Friday, July 12, 2013

வேண்டாம் வெளிச்சம் என்கின்றேன் !


வேண்டாம் வெளிச்சம் எதனாலே-நெஞ்சு
வேதனைப் படுமாம் அதனாலே
இங்கே

இயற்கை படைத்த ஓவியமே
இந்த உலகமென்ற காவியமே
செயறகை என்னும் ஆயுதமே
சிதைக்க நாளும் பாயுதம்மே
இயற்கை அழிய அழியத்தான்
இன்னல் பல்வகை வழியத்தான்
செயற்கை செய்யும் சீரழிவை
செப்பியும் கேளா பேரழிவை
பார்க்க
வேண்டாம் வெளிச்சம் என்கின்றேன்

யாதும் ஊரே என்றானே
யாவரும் கேளீர் என்றானே
தீதும் நன்றும் பிறராலே
தேடி வாரா தென்றானே
சாதிச் சண்டை ஊரெங்கும்
சமயச் சண்டை உலகெங்கும
மோதிப் பார்க்க பலநாடும்
முடிவில் விளைவே சுடுகாடாம்
பார்க்க
வேண்டாம் வெளிச்சம் என்கின்றேன்

பற்று பாசம் எல்லாமே
பறக்க நெஞ்சில் இல்லாமே
சுற்றம் தாங்கும் நிலையுண்டா
சொன்னால ஆட்டும் தலையுண்டா
குற்றம் காண்பதே குணமாக
கொலையும் இங்கே கலையாக
பெற்றோம் நாமே பெரும்பேறும்
பேச்சும் செயலும் வெவ்வேறும்
பார்க்க
வேண்டாம் வெளிச்சம் என்கின்றேன்

இன்னும் சொல்ல பலவுண்டே
எழுதவும் இங்கே இடமுண்டே
பன்னும் பாவம் தெரியாமல்
பாதை எதுவென அறியாமல்
மின்னும் மின்னல் மேகத்தில்
மறைய அதுபோல் லோகத்தில்
பின்னும் எழுத மனமின்றி
பிரிந்தேன் நானும் மிகநன்றி

புலவர் சா இராமாநுசம்

6 comments :

  1. இயற்கை அழிய அழியத்தான்
    இன்னல் பல்வகை வழியத்தான் //உண்மைதான் அய்யா

    ReplyDelete
  2. // தீதும் நன்றும் பிறராலே
    தேடி வாரா தென்றானே... //

    பல வரிகள் உண்மை ஐயா...

    ReplyDelete
  3. மிக மிக எளிய நடை.. புலவர் குரலில் உலகின் தற்போதைய கேடுகெட்ட நிலைமையை எழுதி இருக்கீங்க... வேண்டாம் வெளிச்சம் என்பட்தை விட இதையெல்லாம் எதிர்க்க வேண்டும் வலிமை என்று கேட்கிறேன்

    ReplyDelete
  4. பற்று பாசம் எல்லாமே
    பறக்க நெஞ்சில் இல்லாமே
    சுற்றம் தாங்கும் நிலையுண்டா
    சொன்னால ஆட்டும் தலையுண்டா
    குற்றம் காண்பதே குணமாக
    கொலையும் இங்கே கலையாக
    பெற்றோம் நாமே பெரும்பேறும்
    பேச்சும் செயலும் வெவ்வேறும்
    பார்க்க
    வேண்டாம் வெளிச்சம் என்கின்றேன்



    ----------


    அருமையான கவிதை ஐயா....

    ReplyDelete
  5. யாதும் ஊரே என்றானே
    யாவரும் கேளீர் என்றானே

    இதனை உணர்ந்தால் வாழ்வில் துன்பம் ஏது, துயரம் ஏது? நன்றி அய்யா

    ReplyDelete
  6. வெளிச்சமிருந்தும் கண்ணை மூடிக்கொண்டிருப்பார் மத்தியில் காணும் வேதனையை ஆதங்கத்துடன் மொழிந்திடவும் அநியாயங்களை வெளிச்சம் போட்டுக்காட்டவும் வேண்டும் வெளிச்சம் தங்களைப் போன்ற அறிஞர்தமக்கு. அருமையானக் கவிபடைத்தீர் ஐயா.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...