Saturday, August 30, 2014

வேங்கடவன் நினைவு! விளைவு! வேண்டுதல் புனைவு!

இன்று சனிக்கிழமை அல்லவா...!வேங்கடவன்  நினைவு!


ஏழுமலை வாசா எனையாளும் பெருமானே
எண்ணற் றோர் பலர் கூடி-நாளும்
வாழும் வழிநாடி வருகின்றார் உனைத் தேடி
வரிசையிலே நிற்பதும்! காணக்கண் -கோடி
சூழும் இடர்தம்மை சுடர்கண்ட பனியாக்கி-வரும்
சோதனைகள் இல்லாது சுகமாக அருள்நோக்கி
பாழும் மனமெல்லாம் பதப்படுத்த தூண்டுகிறேன்
பரந்தாமா !உன்பாதம் பணிந்துநான் வேண்டுகிறேன்

புலவர் சா இராமாநுசம்

Tuesday, August 26, 2014

முன்னர் முகநூலில் மொழிந்தவை!





உறவுகளே! வணக்கம்!
இன்று , தந்தையர் தினமாம்! பலரும் எழுதுகின்றார்கள் !
பெற்றவள் தாய் என்றால் , பெற்றவன் தந்தைதானே! அவர்கள்
பெற்றது( மகனோ,மகளோ ) யாரானாலும், அது உண்மைதானே!
எனவே ,அவர்களைப் வாழ்த்துவதோ , நன்றி சொல்லுவதோ
முறைதானே!
இங்கே , வள்ளுவர் கூட தந்தையர் தினம் பற்றி சொல்லியுள்ளதைப் பார்போமா!!!
தந்தைக்குத் தள்ளாமைத் தோன்றும் போது , கனோ, மகளோ
தாங்கிப்பிடித்து உதவேண்டுமென்று சொல்லாமல், இத், தந்தை, இப்படிப்பட்ட மக்களைப் பொறுவதற்கு என்ன தவம் செய்தானோ என்று , மற்றவர்(உலகத்தவர்) பேசும் படியாக இருத்தல் வேண்டும்
என்பதை, கடமை என்று கூட சொல்லாமல், உதவி என்றே சொல்லியுள்ளது வியக்கத் தக்கதல்லவா!

மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லென்னும் சொல்- குறள்

சொல்லுகின்ற பொருள் ,நல்லதோ, கெட்டதோ ,எதுவானாலும், அதனைச் சொல்லுகின்றவர் , உயர்ந்தவரோ, தாழ்ந்தவரோ ,எவரானாலும்,நாம், அப்பொருளைப் பற்றி ஆராய்ந்து, அதன் உண்மைப் பொருளை உணர்வதுதான் அறிவாகும்!!

எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவுகுறள்

எந்த ஒரு செயலையும் செய்ய முற்படும்போது அதனைப் பற்றி நன்கு ஆராய்ந்து.தகுதியான ஒருவனிடம் ஒப்படைக்க , வேண்டும்
அதாவது, இந்த, செயலை ,இப்படிப் பட்ட வழிகளின் மூலமாக,
இவன், செய்து முடிக்க வல்லவன் என ஆய்ந்து,அறிந்து அச்செயலை
அவனிடத்தில் விட வேண்டும்

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்- குறள்

உறவுகளே!
உலகில் பொருள்!(காசு)இல்லாமல் எவரும் வாழ முடியாது என்பது, அனைவரும் அறிந்ததே! அதனால் அனைவரும் வாழ்வு வளம்காண அதனைத் தேடத்தான் வேண்டும்! சிலரை, ஓடிஓடி சம்பாதிக்கிறான் என்றுகூட சொல்வதுண்டு!
ஆனால், அச்செல்வத்தை நீங்கள தேடவேண்டிய அவசிமில்லை! அந்த செல்வமே நீங்கள் இருக்கும் இடத்தின் வழியைக் கேட்டு தானே வரும்! எப்பொழுது தெரியுமா! நீங்கள செய்யும் எந்த தொழிலையும் சோம்பலின்றி , ஊக்கத்தோடு உழைத்தால் போதும் என்பதாம்.

