கோட்டையிலே பதிவர்களின் ஆட்சி பாரீர் –புதுகை
கோட்டையிலே கூடுகின்றார் காண வாரீர்
ஏட்டில் வாராச் செய்திகளும் முந்தித் தருவார்–அன்னார்
இணையத்தில் நாள்தோறும் பதிவில் வருவார்!
நாட்டை நாளும் நல்வழியில் நடத்திச் செல்லவே- உரிய
நற்கருத்தை அழுத்தமாக நெஞ்சில் கொள்ளவே
ஊட்டமான சத்துணவாம் பதிவர் ஆகுமே –என்றே
உணர்ந்தாலே போதுமுடன் தீமை போகுமே!
கைமாறு கருதாமல் தெண்டு செய்யவே–நேரம்
கருதால் கடமையென உலகம் உய்யவே
பெய்மாரி போன்றுமவர் பணியே ஆற்றுவார்-தம்மை
போற்றினாலும் தூற்றினாலும் கருத்தை சாற்றுவார்
பைமாரி ஊடகங்கள் கொடுக்கும் செய்தியே –கண்டு
பரிதாபம் மக்களவர் குழப்பம் எய்தவே
உய்மாறு உண்மைகள் உரைக்கும் இவரே –ஐயா
உலகத்தில் சொல்லுங்கள் உண்டா? எவரே!
கூடுங்கள் ! பதிவர்களே அனைவருமே ஒன்றாய் –நம்மில்
குறையிருப்பின் ஆய்ந்ததனை நீக்கிடவே நன்றாய்
தேடுங்கள் பதிவருக்கோர் பாது காப்பே –உடன்
தேவையது சங்கத்தின் பதிவுதான்! இப்போ
நாடுங்கள் ஏற்றவழி தன்னை நன்றே-கால்கோள்
நடக்கட்டும்! அமையட்டும் திருநாளாம் அன்றே
போடுங்கள் உண்மைகளை உலகறிய என்றும் –நன்கு
புடமிட்ட பென்னெனவே வாழ்த்தட்டும் நன்றும்!
தங்கமது செய்யாத நன்மைகளைக் கூட –ஏதும்
தடையின்றி தேடிவந்து நம்மிடமே நாட
சங்கமென ஒன்றிருந்தால் ஆகும் என்றே-முன்னே
சான்றோர்கள் சாற்றியதை அறிவோம் நன்றே
பொங்கிவரும் அலைபோல புதுக்கோட்டை வந்தே –முதிய
புலவனிவன் வேண்டுகோளை நிறைவேற்றி தந்தே
எங்குமுள நம்தமிழர் வாழ்த்தவழி காண்போம் –வலிமை
ஏற்றமுற சங்கமென உறுதிமொழிப் பூண்போம்
புலவர் சா இராமாநுசம்

