சூழும் இடர்தன்னை சுடர்கண்ட பனியாக்கும்
     ஏழுமலை  யானே  எனையாளும்  பெருமாளே
வாழும்  நாளெல்லாம்  உனைவணங்கி  நான்வாழ
     பாழும்  மனந்தன்னை  பதப்படுத்த  வேண்டுகிறேன்
அன்னை  அலர்மேலு  அகிலாண்ட  நாயகியே
     பொன்னை  வேண்டியல்ல  பொருளை  வேண்டியல்ல
உன்னை  வணங்குதற்கே  உயிர்வாழ  விரும்புகின்றேன்
     என்னை  ஆட்கொள்வாய்  எனையாளும்  தாயேநீ
பஞ்சுப்  பொதிபோல  பரவி  வருகின்ற
     மஞ்சு  தவழ்ஏழு  மலையானே  கோவிந்தா
தஞ்சம்  நீயென்றே  தலைவணங்கும்  என்போன்றார்
     நெஞ்சில்  நீங்காது  நிலைத்திருக்க  வேண்டுகிறேன்
வாழிவாழி  யென  வானோர்கள்  கூத்தாட
     ஆழிகடைந்  தமுது  அளித்தவனே  மங்கையர்கள்
தாழிகடைந்  தெடுத்த  தயிர்வெண்ணை  திருடியவர்
      தோழி  பலர்துரத்த  தொடர்ந்தோடி  ஒளிந்தவனே
தத்தம்  குறையெல்லாம்  தடையின்றி  நீங்குமென
     நித்தம்  உனைநாடி  நீள்வரிசை  தனில்நின்று
சித்தம்  மகிழ்வுடனே  செப்புகின்ற  கோவிந்தா
     சத்தம்  உன்செவியில்  சங்கொலியாய்  கேட்கிறதா
வெண்ணை  உண்டவாய்  விரிய  வியனுலகு
     தன்னைக்  கண்டதாய்  தடுமாறி  மகிழ்ந்தாட
மண்ணை  அளந்தவனே  மாபலியின்  தலையோடு
     விண்ணை  அளந்தவனே  விமலனே  வணங்குகிறேன்
மலையில்  வாழ்பவனே  மலையை  நீதூக்கி
     தலையின்  மேல்வைத்தே  ஆவினத்தை  காத்தவனே
அலையில்  கடல்மீது  ஆனந்தப்  பள்ளியென
     இலையில்  துயின்றவனே  இறைவாநான்  தொழுகின்றேன்
ஆதிமூல  மென்ற  அபயக்குரல்  வந்துன்
     காதில்  விழச்சென்று  காத்தவனே  கோவிந்தா
வீதிதனில்  வருவாய்  வீழ்ந்து  வணங்கிடுவார்
     தீதுதனை  முற்றும்  தீர்த்திடுவாய்  கோவிந்தா
எங்கும் உன்நாமம் எதிலும் உன் நாமம்
     பொங்கும்  உணர்வெல்லாம்  போற்றும்  திருநாமம்
தங்கும்  மனதினிலே  தடையின்றி  உன்நாமம்
     பங்கம்  அடையாமல்  பாஞ்சாலி  காத்ததன்றோ
அம்மை  அலர்மேலு  அப்பன்  திருமலையான்
     தம்மை  நாள்தோறும்  தவறாமல்  வணங்கிவரின்
இம்மை  மறுமையென  எழுபிறவி  எடுத்தாலும்
     உம்மை  மறந்தென்றும்  உயிர்வாழ  இயலாதே
 பாடி  முடித்திவிட  பரந்தாமா  உன்அருளை
     நாடி  வருகின்றேன்  நாயகனே  வேங்கடவ
 தேடி  வருவார்கு  திருமலையில்  உனைக்காண
     கோடிக்  கண்வேண்டும்  கொடுப்பாயா  பரந்தாமா
 முற்றும்  உன்புகழை  முறையாக  நான்பாட
     கற்றும்  பல்லாண்டு  காணாது  தவிக்கின்றேன்
 பற்றும்  அற்றவரும்  படைக்கின்ற  பிரம்மாவும்
     சற்றும்  அறியாருன்  திருவடியும்  திருமுடியும்
 வேதத்தின்  வித்தேயுன்  விளையாட்டை  யாரறிவார்
     நாதத்தின்  சத்தேயுன்  நாடகத்தை  யாரறிவார்
 பேதத்தை  கொண்டவுள்ளம்  பெருமாளே  என்போன்றார்
     சோகத்தை  நீக்குமென  சொல்லியிதை  முடிக்கின்றேன்
  தாங்கும்  நிலையில்லா  தடைபலவே  வந்தாலும்
      நீங்கும்  படிசெய்யும்  நிமலனே  நாள்தோறும்
  தூங்கும்  முன்வணங்கி  தூங்கி  எழவணங்கும்
      வேங்கி  தாசன்நான்  விடுக்கின்ற  விண்ணப்பம்  
  செல்லும்  திசைமாறி  சென்றுவிடும்  கப்பலென 
      அல்லும்  பகலுமென்  அலைகின்ற  உள்ளத்தை
  கொல்லும்  அரவின்மேல்  கொலுவிருக்கும்  கோவிந்தா
      ஒல்லும்  வழியெல்லாம்  உனைவணங்கச்  செய்திடுவாய்!