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையான் உழை . (குறள்)
அதர்--வழி, உழை--இடம்

புலவர்  சா  இராமாநுசம்



Sunday, August 24, 2014

காந்தியவாதி சசிபெருமாள் உண்ணாவிரதம்!


காந்தியவாதி சசிபெருமாள் உண்ணாவிரதம்!

உண்ணாமல் இருக்கின்றார் ஒருவர் இங்கே
உயிர்நாளும் ஊசலாட காண்பார் எங்கே?
மண்ணாள வந்தோரோ மாற மாட்டார்
மதுவிலக்கு கொண்டுவர திட்டம் தீட்டார்!
எண்ணாது எதற்காக விரதம் ஐயா
இருக்கின்றீர் கைவிட வேண்டும் ஐயா!
கண்ணான ஓருயிரும் போகும் முன்னே
கருணைவிழி திறக்காதா ? விளைவு என்னே!

கரம்குவித்து வேண்டுகிறோம் முடித்துக் கொள்வீர்
காந்தீய வாதிநீர் ! ஒருநாள் வெல்வீர்!
அறவழியில் போராட்டம் போதும் இதுவே
அண்ணல்வழி கொண்டீர்கள் ஒழியும் மதுவே!
தரமழிக்கும் குடிப்பழக்கம் ஒழியும் நாளே
தமிழ்நாட்டுத் தாய்குலமே வாழும் நாளே!
சிரம்தாழ்த்தி வேண்டுகிறேன் மீண்டும் மீண்டும்!
சிந்தித்து கைவிடவே வேண்டும் வேண்டும்!

புலவர் சா இராமாநுசம்

Friday, August 22, 2014

விண்முட்டும் பலமாடி அடுக்கே எங்கும்-நீண்ட வீதிகளின் இருமருங்கும் பெலிவாய் ஓங்கும்


குப்பையிலா நகரமது சிங்கை என்றே-முன்னர்
கூறுவதைக் நாம்மவரும் கேட்டோம் நன்றே
செப்பறிய அந்நிலையே சீனா எங்கும்-நான்
சென்றபோது கண்டேனே! மகிழ்ச்சி பொங்கும்
தப்பியொரு இடத்தினிலும் குப்பை யில்லை-அவர்
தனிமனித ஒழுக்கத்தில் கண்டார் எல்லை
தொப்பையிலா மக்கள்தான் அங்கே முற்றும் -காண
தோன்றுகின்றார் !கட்டான உடலைப் பெற்றும்

விண்முட்டும் பலமாடி அடுக்கே எங்கும்-நீண்ட
வீதிகளின் இருமருங்கும் பெலிவாய் ஓங்கும்
கண்முட்ட தேடினாலும் குடிசை ஒன்றும்-அங்கே
காணவில்லை! உண்மையிது! வாழ்க!! என்றும்
பண்பட்ட அவர்வாழ்வில் பகட்டு யில்லை- ஏழை
பணகாரப் பாகுபாடு பேதம் இல்லை
வெண்பட்டு மென்மையென சாலை விரியும் –மின்
விளக்குகளோ தங்கமென ஒளியில் எரியும்

புலவர் சா இராமாநுசம்

Wednesday, August 20, 2014

தேனாக இனித்ததே சுற்றுப் பயணம்-அடுத்து தெரிவிப்பேன் கட்டுரையில் விரிவாய் நன்றி!


புதுமைமிக சீனாவும் ஹாங்காங் மெக்கா-அதன்
போற்றமிகு முன்னேற்றம் காணத் தக்கா!
முதுமைமிகு வயதினிலே சுற்றி வந்தேன் -ஆனால்
முதுகுவலியும் கால்வலியும் பெற்று நொந்தேன்!
பதுமையென பாவையர்கள் எங்கும் வரவும்-நல்
பாட்டாளி மக்களவர் உழைப்பைத் தரவும்,
எதுவும்நிகர் இல்லையென வளர்ச்சி கண்டேன்-மேலும்
எல்லையில் மகிழ்ச்சிதனை என்னுள் கொண்டேன்!

