Friday, April 27, 2012

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்!


அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்!
   அனைவரும் அறியின் வாழ்வில் உய்வோம்!
மன்னவ ராயினும் மறத்தல் இயலாம்
   மறந்தவர் மனமோ வளமிலா வயலாம்!
பின்னை அவர்தமை பேணி மேலும்
   பிள்ளைகள் என்போர் பணிசெய நாளும்
தென்னை மரமாய்ப் பெற்றவர் தாமே
    தினமும் காத்து வளர்தவர் ஆமே!

ஆலயம் தொழுவது சாலவும் நன்று
   ஆன்றோர் கூறிய மூதுரை, இன்று!
சீலமாய் எண்ணி செயல்படின் நன்மை
   செப்பவும் வேண்டுமா? வருவது உண்மை!
கோலமே போடுவார் புள்ளிகள் இடுவதும்
    கோபுரம்கண்டே கன்னத்தைத் தொடுவதும்
ஞாலமே சுற்றலும் நாயகன்செயலே!
    நம்பியே எதையும் செய்திடமுயலே!

ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்
   ஈத்து உவப்பவர் இறையெனச் சொல்வர்!
வாய்தனை அடக்கி வைத்திடின் வெல்வர்
   வாழ்வில் அமைதி  வழியெனச் செல்வர்!
நோய்நொடி இன்றே நேர்வழி சென்றே
   நொந்தவர் துயரம் போக்கிட நன்றே!
தாய்மை குணமே தனக்கெனக் கொண்டே
   தன்னலம் இன்றி செய்வீர் தொண்டே!


             புலவர் சா இராமாநுசம்

Wednesday, April 25, 2012

உன்னெழில் வாழ்வுக்கு உரமே!


    
சினமது சேர்ந்தாரைக் கொல்லி!-என
  செப்பிய குறள்தன்னை உள்ளி!
இனமது காத்திட வேண்டும்-நல்
  இன்பமேப் பூத்திட யாண்டும்!
மனமது வைத்தாலே போதும்-பொது
  மறையது சொல்வது யாதும்!
தினமது எண்ணியே வாழ்வீர்-சினம்
   தேவையா?ஆய்வாக சூழ்வீர்!

செல்லிடம் காப்பதே! சினமும்-என
   சிந்தித்துச் செயல்பட! மனமும்!
அல்லிடம் காப்பதா!? அன்றே!-இதை
   அறிவது அனைவரும் நன்றே!
பல்லிடம் நஞ்சினை வைத்தே-நல்
    பாம்பென பகைகொண்டுக் கொத்த!
இல்லிடம் நெஞ்சிலே! சினமே-முடிவு
    எடுத்தாலே வாழ்வீரக் கணமே!

தன்னையே தான்காக்க எவரும்-சினம்
    தன்னையே காத்திடின் அவரும்!
நன்னலம் காண்பரே என்றும்-வாழ்வில்
    நடந்திடின் அறிவரே இன்றும்!
பொன்நிகர் வள்ளுவன் குறளே-எடுத்து
    போதிக்கும் வழிதேடி வரலே!
உன்னெழில் வாழ்வுக்கு உரமே-என
   உணர்தலே நாம்பெற்ற வரமே!

                                 புலவர் சா இராமாநுசம்


Monday, April 23, 2012

ஓயாத அலைபோல முயற்சி வேண்டும்!


ஓயாத அலைபோல முயற்சி வேண்டும்
   உறவல்ல என்றாலும் உதவ வேண்டும்!
சாயாத நீதிவழி என்றும் வேண்டும்
   சாதிமதம் பார்க்காத மனமே வேண்டும்!
காயாகிக் கனியாகக் காக்க வேண்டும்
   காலத்தை பயனாகக் கழிக்க வேண்டும்!
ஆயாத செயல்தன்னை நீக்க வேண்டும்
   ஆணவத்தை அடியோடு அகற்ற வேண்டும்!


