Monday, October 30, 2017

ஆயிர மாயிரம் பாடலைப் பாடி அரியநல் உவமைகள் ஆய்வுற நாடி

கவிதனில் உயர்ந்த கம்பனைப் பாரீர்
      கற்பனை வளமது கற்றிட வாரீர்!
புவிதனில் பலரும் படித்திட அவரே
      புலமைக்கும் நிகரென உண்டா? எவரே
செவிதனில் இசையென விழுகிற சந்தம்
     செம்மொழி உளவரை அதற்கிலை அந்தம்
நவிலவும் எளிய நற்றமிழ் சொற்கள்
      நாவலர் சுவைக்கும் கற்கண்டாம் கற்கள்!

ஆயிர மாயிரம் பாடலைப் பாடி
      அரியநல் உவமைகள் ஆய்வுற நாடி
பாயிரம் தம்மொடு அமைந்த காவியம்!
       பண்பினை விளக்கும் பைந்தமிழ் ஓவியம்!
தாயென போற்றும் தமிழ்மொழி தன்னில்
       தன்னிக ரற்றுத் தழைப்பதை எண்ணில்
வாயினில் விளக்கிட வார்த்தைகள் இன்றே!
       வாழும் இலக்கியம் தனிலிதும் ஒன்றே

கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும்
      கவிதை வரையும் வல்லமை புரியும்!
உம்பரும் போற்றும் உன்னதக் கதையே
      ஒருவனுக் கொருத்தியாம் சாற்றும், இதையே
அன்பர்கள் ஆய்ந்து குறைநிறை காண்பதும்
      அடிக்கடிப் பட்டி மன்றங்கள் பூண்பதும்
இன்புற நடைபெறும் ஏற்புடை நிகழ்ச்சியே!
      எல்லையில் கம்பனின் கற்பனை புகழ்ச்சியே

தலைமுறை பலவும் தாண்டிய போதும்
      தன்னிலை தன்னில் அழிவிலா தேதும்
நிலைபெற நின்றே இன்றும் வாழும்
      நிகரில் இலக்கிய மணத்தொடு சூழும்
கலைமிக கற்பனைக் களஞ்சியம் என்றே
     கற்பவர் கற்றவர் போற்றிட நன்றே
மலையென மக்கள் மனதில் தங்கிட
     மறையாது என்றும் மகிழ்ச்சி பொங்கிடும்

                        புலவர் சா இராமாநுசம்

13 comments :

  1. அருமை ஐயா மிகவும் இரசனையான வரிகள் பகிர்வுக்கு நன்றி

    த.ம.பிறகு கணினியில்.

    ReplyDelete
    Replies
    1. ஐயா பலமுறை முயன்றும் ஓட்டு சேர்ந்து விட்டதாக பொய் சொல்லுகிறது

      Delete
  2. மகிழ்ச்சி பொங்கினா மகிழ்ச்சிதான்பா

    ReplyDelete
  3. வல்லினம் மெல்லினம் இடையினமென்றே
    வார்த்தைகள் கோர்த்துதான் வழங்கினான் அன்றே
    மெல்லிய சரயுவின் வெள்ளமேயோட
    மெச்சியே பாடினான் மெல்லினம் கூட
    கொல்லுமோர் தாடகை வந்திடும் காட்சி
    கொண்டதே வல்லினம் செய்யுளே சாட்சி
    நல்லதோர் அனுமனை இடையினம்கொண்டே
    நவின்றவன் கம்பனே இயற்றமிழ் கண்டே


    ReplyDelete
  4. சிறப்பான கவிதை ஐயா. ரசித்தேன்!

    ReplyDelete
  5. கம்பனை ரசித்து உங்களின் மனம் வடித்த கவிதையும் அருமை அய்யா :)

    ReplyDelete
  6. என்றும் எங்கும் மகிழ்ச்சிதான் ஐயா.

    ReplyDelete
  7. கம்ப ராமாயணம் எல்லாப் பாடல்களும் இருந்தாலும் பாடி மகிழ்வது ஒரு சிலதே

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...