Tuesday, November 18, 2014

நித்தம் ஒருவெண்பா நிச்சியமாய் நானெழுத



நித்தம் ஒருவெண்பா நிச்சியமாய் நானெழுத
சித்தம் வைத்திட்டேன் செம்மொழியில்! –எத்தனைபேர்,
காண்பாரோ நானறியேன்! கண்டே, எனையூக்க
தூண்டிவிடு வாரா தொடர்ந்து

புலவர்  சா  இராமாநுசம்

Sunday, November 16, 2014

வான் சிறப்பு ! குறள் வழி வெண்பா!



கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழையே –தொடுத்திட்ட
வள்ளுவரின் சொற்படியா  வந்திங்கே பெய்துவிட்டே
செல்லுகின்றாய் வான்மழையே செப்பு

புலவர்  சா  இராமாநுசம்

Friday, November 14, 2014

குழந்தைகள் தினம் !


குழந்தைகள் தினம்
----------------------------------
சின்னஞ் சிறுக்குழவி
சிங்கார இளங்குழவி
கன்னம் குழிவிழவும்
களுக்கென்று நீசிரிப்பின்
அன்னை முகமாகும்
அன்றலரும் தாமரைபோல்
தன்னை மறந்ததவளும்
தாலாட்டுப் பாடுவாளாம்


பூவின் இதழ்போல
பொக்கை வாய்விரிய
நாவின் சுவைஅறிய
நறுந்தே னைதடவிட
பாவின் பண்போல
பைந்தமிழ் சுவைபோல
காவின் எழில்போல
களிப்பாயே தேன்சுவையில்

கண்ணே நீ உறங்கு
கற்கண்டே நீ உறங்கு
விண்ணில் தவழ்கின்ற
வெண்மதியே நீ உறங்கு
வண்ண மங்கா மல்
வரைந்தநல் ஓவியமே
மண்ணை வளமாக்கும்
மழையே நீயுறங்கு

கொஞ்சும் மழலைக்கோர்
குழலிசையும் ஈடாமோ
பஞ்சின் மெல்லிய சீர்
பாததில் நீ நடப்பின்
அஞ்சிடும் அன்னைமனம்
அடிதவறி விழுவாயென
நெஞ்சிலே சுமந் திடுவாள்
நீவளரும் வரை யவளே

புலவர் சா இராமாநுசம்

Thursday, November 13, 2014

நாணாதோ நம்நாடும் நன்று


இட்டபயிர் போயிற்றே! ஏர்பிடித்தோன் என்செய்வான்
திட்டமென்ன ஆள்வோரே எண்ணுங்கள் –நட்டமதை
ஈடுசெய்ய இல்லைவழி !ஏங்குகின்ற அன்னவனின்
கேடுநீங்க வேண்டாமா கூறு

உண்டி கொடுத்தும் உயிர்வாழ நன்றே
தொண்டு தனைசெய்தோன் துன்பமுற-விண்டாலும்
காணாதே கண்மூடி காண்பதுவோ! ஆள்வோரே
நாணாதோ நம்நாடும் நன்று

புலவர்  சா  இராமாநுசம்

Monday, November 10, 2014

ஓட்டென்றால் நம்முடைய உரிமைச் சீட்டே –அதை உணராது பலவகையில் வீணாய்ப் போட்டே!


நிழலிங்கே நிஜமெங்கே நிலமை ஆச்சே –நாட்டில்
நிகழ்கின்ற நடைமுறைகள் அனைத்தும் போச்சே!
விழலுக்கே நீர்பாய்ச்சி வீணாய்ப் போனோம் –புலம்பி
விம்முவதில் பயனில்லை! சிலையே ஆனோம்!
தழலுக்கு சுடுவதுதான் இயல்பு தாமே –தெரிந்தும்
தடம்மாறி வீழ்ந்ததுவும் அந்தோ நாமே!
சுழலுக்குள் சிக்கிவிட்ட கதைதான் இன்றே-கவிதை
சொல்லுவது புரிந்தாலே போதும் நன்றே!


