழ்வில் எனது ஜன்னல் ஓரத்து நிலா கவிதை நூல் அறிமுகம் ஆகிறது.. வேண்டி படித்து விமர்சனம் எழுதுங்கள்...
    எனதுபக்கம் பத்திரிகை தகவல் கவிதை அனைத்தையும் காண வாருங்கள்
    Jரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: நீ தந்த பிரியம்.:

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. அருமை ஐயா!
    எத்தனை காந்தி பிறந்தாலும்.......?!

    ReplyDelete
  8. மிக அருமை ஐயா!

    நலமாக இருக்கின்றீர்களா?

    ReplyDelete
  9. வணக்கம் புலவர் ஐயா !

    காந்திதான் மீண்டும் வந்தால்
    ......களைவரோ நெஞ்சின் பாரம்
    சாந்தியும் அடைந்து விட்ட
    .....சத்தியம் இறந்த மண்ணில்
    ஏந்திய ஊழல் தட்டை
    ....எ(ரி)றிந்திட யாரும் இல்லை
    நீந்தியே கரையும் சேர
    ....நினைவுகள் ஆறா ? இல்லை !

    புத்தனைப் போற்றும் மண்ணில்
    ....புதைகுழி வாசம் இன்னும்
    எத்தனை உயிர்கள் நெஞ்சில்
    ...எரிமலை இட்டுச் செல்லும்
    அத்தனை சாபம் கொண்ட
    .....அந்நியன் ஆட்சி தன்னில்
    சத்தியம் தர்மம் எல்லாம்
    .....தளைத்திட முடியா தையா !

    அருமையான கவிதை ஐயா தொடர வாழ்த்துக்கள்
    தங்கள் உடல்நலம் நன்றுதானே ஐயா
    என்றும் நலமோடு இருக்க இறைவனை வேண்டுகிறேன்

    ஐயா இது எசப்பாட்டு இல்லை நெஞ்சின் வலி கொஞ்சம் இறக்கிவிட்டேன் பொறுத்தருள்க !

    ReplyDelete
  10. நினைவு பா அருமை அய்யா.வலைப்பதிவர் விழாவிற்கு உங்களை அன்புடன் விழாக்குழு சார்பாக வரவேற்கின்றோம்..

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...