சீனாவின் சிறப்புதனை கவிதை தன்னில்-இங்கே
செப்பிடவே இயலாதே! அறிய எண்ணில்!
போனால்தான் புரியுமெனல் மிகையோ! அல்ல!-எதிலும்
முன்னேற்றம்! முன்னேற்றம்! எதைநான் சொல்ல!
தானாக வரவில்லை! அந்த நிலையே!- மக்கள்
தந்திட்ட உழைப்பேதான் அதற்கு விலையே
தேனாக இனித்ததே சுற்றுப் பயணம்-அடுத்து
தெரிவிப்பேன் கட்டுரையில் விரிவாய் !நன்றி!

புலவர் சா இராமாநுசம்

Friday, August 15, 2014

நல்லோர் ஆள வரவேண்டும்-இந்த நாளில் வரமே தரவேண்டும்



பாருக் குள்ளே நம்நாடே-புகழ்
பாரதம்! உண்டா அதற்கீடே
ஊருக்கு ஊரே! கொடியேற்றி-இன்று
ஒருநாள் மட்டும் அதைப்போற்றி
பேருக்கு சுதந்திரத் திருநாளே-விழா
போற்றியே புகழ்ந்து மறுநாளே
யாருக்கும் நினைவில் வாராதே-இனி
என்றும் இந்நிலை மறாதே

வந்ததே சுதந்திரம் யாருக்காம்-நல்
வந்தே மாதரம் ஊருக்காம்
தந்தவன் சென்றான் ஆண்டுபல-அதை
தன்னல மிக்கோர் ஈண்டுசில
சொந்தமாய் தமக்கேப் போனதென-தினம்
செப்பும் நிலையே ஆனதென
நிந்தனை செய்து என்னபலன்-இந்த
நிலையை மாற்ற எவருமிலன்

வெள்ளையன் விட்டுச் சென்றாலும்-ஒரு
வேதனை தீர்ந்தது என்றாலும்
கொள்ளையர் சிலர்கை அகப்பட்டோ-நாளும்
கொடுமை அந்தோ மிகப்பட்டே
தொல்லைப் படுநிலை ஆயிற்றே-துன்பம்
தொடர்கதை யாகப் போயிற்றே
எல்லை மீறின் தன்னாலே-நாம்
இழப்போம் அனைத்தும் பின்னாலே


கொலையும் செய்ய சுதந்திரமே-பகல்
கொள்ளை அடிக்கவும் சுதந்திரமே
கள்ள வாணிகம் சுதந்திரமே-பொருள்
கலப்படம் செய்யவும் சுதந்திரமே
வெள்ளம் வருமுன் அணைபோட-தூய
விடுதலை நோக்கி நடைபோட
நல்லோர் ஆள வரவேண்டும்-இந்த
நாளில் வரமே தரவேண்டும்




சா  இராமாநுசம்
 

Monday, August 4, 2014

உன்னை வழிபட்டேன்! ஊர்சுற்ற புறப்பட்டேன்!



உன்னை வழிபட்டேன்! ஊர்சுற்ற புறப்பட்டேன்!

அப்பனே ஏழுமலை ஆண்டவ வணங்குகிறேன்!
தப்பென இதுவரை தவறியும்  செய்ததில்லை!
எப்பவும் என்னுடைய இதயத்தே வாழ்கின்ற
ஒப்பென ஒன்றில்லாய்! உன்னடி வணங்குகிறேன்!

தாங்கிட இயாலாத தளர்வெனக்கே வந்தாலும்
நீங்கிட வழிகாட்டும் நிமலனே வணங்குகிறேன்!
ஓங்கியே உலகளந்த உத்தம! உன்நாமம்
தாங்கியே திருவடி தலைவைத்தே வணங்குகிறேன்!

எண்ணிய எய்திட எனக்கருளும் செய்கின்ற
புண்ணிய பெருமாளே! போற்றியுனை வணங்குகிறேன்!
கண்ணிலே கருமணியாம் கண்ணனே காலமெலாம்
மண்ணிலே மறைந்தாலும் மறப்பேனா! வணங்குகிறேன்!

உன்னை வழிபட்டேன்! ஊர்சுற்ற புறப்பட்டேன்!
என்னைக் காத்தருள்வாய் ஏழுமலைப் பெருமாளே!
பொன்னை வேண்டியல்ல! பொருளை வேண்டியல்ல
அன்னை அலர்மேலு அருள்வேண்டி வணங்குகிறேன்!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...