Wednesday, August 3, 2016

காமுகரே! காமுகரே! வேண்டாம் கொடுமை –வாழும் காலம்வரை வருந்துகின்ற பழியாம்! மடமை!


பத்துவயதுக்கு உட்பட்ட சிறுமி தம்மை –நாளும்
பாலியல் பலத்காரம் செய்யும் உம்மை!
கொத்துகறி போட்டாலும் தவறே இல்லை-காமக்
கொடுயோர்க்கு தண்டணை! அதுவே எல்லை!

மலராத மொட்டுகளை கசக்கி முகரும் –எவரும்
மாபாவி! மனநோயர்! என்றே பகரும்!
புலராத விடியல்போல் இருளே சூழும்-அந்த
புண்பட்ட இளங்குறுத்து எவ்வண் வாழும்!

காமுகரே! காமுகரே! வேண்டாம் கொடுமை –வாழும்
காலம்வரை வருந்துகின்ற பழியாம்! மடமை!
ஆமிதுவே! அறிவீரே! திருந்தப் பாரீர்-பெற்ற
அன்னையவள் பெண்தானே ! எண்ணிக் காரீர்!

செய்தித்தாள் செப்புவது நாளும் இதையே- என்ன
செய்வதெனத் தெரியாமல் திகைத்தல் விதியே!
உய்தித்தான் வந்திடுமா….? ஏங்கும் உள்ளம்- மனித
உருவத்தில் மிருகமா….? துயரே கொள்ளும்!

புலவர் சா இராமாநுசம்

5 comments :

  1. வேதனையான விடயம் ஐயா என்ன செய்வது.....

    ReplyDelete
  2. வெட்கித் தலை குனியவேண்டிய நிகழ்வு.

    ReplyDelete
  3. வேதனை தான் ஐயா. இப்படி எத்தனை எத்தனை காமுகர்கள் இந்த நாட்டில்....

    ReplyDelete
  4. Superdealcoupon aims to provide our visitors the latest coupon codes, promotional codes from leading e-commerece stores and brands.Our goal is to create one ultimate savings destination to save you time and money every day.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...