கோபத்தைக் கொடிதென்று எண்ண வேண்டும்
    குடிகெடுக்கும் குடிதன்னை ஒழிக்க வேண்டும்!
ஆபத்தை முன்கூட்டி அறிதல் வேண்டும்
    அழுக்காறு ஆசைகளை அடக்க வேண்டும்!
பாபத்தை செய்யாது இருக்க வேண்டும்
   பண்பதனைப் பாடறிந்து ஒழுக வேண்டும்!
தீபத்தைப் போல்தியாகம்  செய்ய வேண்டும்
    திட்டமிட்டே தினந்தோறும் நடக்க வேண்டும்!


முன்னோரின் மூதுரையை ஏற்க வேண்டும்
    முறையாகக் கல்விதன்னைக் கற்க வேண்டும்!
பின்னோரின் நலந்தன்னைப் பேண வேண்டும்
    பிழைசெய்யின் மன்னிப்புக் கோர வேண்டும்!
தன்னேர் இல்லாத தகமை வேண்டும்
   தாய்போல தாய்மெழியைப் போற்ற வேண்டும்!
இன்னாரே என்றாலும் மதிக்க வேண்டும்
   இனியசொல் பேசலே என்றும் வேண்டும்!

                                            புலவர் சா இராமாநுசம்

Friday, April 20, 2012

இளமையில் வறுமை இன்னாது!


இளமையில் வறுமை இன்னாது
   இசையின்றிப் பாடல் இன்னாது!
வளமிலா வயலே இன்னாது
   வன்சொல் கூறல் இன்னாது!
அளவிலாச் செலவும் இன்னாது
   ஆயாது செய்தலும் இன்னாது!
களமின்றி ஆடல் இன்னாது
      காதலில் தோல்வியும் இன்னாது!


கூடா ஒழுக்கம் இன்னாது
  குறையேக் காணல் இன்னாது!
வீடே இன்றெனில் இன்னாது
  விவேகம் இன்றெனில் இன்னாது!
ஆடா அரங்கும் இன்னாது
  அன்பிலா இல்லம் இன்னாது!
காடாம் நாடெனில் இன்னாது
  கடமையை மறப்பது இன்னாது!


உழைப்பின்றி உண்பது இன்னாது
  உணராது வாழ்வதும் இன்னாது!
அழைப்பின்றிச் செல்வதும் இன்னாது
  அனுபவ மின்மையும் இன்னாது!
பிழைப்பின்றி வாடுதல் இன்னாது
  பிறனில் விழைதல் இன்னாது!
மழையின்றி பயிரிடல் இன்னாது
   மறதியும் சோம்பலும் இன்னாது!

                          புலவர் சா இராமாநுசம்




Tuesday, April 17, 2012

ஏகும் உயிரும் ஒருநாளே-அதை எண்ணி வாழ்வோம் இந்நாளே!



அச்சம் அகற்றி வாழ்வார்க்கு-வேறு
   அரணே எதுவும் வேண்டாமே!
இச்சை அடக்கி வாழ்வார்க்கு-ஏதும்
    இன்னல் வாரா ஈண்டாமே!
பச்சைக் கீரைக்கும் உப்பின்றி-மிக
    பழைய சோற்றுக்கும் வழியின்றி
பிச்சை எடுத்து வாழ்ந்தாலும்-கல்வி
   பெற்றிட முனைவது நன்றாகும்!


ஈன்றாள் பசியைக் கண்டாலும்-உம்
    இதயம் வேதனைக் கொண்டாலும்!
சான்றோர் பழிக்கும் வினைவேண்டா-என
    சாற்றிய குறளின் வழியிண்டே!
ஆன்றோர் கூறும் நெறிதன்னை-நன்கு
   அறிந்து நடப்பின் துயருன்னை
தோன்றா வகையில் வளந்தருமே-என்றும்
   தோல்வி காணா உளம்பெறுமே!