ஓட்டென்றால் நம்முடைய உரிமைச் சீட்டே –அதை
உணராது பலவகையில் வீணாய்ப் போட்டே!
நாட்டைத்தான் கெடுத்தவர்கள் நாமே ஆகும் –தேர்தல்
நாடகத்தில் இன்றுவரை! துயரா போகும்!
கோட்டைதான் குறிக்கோளாய் கொள்கை என்றே-ஆட்சிக்
கோலோச்ச கட்சிகளும் கூடி நின்றே!
காட்டைத்தான் வீடாக்கி விட்டார்! நாளும் –ஏழை
கண்ணீரைத் துடைப்பதற்கு இன்றே ஆளும்!

பட்டதுயர் போதுமினி படவும் இயலா – நம்மின்
பகுத்தறிவு அணுவளவும் என்றும் முயலா!
இட்டபடி ஆள்வோரே வருவா ராக-நீங்கா
இன்னல்தான் நிலையென்ற நிலமை போக!
திட்டமிட்டு செயல்படுவோர் ஆட்சி வருமா –மக்கள்
தேவைகண்டு சேவைசெய்யும் திருநாள் தருமா!
குட்டதலை குணிவதுவோ! இனியும் வேண்டாம்-நிமிர
குறைதீரும்! காலமது கனியும்! ஈண்டாம்!

புலவர் சா இராமாநுசம்

Saturday, November 8, 2014

என், முகநூலில் வந்தவை ! வலையில் படிக்கத் தந்தவை !





வாள்முனைப் பெரிது என்றான் நெப்போ லியன்
பேனாமுனைப் பெரிது என்றான் வால்டேர்
அறிவு முனைப் பெரிது என்றார் பெர்னாட்சா
ஒழுக்கமே பெரிது என்றார் திருவள்ளுவர்
ஒழுக்கமில்லாத்தவன் கையில் உள்ள வாளும்
பேனாவும் அவனது அறிவும் பயனற்றதாகும்!

சிரியுங்கள் அது நெஞ்சின் இசை
சிந்தியுங்கள் அது ஆற்றலின் ஊற்று
படியுங்கள் அது அறிவின் வளர்ச்சி
உழையுங்கள் அது வெற்றியின் இரகசியம்
விளையாடுங்கள் அது இளமையின் கொடை!

கல்லில் உயிர் உறங்குகிறது
தாவரத்தில் உயிர் அசைகிறது
விலங்குகளில் உயிர் வெளிப்படுகிறது
மனிதனிடம் உயிர் வேலை செய்கிறது
மகானிடம் உயிர் பணி செய்கிறது

புலவர்  சா  இராமாநுசம்

Tuesday, November 4, 2014

பிழையன்றோ ? ஆள்வோரே எண்ணி பாரீர்- ஏழைப் பேதையராம் அன்னவரை காக்க வாரீர்!



ஏதேதோ  நடக்குது  நாட்டுனிலே –முழுதும்
   எழுதிட  முடியுமா  பாட்டினிலே-நடக்கும்
தீதேதோ  தெரியாது  வாழுகின்றோம்-போகும்
   திசைகாணா துயர்தன்னில்  வீழுகின்றோம்-மேலும்
போதாது விலைவாசி  விண்ணைமுட்ட –தினம்
   புலம்பிட  மக்களும்  கண்கள்சொட்ட! –அதனை
ஒதாது இருந்திட  இயலவில்லை-ஏதோ
   உள்ளத்தை  வருத்திட வந்ததொல்லை


பகல்கொள்ளை  படுகொலை  பெருகிப் போச்சே-நாளும்
    பயத்துடன்  வாழ்கின்ற  நிலையு மாச்சே!-வேறு,
புகலென்ன ! வழியின்றி!  வருந்த லாச்சே-நாடும்
     போவதென்ன  காடாக!  மாற லாச்சே!-மேலும்
மழைவெள்ளம்! இட்டபயிர் அழிந்து போக-கண்டே
    மனம்குமுறும்  விவசாயி நொந்து சாக!-நீதியில்,
பிழையன்றோ ? ஆள்வோரே  எண்ணி பாரீர்- ஏழைப்
    பேதையராம் அன்னவரை காக்க  வாரீர்!

புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...