Showing posts with label வேண்டும். Show all posts
Showing posts with label வேண்டும். Show all posts

Wednesday, March 25, 2015

காவிரிநீர் வடிகாலா எமது நாடே-மூர்க்க கர்நாடக அரசேநீ அடைவாய்க் கேடே!



காவிரிநீர் வடிகாலா எமது நாடே-மூர்க்க
கர்நாடக அரசேநீ அடைவாய்க் கேடே
பூவிரிய நீர்நிறைந்த வளமை தஞ்சை-இன்று
போயிற்று ஆயிற்றாம் நிலமோ புஞ்சை
வாய்விரிய பேசுகின்றார் மேடை ஏறி-ஆனால்
வரவில்லை ஓரணியில் உள்ளம் மாறி!
காயுண்டு கனிதன்னை எறிதல் உண்டா!-இனியும்
கட்சிகளே !உதிரிகளாய் காணல் தொண்டா

தன்முனைப்பு இல்லாமல் ஒன்று படுவீர் –ஏதும்
தடையின்றி பணிநிறுத்தம் வெல்ல விடுவீர்
துன்புறவே வாழ்கின்றான் உழவன் என்றும்-மேலும்
தொடர்ந்திடவே அணைகட்ட முயல இன்றும்
அன்பிலராம் கர்நாடகர் கேளாக் காதே-மத்திய
அரசுக்கும் இதனாலே வருமாம் தீதே
வன்புடையார் நாமென்று உணரச் செய்வோம்-எதிர்
வருங்கால சந்ததிகள் வாழ உய்வோம்

புலவர்  சா  இராமாநுசம்

Friday, January 24, 2014

எடுக்க வேண்டும் நடவடிக்கை-ஒன்றாய் எதிர்போம் கச்சத்தீவின் உடன்படிக்கை!



மீண்டும் மீண்டும் வருகின்றான்-நம்
மீனவர் வலையை அறுக்கின்றான்!
தூண்டில் மீனாய் துடிக்கின்றார்-நாளும்
துயரக் கண்ணீர் வடிக்கின்றார்!
ஈண்டும் ஆட்சி மாறியதே-ஆனால்
எனினும் பழைய காட்சியதே!
வேண்டும் துணிவு! அதுவொன்றே-அவர்
வேதனை போக்கும் வழியின்றே!

எத்தனை தரம்தான் போவார்கள்-சிங்ளர்
எடுபிடி யாக ஆவார்கள்!
மொத்தமாய் போய்விடும் தன்மானம்-அங்கே
மேலும் போவது அவமானம்!
புத்தியில் அவருக்கு கோளாரே-புனித
புத்தரே சொல்லினும் கேளாரே!
எத்தராம் சிங்களர் திருந்திடவே-அங்கே
எதிர்க்க நம்படை நிறுத்திடுவீர்!

ஆறினால் சோறு பழஞ்சோறே-ஆளும்
அம்மா அவர்க்குக் கதியாரே!
கூறினால் மட்டும் போதாதே-அழுத்தம்
கொடுப்பீர் மத்திக்கி, இப்போதே!
மீறினால் வருமே போராட்டம்-என
மத்தியில் ஆள்வோர் உணரட்டும்!
மாறினால் அவர்கள் மாறட்டும்-இன்றேல்
மக்களை அரசே திரட்டட்டும்!

பிடித்த மீனையும் அள்ளுகின்றான்-படகை
பிணைத்து இழுத்துத் தள்ளுகின்றான்!
அடித்துச் சிறையிடல் தொடர்கதையா-இந்த
அவலம் மீனவன் தலைவிதியா!
தடுக்க மத்திக்கு வக்கில்லை-ஆளும்
தமிழக அரசே உடன்ஒல்லை!
எடுக்க வேண்டும் நடவடிக்கை-ஒன்றாய்
எதிர்போம் கச்சத்தீவின் உடன்படிக்கை!


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...