Saturday, March 8, 2014

உலகப் பெண்கள் தினம்!


உலகப் பெண்கள் தினம்

உலகப் பெண்கள் தினம்பற்றி-மிக
உயர்ந்த மேடையில் பறைசாற்றி!
திலகம் அடடா அவரென்றே-நாம்
தினமும் போற்றுதல் மிகநன்றே!
ஆனால்,
மகளிர்க் கென்றே ஒதுக்கீடும்-ஏனாம்
மக்கள் அவையில் குறுக்கீடும்
சகல கட்சிகள் ஒன்றாகி-பெரும்
சாதனை நிகழ்த்த நன்றாக!
புகல என்னத் தடையங்கே-ஆண்டுகள்
போனது பலவே விடையொங்கே?
மகளிர் கென்றே தனிக்கட்சி-உடன்
மகளிர் தொடங்கின் வருமாட்சி!

தொடங்க வேண்டும் இக்கணமே-மெகா
தொடரும் முடியும அக்கணமே!
அடங்கும் ஆணின் ஆதிக்கம்-பெண்கள்
அணியெனத் திரண்டால சாதிக்கும்!
செய்வீரா--?

புலவர் ச இராமாநசம்



மீள் பதிவு- 2011

Friday, March 7, 2014

என் முகநூலில் முகம் காட்டிய முத்துக்கள்!





ஒருவர், யாரிடமும் அளவின்றி உதவிகளை எதிர் பார்க்கக் கூடாது! அதுபோலவே, யாருக்கும் அளவின்றி உதவிகளைச் செய்யக் கூடாது!

உலகத்திலுள்ள , எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் (அருள்) காட்டி வாழ்கின்ற ஒருவனுக்கு தன் உயிரைக் காப்பதுபற்றி அச்சப்படத் தேவையில்லை!

மன்னுயிர் ஓம்பி அருள்வார்க் கில்பென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை- குறள்

உங்கள் குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டுமா! அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, உங்கள் வரவு எவ்வளவோ அதற்குள் உங்கள் செலவும் அடங்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்! வீண்செலவுகளே குடும்ப அமைதியைக் கெடுக்கும்

குடும்பத்தில் கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ, சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேமிப்பதும் அறவே கூடாது . அதனால்
இருவரிடையே உள்ள உறவு கெடும்! மேலும் குடும்பத்தில் அமைதி நிலவ, சகிப்புத் தன்மை ,விட்டுக் கொடுத்தல், தியாகம் ஆகிய மூன்றும் இருவரிடத்தும் அவசியம் தேவை!

இன்று நாடெங்கும் நாள்தோறும் அரசியல், அல்லது இலக்கியம் சார்ந்த மேடைகளில் சொற்பொழிவு நடந்து கொண்டுதான் இருக்கின்றன! ஆனால் அச் சொற்பொழிவு எப்படி இருக்க வேண்டுமென்றால், கேட்கின்ற மக்கள் தம்மை மறந்து , அச் சொற்பொழிவில் மயங்கி ஈடுபாடு காட்டுவதாக இருக்க வேண்டும்! மேலும் அச் சொற்பொழிவை நேரில் கேட்காதவர்களும், தாம் கேட்க இயலாமல் போய்விட்டதே என்று ஏங்கி விரும்புவதாக இருக்க வேண்டும்

கேட்டார்ப் பிணிக்கும் தகைஅவாய்க் கேளாரும்
வேட்ப .மொழிவதாம் சொல்குறள்

ஆற்றின் நீர் ஓடிக்கொண்டே இருந்தால் தான் , நீர் தூய்மையாக இருக்கும்! தென்றல் மென்மையாக, வீசிக் கொண்டே இருந்தால் தான் இதமாக இருக்கும்! அதுபோல
மனிதருடைய உள்ளத்திலும் எழும் எண்ணங்களும் நேர்மையும், உண்மையும் கொண்டு, ஓடுகின்ற நீராக, வீசுகின்ற தென்றலாக இருப்பின் வாழ்வு தூய்மையாக
அமையும்!

                    புலவர்  சா  இராமாநுசம்

Wednesday, March 5, 2014

அதிகார போட்டியால் ஏழு பேரே –விடுதலை ஆகாமல் , தவிக்கின்றார்!! அறியும் ஊரே!


