Saturday, April 26, 2014

கடந்திட்டேன் ஓரளவு வலியின் துயரே ! –எனவே காணவந்தேன் உறவுகளே நீரென் உயிரே!




முடிந்தவரை கருத்துகளை  எழுதி  வருவேன் –சற்று
     முடியாத திலைதனிலும்  முயன்று  தருவேன்!
விடிந்தவுடன் காணுவது  கணினி  தானே –தனிமை
      வேதனையை, அறியாது  மகிழ  நானே!
வடிந்துவிட்ட  வாய்க்காலாய்  வாழ மாட்டேன் –நீரே
     வருகின்ற வழிதனிலே  ஓய மாட்டேன்!
கடந்திட்டேன்  ஓரளவு வலியின்  துயரே ! –எனவே
    காணவந்தேன்  உறவுகளே நீரென்  உயிரே!

சிலநாட்கள் ஓய்வாக  இருந்த  போதும் – மேலும்
    சிந்தனைகள்  அலையாக  வந்தே  மோதும்
பலநாட்கள்  ஆனதுபோல்  உள்ளச் சோர்வே –சதா
    படுக்கையிலே  கிடப்பதனால் உடலில்  வேர்வே!
அப்பப்பா  கொடுமையது ! தாங்க  இயலா! – மருத்துவர்
    அறிவுரைக்கு  ஏற்பநாளும்  முயல!
எப்பப்பா என்றேநான் காத்துக்  கிடந்தேன் –மீண்டும்
    எழுதிடவே துணிவாக , நன்றிவந்தேன்!

புலவர்  சா  இராமாநுசம்
  

Tuesday, April 22, 2014

ஓட்டுப் போடுதல் நம்கடமை –அது ஒன்றே இன்று நமதுடமை!





இடையில், உள்ளது  ஒருநாளே -நமக்கு
   இருப்பது  தேர்தலில்!   வருநாளே!
படையுள் வீரன்  கைவாளே –என
   பயன்தர, ஓட்டு  அந்நாளே
தடையில் ! சென்றே  போடுங்கள்! –உணர்ந்து
    தக்கவர்  எவரென  தேடுங்கள்
கடையில்  விற்கும்  பொருளல்ல- எதிர்
   காலத்தின் விதியாம் அதைச்சோல்ல!

ஓட்டுப்  போடுதல்  நம்கடமை –அது
   ஒன்றே இன்று  நமதுடமை!
காட்டுத்  தர்பார்  ஒழியட்டும்!-இலஞ்ச
    கயமைக் குணமே  அழியட்டும்!
நாட்டு  நடப்பை  மாற்றிடவே –வெளி
   நாடுகள்  நம்மைப் போற்றிடவே !
கேட்டு மகிழச்  செய்வோமே –பெற்றக்
    கேடுகள்  நீங்க  உய்வோமே!

புலவர்  சா  இராமாநுசம்

  

Saturday, April 19, 2014

கற்றாரோ கல்லாரோ கவலை! இல்லை-மிக கவனமுடன் வாக்களிப்பின் தீரும் தொல்லை!



கற்றாரோ கல்லாரோ கவலை! இல்லை-மிக
கவனமுடன் வாக்களிப்பின் தீரும் தொல்லை!
உற்றாரா உறவினரா எண்ணல் வேண்டாம்-நம்
உரிமைதனை ஆய்தேதான் அளிப்பீர் ஈண்டாம்!

கடந்திட்ட காலமதை எண்ணிப் பாரிர்-அதில்
கண்டபலன் என்னவென ,நன்கு ஓரிர்!
நடந்திட்ட தீமைபல! காரணம் யாரே! –மேலும்
நடப்பதற்கு வழிவிட்டால் அழியும் ஊரே!

எரிகின்ற கொள்ளியிலே எந்தக் கொள்ளி –ஐயா
ஏற்றதென கேட்போரே! தெளிவாய் உள்ளி!
புரிகின்ற ,அவர்செயலை கருத்தில் கொண்டே –ஓட்டு
போடுவதே நாட்டுக்குச் செய்யும் தொண்டே!

இன்னாரை ஆதரிக்க வேண்டு மென்றே –இங்கே
எழுதுவது என்வரையில் தவறாம் ஓன்றே!
ஒன்னாரை நீரேதான் உணர வேண்டும் – அது
உம்முடைய ,உரிமையென சொல்வேன் மீண்டும்!


புலவர்  சா  இராமாநுசம்

Thursday, April 17, 2014

நாட்டுநிலை! இதுதானே! நம்புங்க! -தேர்தல் நாளன்று இதையெண்ணில் தெம்புங்க!



