ஒலிக்கிறது தனிஈழம் தீர்வா மென்றே-ஆனால்
ஒற்றுமையோ வரவில்லை இதுவா நன்றே!
களிக்கிறது மனமெல்லாம் சொல்வேன் ஒன்றே-யாரும்
கடந்ததைப் பேசாமல் சேர்வீர் இன்றே!
சொல்வது யாரெனும் ஆய்வு வேண்டாம்-அவர்
சொற்பொருள் யாதென ஆய்த லீண்டாம்!
வெல்வது தனிஈழம் வருமே ஒருநாள்-நாம்
வீறுகொள்ள விரைந்திடுமே அந்தத் திருநாள்!
உலகெங்கும் வாழ்கின்ற தமிழ ரினமே-உன்
உணர்வாலே ஒன்றுபடின் ஈழம் வருமே!
கலகங்கள் நமக்குள்ளே வேண்டா மினியும்-உள்ள
கழகங்கள் ஒன்றாயின் காலங் கனியும்!
நடந்ததை மறப்பதே நமக்குத் தேவை!-ஈழம்
நல்கிட அனைவரும் செய்யும் சேவை!
திடமதை மனதிலே கொள்ள வேண்டும்-போர்
திட்டத்தை அறவழி தீட்ட வேண்டும்!
ஓரணி திரண்டாலே உடனே வெல்வோம்-குரல்
ஓங்கிட உலகுக்கு எடுத்துச் சொல்வோம்!
பேரணி ஆர்பாட்டம் ஊரில் எங்கும்-பேசும்
பேச்சிலே மூச்சிலே ஈழம் பொங்கும்!
குற்றமே பார்ப்பார்கும் சுற்றம் இல்லை-வெறும்
குறைசொல்லி வந்தாலே மேலும் தொல்லை!
செற்றமே நமக்குள்ளே வேண்டாம்! கெடுக்கும்-இரத்தம்
சிந்தாமல் ஈழத்தைப் பெற்றுக் கொடுக்கும்!
புலவர் சா இராமாநுசம்