அதிகார போட்டியால் ஏழு பேரே –விடுதலை
ஆகாமல் , தவிக்கின்றார்!! அறியும் ஊரே!
இதுகாறும் பெற்றதுயர் போதா தென்றா –மேலும்
இவ்வாறு செய்வது! ஈகோ ! நன்றா!
மதுவுண்டு தள்ளாடும் மனிதர் போன்றே-சட்டம்
மயக்கத்தில் தள்ளாட , காணல் சான்றே!
எதுவுண்டு இந்நிலை மாற்றும் வழியே –வரும்
எதிர்காலம் தீர்காத இந்தப் பழியே!


                       புலவர்  சா  இராமாநுசம்

Monday, March 3, 2014

இனிய உறவுகளே! வணக்கம்!

 


இனிய உறவுகளே! வணக்கம்[

நேற்று காலை எனது இல்லதில் பத்துமணியளவில் ஒரு சிறிய பதிவர் சந்திப்பு நடந்தது! கலந்துரையாடியோர் பட்டியல்!

சீனு, பிரபகிருஷ்ணா, சிவகுமார், அரசன், டி.என்.முரளிதரன், வெற்றிவேல், பாலகணேஷ், புலவர் இராமாநுசம், சேட்டைக்காரன், கே.ஆர்.பி.செந்தில், மதுமதி, ஸ்கூல் பையன், ரூபக் ராம் ஆகியோர் ஆவர்!

பல, செய்திகளை பேசினோம் ! என்றாலும்,
குறிப்பாக சவுக்கு இணையதளத்தை முடக்கு மாறு நீதி மன்றமே ஆணையிட்டுள்ளதை கண்டு வந்த அனைவரும் தங்கள் கவலையை தெரிவித்தனர் !ஆரசியல் வாதிகளின் ஊழலையும் மற்ற ஊழலையும் அம்பலப்படுத்தும் (ஆதாரத்தோடு) சவுக்கு இணைய தளத்தை,தவறான செய்தி தந்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதில் யாருக்கும்
கருத்து வேறுபாடு இல்லை! அவ்வாறு செய்யாமல் இணைய
தளத்தை முடக்க முயல்வது சனநாயக நாட்டில் முறையல்ல என்பதே அனைவரின் கருத்தாக இருந்தது

அனைத்து ஊடகங்களும் அறவழியில் முறையாக
தங்கள் அச்சத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்!!!

செய்வீர்களா!!!?


              புலவர் சா இராமாநுசம்

Wednesday, February 26, 2014

நான், படித்த நாளில் வடித்த கவிதை- எண் 1



புலவர் கல்லூரியில் அகப்பொருள் இலக்கண வகுப்பில் தலைவி
பிரிவிடை ஆற்றா நிலையில் வருந்தி எழுதியதாக நான், படித்த நாளில் வடித்த
கவிதை- எண் 1 புலவர் சா இராமாநுசம்

நானில்லை நீயெனக் கில்லை என்றால்-மேலும்
நலிந்துவிடும் நம்வாழ்வே பிரிந்துச் சென்றால்!
வீணில்லை என்வார்த்தை நம்பு என்றீர்-என்
வேதனையைக் குறைத்தேதான் நீரும் சென்றீர்!
ஏனில்லை சென்றபின்னர் அத்தான் நெஞ்சில்-அந்த
எண்ணம்தான் தினம்வாட்ட அறியேன் துஞ்சல்!
தேனில்லை என்றுமலர் பலவே நாளும்-தேடித்
திரிகின்ற வண்டெனவே ஆனீர் போலும்!

தாக்கவரும் புலிகூட பெண்ணைக் கண்டே-சற்று
தயங்குமெனச் சொல்லுகின்ற கதைகள் உண்டே!
காக்கவொரு ஆளில்லை பெண்ணை என்றால் – அவர்
கற்பென்ன கடைச்சரக்கா? தெருவில் சென்றால்!
நோக்குகின்ற தன்மையெல்லாம் பழுதே அத்தான்-அதை
நோக்கிபல நாள்முழுதும் அழுதேன் அத்தான்!
ஆக்கிவைத்த சோறாக இந்த ஊரே-என்னை
அள்ளிஉண்ண பார்க்கிறது வருவீர் நீரே!

காய்த்தமரம் காவலின்றி தனியாய் ஊரில் –நிற்க
கண்டவரின் கல்லடியை பெறுமே பாரில்!
வாய்தவனும் பிரிந்திருக்க, ஏழை ஆனால்-அவள்
வாழவழி இல்லையது சொல்லப் போனால்!
தேய்த்தெடுத்த சந்தணத்தை தெருவில் வீச-பின்
தேடிவந்து எடுப்பீரா மார்பில் பூச!
மாய்த்துவிடும் நெடும்பிரிவே என்னை உலகில்-இதை
மறவாதீர் மணவாளா துயரம் அலகில்!