ஐயாமாரே அம்மாமா  ரேபாருங்க-எங்கும்
அமர்க்களமே ஆகிவிட ஊருங்க
பொய்யான வாக்குறதி ஏனுங்க- நம்மைப்
போடச்சொல்லி வாக்குசீட்டு தானுங்க
ஊழலென்ற வார்த்தைமிக பாவங்க!- அதை
உச்சரிக்க, அனைவருமே! கோவங்க!
சூழலென்ன! செய்யாதெவர்! கேளுங்க!-எடுத்து
சொல்லுதற்கு யாருமில்லா நாளுங்க!

ஓட்டுக்காக ஊரெல்லாம் வருவாங்க - அவர்
உருப்படியா அவங்களென்ன செய்தாங்க!
கேட்டுபலன் ஏதுமிங்கே இல்லிங்க- நம்ம
கேடுகெட்ட அரசியலே தொல்லைங்க!
போட்டுபோட்டு கண்டபலன் ஏதுங்க! ஓட்டு
போட்டபின்னர் பெற்றதெலாம் தீதுங்க
நாட்டுநிலை! இதுதானே! நம்புங்க! -தேர்தல்
நாளன்று இதையெண்ணில் தெம்புங்க!


புலவர்  சா இராமாநுசம்

Monday, April 14, 2014

இத்தரை மீதினில் சித்திரைப் பெண்ணே!




 உறவுகளே! எழுத இயலாத நிலை!  ஆனாலும் இன்று ஏதேனும்
தரவேண்டும் என்ற  ஆசை! எப்போதோ  எழுதியது


            இத்தரை மீதினில்
            சித்திரைப் பெண்ணே
            எத்தனை முறையம்மா வந்தாய்-நீ
            என்னென்ன புதுமைகள் தந்தாய்

            எண்ணிப் பதினொரு
            இன்னுயிர் தோழியர்
            நண்ணிப் புடைசூழப் பின்னே-நீ
            நடந்து வருவதும் என்னே

            ஆண்டுக் கொருமுறை
            மீண்டும் வருமுன்னை
            வேண்டுவார் பற்பல நன்மை-அது
            ஈண்டுள மக்களின் தன்மை

            இல்லாமை நீங்கிட
            ஏழ்மை மறந்திட
            வெள்ளாமைத் தந்திடு வாயே-உயிர்
            கொல்லாமைத் தந்திடு வாயே

            ஏரிக்குள மெல்லாம்
            எங்கும் நிரம்பிட
            வாரி வழங்கிடு வாயா-வான்
            மாரி வழங்கிடு வாயா

             புலவர் சா இராமாநுசம்

Friday, April 11, 2014

செய்தி! அறிவிப்பு!




உறவுகளே! கடுமையான முதுகுவலி ! மருத்துவர் அறிவித்த படி
இம்மாதம் முழுவதும் ஓய்வு தேவைப்படுகிறது! பொறுத்தருள்க!
நலமடைந்ததும் சந்திப்போம்

வணக்கம்!


புலவர்  சா  இராமாநுசம்

Wednesday, April 9, 2014

ஆட்சியை மறுக்கத் துறவியென-அன்று ஆனார் இளங்கோ அடிகளென



ஆட்சியை மறுக்கத் துறவியென-அன்று
   ஆனார் இளங்கோ அடிகளென
காட்சியை எண்ணிப் பார்பீரே-மாறிக்
   கட்சிக்கு கட்சிப் போவீரே
மாட்சியா சற்று நில்லுங்கள் உங்கள்
   மனதைத் தொட்டுச் சொல்லுங்கள் 
சாட்சியா வேண்டும் மேன்மேலும்-நாளும்
   சண்டைகள் தேவையா இனிமேலும்

சேவை செய்ய என்கின்றீர்-பதவியில்
   சென்றதும் என்ன செய்கின்றீர்
தேவை உமக்கெதோ தேடுகின்றீர்-ஆனால்
   தேர்தல் வந்தால் ஒடுகின்றீர்
சாவைத் தடுத்திட ஆகாதாம்-என்றும்
   சாதிச் சமயம் போகாதாம்
பாவைக் கூத்தே நாள்தோறும்-நடக்க
   பாவம் மக்கள் ஊர்தோறும்

நஞ்சென ஏறிட விலைவாசி-நொந்து
   நாளும் மக்கள் அதைப்பேசி
நெஞ்சிலே நிம்மதி துளியின்றி-தினம்
   நீங்கா வேதனை மனதூன்றி
பஞ்சென அடிபட வாழ்கின்றார்-கடும்
   பற்றாக் குறையில் வீழ்கின்றார்
வெஞ்சினம் அவர்பெறின் என்னாகும்?-உடன்
   விலையைக் குறைப்பீர் ஆள்வோரே!

                              புலவர்  சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...