Monday, January 30, 2012

இரத்தம் சிந்தாமல் தனிஈழம் மலர்ந்தே தீரும்!

                                                     அன்று

முத்துகுமார் இறந்த போது மனம் வருந்தி எழுதிய கவிதை 


       ஓயாத அழுகுரலே  ஈழ  மண்ணில்-தினம்
                ஒலிக்கின்ற நிலைகண்டு  அந்தோ  கண்ணில்
        காயாது  வந்ததன்று  கண்ணீர்  ஊற்றே-அதைக்
                 காணாமல் மறைத்ததந்தோ  தேர்தல் காற்றே
        சாயாத  மனத்திண்மை   கொண்டோர்  கூட-ஏனோ
                 சாயந்தார்கள்  பதவிக்கே  ஓட்டு  தேட
         வாயார  சொல்லுகின்ற கொடுமை  அன்றே-அது
                 வரலாற்றில்  என்றென்றும்   மறையா  ஒன்றே
 
         கொத்துமலர்  வீழ்வதுபோல்   வன்னிக்  காட்டில்-ஈழ
                  குடும்பங்கள்  வீழ்வதனைக்  கண்டு   ஏட்டில்
        முத்துகுமார்   முதலாக  பலரும்  இங்கே-தீ
                 மூட்டியவர்  உயிர்துறந்தும்  பலன்தான்  எங்கே
       செத்துவிழு   மவர்பிணத்தை  எடுத்துக்  காட்டி-ஓட்டு
                 சேகரிக்க  முயன்றாராம்  திட்டம்  தீட்டி
      எத்தர்களும்  ஐயகோ கொடுமை  அன்றோ-அது
                 எதிர்கால  வரலாற்றில்  மறையா   தன்றோ
  
         வீரத்தின்   விளைநிலமே  ஈழ  மண்ணே-மீண்டும்
                 வீறுகொண்டே  எழுவாய்நீ  அதிர  விண்ணே
        தீரத்தில்   மிக்கவராம்  ஈழ  மறவர்-எட்டு
                 திசையெங்கும்  உலகத்தில்  வலமே  வருவார்
        நேரத்தில்  அனைவருமே  ஒன்றாய்   கூடி-தாம்
      நினைத்தபடி   தனிஈழப்   பரணி  பாடி
கூறத்தான்  போகின்றார்   வாழ்க  என்றே-உள்ளம்
                   குமுறத்தான்  சிங்களவர்  வீழவார்  அன்றே

இரக்கமெனும்  குணமில்லார்   அரக்கர்   என்றே-கம்பர்
                 எழுதியநல்   பாட்டுக்கே  சான்றாய்   இன்றே
         அரக்கனவன்  இராசபக்சே  செய்யும்   ஆட்சி-உலகில்
                 அனைவருமே  அறிந்திட்ட  அவலக்   காட்சி
         உறக்கமின்றி  ஈழமக்கள்   உலகில்  எங்கும்-உள்ளம்
                 உருகியழ  வெள்ளமெனக்  கண்ணீர்  பொங்கும்
        தருக்கரவர்  சிங்களரின்  ஆட்சி  அழியும்-உரிய
                 தருணம்வரும்  தனிஈழம்  மலர்ந்தே   தீரும்

அழித்திட்டோம   தமிழர்களை  என்றே  கூறி-சிங்களர்
                    ஆலவட்ட   மாடினாலும்  அதையும்   மீறி
           கழித்திட்ட  காலமெல்லாம்  துன்பப்   படவும்-சில
                    கயவர்களாம்   நம்மவர்கை   காட்டி  விடவும்   
           விழித்திட்டார்  உலகுள்ள  ஈழ  மறவர்-அதன்
                     விளைவாக  அணிதிரள  விரைந்தே  வருவார்
             செழித்திட்ட  வளநாடாய்  ஈழம்  மாறும்-இரத்தம்
                     சிந்தாமல்  தனிஈழம்  மலர்ந்தே  தீரும்
               
                                                     புலவர் சா இராமாநுசம்

16 comments :

  1. மீண்டும் மறுமலர்ச்சி ஏற்படும் என நம்புவோம்

    ReplyDelete
  2. ஆழமான வரிகள் சோகமானதும் கூட.. என்ன செய்ய சர்வதேசம் பொருளாதார மயக்கத்தில் இருக்கிறது எதாவது லாபம் இருந்தால் மட்டுமே மனிதம் பேசி வருகிறது எல்லாம் பணமயம்.

    ReplyDelete
  3. இனிய காலை வணக்கம் ஐயா,
    இப்படி ஓர் வழி இலகுவில் கிடைக்காதா எனத் தான் ஒட்டு மொத்த தமிழ் உள்ளங்களும் ஏங்கிறது.

    எம் உணர்வை விருத்தக் கவியில் விருந்தாக்கிய புலவர் வேந்தே! தொடரட்டும் நும் பணி!

    ReplyDelete
  4. மாற்றம் என்பது உலகில் மாற்றமில்லாதது ...கண்டிப்பாக ஒரு நாள் நல்ல மாற்றம் வரும்...தங்கள் பாடல் வரிகளை வர்ணிக்க இயலவில்லை!

    ReplyDelete
  5. இரத்தம்
    சிந்தாமல் தனிஈழம் மலர்ந்தே தீரும்
    தங்கள் வரிகளைப்போல அருமை ஐயா

    ReplyDelete
  6. மாற்றம் வரவேண்டுமென்று விரும்புவோம். நினைவுக் கவியைப் பாராட்ட வார்த்தைகள் எதுவும் என்னிடம் இல்லை! மன நெகிழ்வுடன் கவிதை படைத்திட்ட தங்களுக்கு நன்றி நவில்கிறேன்!

    ReplyDelete
  7. நம்பிக்கை தருகின்ற கவிதை கண்டு
    நம் காயங்கள் தன்னாலே மெல்ல ஆறும். - நாம்
    சி்ந்தாத ரத்தமில்லை. கண்ணீரில்லை.
    அதற்கான விடை தானே இன்னுமில்லை.

    காலங்கள் தரப்போகும் தீர்ப்பில் தானே-எம்
    காயங்கள் ஆறிடும் இது உண்மை தானே.

    தீபிகா.

    ReplyDelete
  8. வணக்கம் ஐயா.
    அங்கு பிறந்த பலர் காட்டிக்கொடுக்கும்போது, தாங்கள் நல்ல நயமாக மக்களின் உணர்வுகளை பகிர்ந்துள்ளீர்கள்.
    நன்றி.

    எதற்குமே ஒரு முடிவிருக்கு அல்லவா?
    பார்ப்போம்.-நம்பிக்கையுடன்.

    ReplyDelete
  9. ஈழத்தமிழர்கள் நாங்கள் எப்போதுமே மறக்கமுடியாத ஒருவர்.இன்னும் மனங்களில் தீயை மூட்டியவர் !

    ReplyDelete
  10. இலக்கணத்தோடு பரணி பாடும் உங்கள் கவிதைக்கு
    எனது வந்தனங்கள்.

    ReplyDelete
  11. மீண்டும் மறுமலர்ச்சி ஏற்படும்...ஈழம் மலர்ந்தே தீரும்...

    ReplyDelete
  12. விரைவில் நல்ல மாற்றம் வர வேண்டும் ! நன்றி ஐயா !

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...