பழுத்தபழம் எத்தனைநாள் வைத்தே அத்தான்-நல்ல,
பக்குவமாய் பாதுகாக்க முடியும் அத்தான்!
புழுத்ததென பின்னரதைக் கண்டு வீணே-நீர்
புலம்புவதில் பயனில்லை அதனால் நானே!
கழுத்துவரை நீர்ரலையில் நின்று விட்டேன்-அடுத்த
கணமென்ன அறியீரா நம்பிக் கெட்டேன்!
அழுத்துவதும் என்தலையே நீரில் நீரும்-உடன்
அரைக்கணமும் நில்லாது விரைந்தே வாரும்

புலவர் சா இராமாநுசம்

Saturday, February 22, 2014

என்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்





காரணம்  எதுவென ஆய்தலோ  மடமை- செய்த
   காரியத்தை பாராட்டி  போற்றலே  கடமை!
தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி
   தோற்காது நிலைத்திட  செய்வோமே  யாண்டும்

ஏன்செய்தார்  என்பதோர் கேள்வி யல்ல –மேலும்
   எவர்செய்தார் என்பதும்   கேள்வி  யல்ல
தான்செய்தேன்  எனச்சொல்ல முதல்வர் பதவி-அவர்
   தக்கபடி  முடிவெடுத்து செய்ய உதவி

மூவரொடு எழுவரையும் காத்தார் நன்றே –அதில்
  முரண்பட்டு  பேசுதற்கு  இல்லை ஒன்றே
ஆவலொடு காத்திருந்த  தமிழர் இனமே –இன்பம்
   அலைபோல பொங்கிட களிக்கும்  மனமே

நன்றிதனை  மறப்பது  நன்றல்ல என்றே –ஐயன்
    நவின்றதை மறவாது அனைவரும் இன்றே
என்றுமே  வாழ்கயென முதல்வரைப்  போற்றுவோம்-ஏதும்
     ஈடில்லா செயலென்றே  நன்றியுரை ஆற்றுவோம்

புலவர்  சா  இராமாநுசம்


Friday, February 21, 2014

பெண்ணே எரிந்து போனாயே-உயிர் பிரிந்து எங்கே போனாயோ


அன்று , மூவர் உயிர் காக்க தீக்குளித்து தன், உயிர்
தியாகம் செய்த செங்கொடிக்கு அஞ்சலியாக
எழுதிய கவிதை!

பெண்ணே எரிந்து போனாயே-உயிர்
பிரிந்து எங்கே போனாயோ
விண்ணே நீயும் சென்றாயா-ஓடி
வேலூர் சிறையில் நின்றாயா
கண்ணீர் வற்ற அழுகின்றார்-மக்கள்
கதறி துயரில் விழுகின்றார்
எண்ணீர் மத்தியில் ஆள்வோரே-இனி
எத்தனை உயிர்கள் மாள்வாரே

வஞ்சம் மட்டுமே உருவாக-மூவர்
வாழ்வைப் பறிக்கும் கருவாக
நெஞ்சம் இரங்கா நிலைநன்றா-உயிர்
நீங்கின் மீண்டும் வருமொன்றா
தஞ்சம் அடைந்த பறவைக்கும்-தன்
தசையைத் தந்தவன் தமிழனடா
பஞ்சில் நெருப்பைக் கொட்டாதீர்-தீ
பற்றி எரியும் திட்டாதீர்

முடிவை ஆவர்கள் எடுக்கட்டும்-நாம்
முடங்கியா விடுவோம் ஆகட்டும்
அடங்கி நடக்கும் தமிழனுக்கு-பிறரை
அடக்கவும் தெரியும் தமிழனுக்கு
திடமாய் முடிவு எடுப்பாராம்-அவர்
தினமும் அறப்போர் தொடுப்பாராம்
விடவே மாட்டோம் என்பாரா-வீணில்
விடத்தை அவரே தின்பாரா

இனிமேல் உயிர்பலி வேணாவே-இன்று
இழந்தோம் செங்கொடி வீணாவே
குனியோம் எவர்கும் குட்டகுட்ட-என்ன
கோழையா நாமே தரைமுட்ட
கனிவாய்ச் சொல்லியும் பயனில்லை-உயிர்
காக்க தமிழரே உடன்ஒல்லை
துணிவாய் தொடங்கும் அறப்போரே-மூவர்
தூக்குக் கயிற்றை அறுப்பீரே


மீள் பதிவு!       புலவர்  சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...