Saturday, January 26, 2013

ஆண்டுதோறும் திருவிழாபோல் வந்தே போகும் –குடி அரசுயென்னும் திருநாளின் நிலையே ஆகும்!




ஆண்டுதோறும்  திருவிழாபோல் வந்தே  போகும் குடி
   அரசுயென்னும்   திருநாளின்  நிலையே  ஆகும்!
ஈண்டுபல   இடங்களிலும்   கொடியே   ஏற்றி என்றும்
   ஈடில்லா தலைவர்கனின்  நினைவை  போற்றி!
மீண்டுமீண்டும்   நடக்கின்ற சடங்காம்  என்றே-இதன்
    மேன்மைதனை உணராதும் செய்வார்  இன்றே!
வேண்டியிதை  அந்நாளில்  செய்தார்  தியாகம் நாட்டு
    விடுதலைக்கே  உயிர்பலியே  தந்தோர்  ஏகம்!

தன்னலமே  ஏதுமின்றி  பாடும்  பட்டார் அடிமைத்
     தளைதன்னை  முற்றிலுமே  நீக்கி  விட்டார்!
என்னலமே  பெரிதென்பார்  கையில்  தானே நாடும்
    எள்ளுகின்ற  நிலைதானே,   அனைத்தும்  வீணே!
இன்னலதே   நாள்தோறும்   வாழ்வில் ஆக மேலும்
    ஏழைகளோ  ஏழைகளாய்  மடிந்தே  போக!
மன்னரென  ஆனார்கள்  சிலரும்  இங்கே  - உண்மை
    மக்களாட்சி  காணாது   போன  தெங்கே ?


ஒப்புக்கே  நடக்கும்விழா   நாட்டில்,  முற்றும்  - எடுத்து
      உரைத்தாலும்   உணர்வாரா ? மக்கள்   சற்றும்!
தப்புக்கே  தலையாட்டும்   தாழ்ந்த  மனமே  - குடியால்
     தள்ளாடும்   ஐயகோ  மனித   இனமே!
எப்பக்கம்  நோக்கினாலும்   அவலக்  காட்சி
     எதிர்கால  வளர்ச்சிக்கு   இதுவா  மாட்சி!
செப்பிக்க  குடியரசு   இதுதான்  போலும் விளக்கி
     செப்பிடவே இயலாத கொடுமை  நாளும்!

                                            புலவர்  சா  இராமாநுசம்

8 comments :

  1. ‘ஒப்புக்கே நடக்கும் விழா’ என்ற உங்கள் வரிகள் மூலம் எல்லோர் மனதிலும் உள்ள ஆதங்கத்தை சொல்லியுள்ளீர்கள். என்று இந்த நிலை மாறும் என்ற கவலையுடன், எனது குடியரசு நாள் வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  2. தப்புக்கே தலையாட்டும் தாழ்ந்த மனமே - குடியால்
    தள்ளாடும் ஐயகோ மனித இனமே!//
    அரசாங்கமே ஆணையிட்டு குடிக்க சொல்கிறது எதற்க்காக? யாருக்காக ?

    ReplyDelete
  3. ஒப்புக்கே நடக்கும் விழா... உண்மை தான்.

    ReplyDelete
  4. உண்மை தான் ஐயா... இது மற்றுமொரு விடுமுறை நாள் அவ்வளவே

    ReplyDelete
  5. ஒப்புக்கே நடக்கும்விழா நாட்டில், முற்றும் - எடுத்து
    உரைத்தாலும் உணர்வாரா ? மக்கள் சற்றும்!
    தப்புக்கே தலையாட்டும் தாழ்ந்த மனமே - குடியால்
    தள்ளாடும் ஐயகோ மனித இனமே!
    எப்பக்கம் நோக்கினாலும் அவலக் காட்சி
    எதிர்கால வளர்ச்சிக்கு இதுவா மாட்சி!
    செப்பிக்க குடியரசு இதுதான் போலும் – விளக்கி
    செப்பிடவே இயலாத கொடுமை நாளும்! // அருமையான சாட்டையடி வரிகள்! சிறப்பான கவிதை! நன்றி ஐயா!

    ReplyDelete
  6. ஒப்புக்கே நடக்கும்விழா நாட்டில், முற்றும் - எடுத்து
    உரைத்தாலும் உணர்வாரா ? மக்கள் சற்றும்!
    தப்புக்கே தலையாட்டும் தாழ்ந்த மனமே - குடியால்
    தள்ளாடும் ஐயகோ மனித இனமே!
    எப்பக்கம் நோக்கினாலும் அவலக் காட்சி
    எதிர்கால வளர்ச்சிக்கு இதுவா மாட்சி!
    செப்பிக்க குடியரசு இதுதான் போலும் – விளக்கி
    செப்பிடவே இயலாத கொடுமை நாளும்!

    உண்மை ! முற்றிலும் உண்மைதான் ஐயா .மக்களுக்கே
    இன்பம் அளிக்காத ஒரு விழா அது எதற்கு !...போலித்தனங்கள்
    முதலில் ஒழிய வேண்டும் .அருமையான இக் கவிதையை வடித்த
    தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் .வாழ்க பாரதம் .

    ReplyDelete
  7. இப்ப எங்கும் ’குடி ’ஆட்சி

    ReplyDelete
  8. குடியரைற்கும் விடுதலை நாளுக்கும் வித்தியாசம் தெரியாத அரசியல் வாதிகளும் உண்டு.நல்ல கவிதை அய்யா!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...