நல்லார் ஒருவர் உளரானால்-மழை
   நாளும் பெய்யும் பலருக்கும்
வல்லார் வாய்ச்சொல் மறையாகும்-நல்
  வாழ்வில் ஒழுங்கு முறையாகும்
எல்லாம் உடையார் என்றாலும்-வரும்
   எதிர்ப்பை எதிர்த்து வென்றாலும்
பல்லார் போற்றலே வாழ்வாகும்-வீண்
   பழிவர சாற்றிடின் வீழ்வாகும்

ஆகும் காலம் எல்லாமே-நம்
   அருகே வருமே சொல்லாமே
போகும் காலம் என்றாலே-அது
   போகும் எதுவும் இல்லாமே
சாகும் காலம்  தேடிவர-பெற்ற
   சாபமும் பாபமும் ஓடிவர
ஏகும் உயிரும் ஒருநாளே-அதை
   எண்ணி வாழ்வோம் இந்நாளே!


Sunday, April 15, 2012

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்!


ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
   உரிமைக்கு தீங்குயெனில் பொறுக்க வேண்டாம்!
ஆதாரம் இல்லாமல் பேச  வேண்டாம்
   அவதூறு செய்வாரின் உறவே வேண்டாம்!
யாதானும் வாழும்வழி காண வேண்டாம்
    என்றென்றும் பகைமையே பூண வேண்டாம்!
தீதாகப் பொருள்தேடி சேர்த்தல் வேண்டாம்
    திட்டமிட்டு வாழ்வதை மறக்க வேண்டாம்!


வளங்காணக் கடன்பட்டு வருந்த வேண்டாம்
    வரவுக்கு மேல்செலவுச் செய்தல் வேண்டாம்!
களவான மனங்கொண்டுப் பழக வேண்டாம்
    கருணையின்றி பிறர்நோகப் பேசல் வேண்டாம்!
உளமின்றி வெறுப்போடு உதவல் வேண்டாம்
    உதட்டளவு வார்த்தைகளை உதிர்க்க வேண்டாம்!
அளவின்றி யாரோடும் பழக வேண்டாம்
     ஆசைகளை பல்வகையில் பெருக்க வேண்டாம்!


கோழையெனப் பிறர்சொல்ல நடக்க வேண்டாம்
     குறைகளைய எள்ளவும் தயங்க வேண்டாம்!
ஏழையெனில் இரங்காத மனமே வேண்டாம்
     ஏமாற்றிப் பிழைக்கின்ற பிழப்பே வேண்டாம்!
பேழையுள் பணம்போல உறங்க வேண்டாம்
    பிறருக்கு பயன்படத் தயங்க வேண்டாம்!
தாழையின் பாம்பாக இருக்க வேண்டாம்
     தரமில்லா மனிதர்க்கு இணங்க வேண்டாம்!

                                       புலவர் சா இராமாநுசம்






Friday, April 13, 2012

சித்திரைப் பெண்ணே


            இத்தரை மீதினில்
            சித்திரைப் பெண்ணே
            எத்தனை முறையம்மா வந்தாய்-நீ
            என்னென்ன புதுமைகள் தந்தாய்

            எண்ணிப் பதினொரு
            இன்னுயிர் தோழியர்
            நண்ணிப் புடைசூழப் பின்னே-நீ
            நடந்து வருவதும் என்னே

            ஆண்டுக் கொருமுறை
            மீண்டும் வருமுன்னை
            வேண்டுவார் பற்பல நன்மை-அது
            ஈண்டுள மக்களின் தன்மை

            இல்லாமை நீங்கிட
            ஏழ்மை மறந்திட
            வெள்ளாமைத் தந்திடு வாயே-உயிர்
            கொல்லாமைத் தந்திடு வாயே

            ஏரிக்குள மெல்லாம்
            எங்கும் நிரம்பிட
            வாரி வழங்கிடு வாயா-வான்
            மாரி வழங்கிடு வாயா

             புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...