ஏனோ தொடங்கினேன் வலைப்பூவே-பலவும்
எழுதிட நாளும் களைப்பாவே!
தேனாய் இனித்தது தொடக்கத்தில்-ஏதும்
எழுதிட நாளும் களைப்பாவே!
தேனாய் இனித்தது தொடக்கத்தில்-ஏதும்
தேடுத லின்றி இதயத்தில்!
தானாய் வந்தது அலைபோல-இன்று
தவியாய் தவிக்குதே சிலைபோல!
வானாய் விரிந்திட சிந்தனைகள்-கவிதை
வடித்தால் வருஞ்சில நிந்தனைகள்!
உண்ணும உணவும் மறந்தாச்சே-அந்த
உணவின் சுவையும் துறந்தாச்சே!
எண்ண மெல்லாம் வலைப்பூவே-பொழுதும்
எழுதத் தூண்டின தலைப்பூவே!
போதை கொண்டவன் நிலையுற்றேன்-நாளும்
புலம்பும் பயித்திய நிலைபெற்றேன்!
பொழுதும் சாய்ந்தே போனதுவே-களைப்பில்
புலவன் குரலும் ஓய்ந்ததுவே!
பாதி இரவில் எழுந்திடுவேன்-உடன்
பரக்க பரக்க எழுதிடுவேன்!
வீதியில் ஒசைவந்தவுடன்-அடடா
விடிந்த உணரவும் வந்திடிமே!
தேதி கேட்டால தெரியாதே-அன்றைய
தினத்தின் பெயரும் தெரியாதே!
காதில் அழைப்பது விழுந்தாலும-என்
கவன மதிலே செல்வதில்லை!
படுத்த படியே சிந்திப்பேன்-என்
பக்கத் தில்பேனா தாளுமே!
தொடுக்க நெஞ்சில் இருவரிகள்-வந்து
தோன்றும் ஆனல் நிறைவில்லை!
அடுத்த வரிகள் காணாதாம்-அந்தோ
அலையும் நெஞ்சே வீணாதாம்!
எடுத்த பாடல் முடியாதாம்- எனினும்
ஏனோ இதயம் ஒயாதாம்!
அப்பா வேதனை ஆமப்பா-தினம்
ஆனது என்நிலை பாரப்பா
தப்பா-? தொடங்கின வலைப்பூவே-நெஞ்சம்
தவிக்க எண்ணம் சலிப்பாவே!
ஒப்பா யிருந்ததே என்னுள்ளம்-தேடி
ஓடுமா சிந்தனைப் பெருவெள்ளம்
இப்பா போதும் முடியப்பா-சோர்வு
எழவே தொடரா படியப்பா!
புலவர் சா இராமாநுசம்