    ( விண்ணில்  வாழும், என் துணைவியின் விருப்பதிற்கேற்ப
மண்ணில்  வாழும் நான்  அன்று பாடியது! இன்று, புரட்டாசி மூன்றாம்  சனி! அவள் , காண ....... மீண்டும் வருகிறது!  காண்பாளா......!?   )
புலவர் சா இராமாநுசம்


செல்லும் திசைமாறி சென்றுவிடும் கப்பலென அல்லும் பகலுமென் அலைகின்ற உங்கள் உள்ளத்தை வேங்கடவன் ஆற்றுப்படுத்த வேண்டுகிறேன்!
ReplyDeleteபொன்னை வேண்டியல்ல பொருளை வேண்டியல்ல
ReplyDeleteஉன்னை வணங்குதற்கே உயிர்வாழ விரும்புகின்றேன்
என்னை ஆட்கொள்வாய் எனையாளும் தாயேநீ.
எத்தனை முறை படித்தாலும் தங்கள் துணைவியாரின் முகம் தான் நினைவுக்கு வருகிறது. நெகிழச்செய்த வரிகள் ஐயா.
மிக்க நன்றி!
Deleteஇன்று, புரட்டாசி மூன்றாம் சனி! அவள் , காண ....... மீண்டும் வருகிறது! காண்பாளா..//ஆம்.மனம்மகிழ்ந்து இருப்பார்கள் மறுபடியும் உங்களுக்கு மனைவியாகப் பிறப்பார்கள்
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
மலையில் வாழ்பவனே மலையை நீதூக்கி
தலையின் மேல்வைத்தே ஆவினத்தை காத்தவனே
அலையில் கடல்மீது ஆனந்தப் பள்ளியென
இலையில் துயின்றவனே இறைவாநான் தொழுகின்றேன்
வரிகள் அருமை வாழ்த்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி!
Deleteஅனைத்து வரிகளுகே அருமை ஐயா...
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஐயா.. அத்தனையும் அழகிய வரிகள்! உங்கள் கவிதையிலே உள்ள எளியநடை மிக மிக அருமை ஐயா!
ReplyDeleteஅற்புதமான வரிகள் அனைத்தும்!
//செல்லும் திசைமாறி சென்றுவிடும் கப்பலென
அல்லும் பகலுமென் அலைகின்ற உள்ளத்தை
கொல்லும் அரவின்மேல் கொலுவிருக்கும் கோவிந்தா
ஒல்லும் வழியெல்லாம் உனைவணங்கச் செய்திடுவாய்!//
என் வேண்டுதலும் இதுதான் ஐயா!
பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும்!
உங்கள் துணைவியார் உங்கள் இதயத்திலேயே இருப்பதால் நிச்சயம் இதைக் காண்பார்.
ReplyDeleteஅற்புதமான கவிதை
ReplyDeleteமீண்டும் மீண்டும் படித்துச் சொல் நயத்திலும்
பொருட்சுவையிலும் மிக்க மகிழ்வு கொண்டேன்
சிறப்புப் பதிவு வெகு வெகு சிறப்பு
பகிர்வுக்கு மிக்க நன்றி
tha.ma 4
ReplyDeleteஈங்குநான் இன்றேதான் இன்கவி கண்ணுற்றேன்
ReplyDeleteவேங்கடவன் துதிகண்டு வியர்க்கிறது விழியிரண்டும்
பாங்குடனே பகன்றவிதம் பரிபூரண மானதையா
ஏங்கும் மனமிறக்கி என்றும் மகிழ்ந்திடுவீர்...!
அழகிய கவிதை இயல்பான சொற்கள்
அத்தனையும் அருமை
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நெஞ்சை நெகிழச் செய்யும் வரிகள் ஐயா.
ReplyDelete