Wednesday, February 26, 2014

நான், படித்த நாளில் வடித்த கவிதை- எண் 1



புலவர் கல்லூரியில் அகப்பொருள் இலக்கண வகுப்பில் தலைவி
பிரிவிடை ஆற்றா நிலையில் வருந்தி எழுதியதாக நான், படித்த நாளில் வடித்த
கவிதை- எண் 1 புலவர் சா இராமாநுசம்

நானில்லை நீயெனக் கில்லை என்றால்-மேலும்
நலிந்துவிடும் நம்வாழ்வே பிரிந்துச் சென்றால்!
வீணில்லை என்வார்த்தை நம்பு என்றீர்-என்
வேதனையைக் குறைத்தேதான் நீரும் சென்றீர்!
ஏனில்லை சென்றபின்னர் அத்தான் நெஞ்சில்-அந்த
எண்ணம்தான் தினம்வாட்ட அறியேன் துஞ்சல்!
தேனில்லை என்றுமலர் பலவே நாளும்-தேடித்
திரிகின்ற வண்டெனவே ஆனீர் போலும்!

தாக்கவரும் புலிகூட பெண்ணைக் கண்டே-சற்று
தயங்குமெனச் சொல்லுகின்ற கதைகள் உண்டே!
காக்கவொரு ஆளில்லை பெண்ணை என்றால் – அவர்
கற்பென்ன கடைச்சரக்கா? தெருவில் சென்றால்!
நோக்குகின்ற தன்மையெல்லாம் பழுதே அத்தான்-அதை
நோக்கிபல நாள்முழுதும் அழுதேன் அத்தான்!
ஆக்கிவைத்த சோறாக இந்த ஊரே-என்னை
அள்ளிஉண்ண பார்க்கிறது வருவீர் நீரே!

காய்த்தமரம் காவலின்றி தனியாய் ஊரில் –நிற்க
கண்டவரின் கல்லடியை பெறுமே பாரில்!
வாய்தவனும் பிரிந்திருக்க, ஏழை ஆனால்-அவள்
வாழவழி இல்லையது சொல்லப் போனால்!
தேய்த்தெடுத்த சந்தணத்தை தெருவில் வீச-பின்
தேடிவந்து எடுப்பீரா மார்பில் பூச!
மாய்த்துவிடும் நெடும்பிரிவே என்னை உலகில்-இதை
மறவாதீர் மணவாளா துயரம் அலகில்!

பழுத்தபழம் எத்தனைநாள் வைத்தே அத்தான்-நல்ல,
பக்குவமாய் பாதுகாக்க முடியும் அத்தான்!
புழுத்ததென பின்னரதைக் கண்டு வீணே-நீர்
புலம்புவதில் பயனில்லை அதனால் நானே!
கழுத்துவரை நீர்ரலையில் நின்று விட்டேன்-அடுத்த
கணமென்ன அறியீரா நம்பிக் கெட்டேன்!
அழுத்துவதும் என்தலையே நீரில் நீரும்-உடன்
அரைக்கணமும் நில்லாது விரைந்தே வாரும்

புலவர் சா இராமாநுசம்

12 comments :

  1. வாழ்வது எதற்கு ,வாழ்க்கையில் சுகங்களைப் பெறத்தானே என்று தலைவி இதைவிடவா தலைவனுக்கு புரிய வைக்க முடியும் ?கையறு நிலை என்பது இதுதானோ ,அய்யா ?
    த ம 1

    ReplyDelete
  2. தலைவியின் பிரிவாற்றாமையை அருமையாகச் சொல்லும் கவிதை!

    ReplyDelete
  3. தலைவி எவ்வளவு அழகாக அருமையாக அழைக்கிறார்கள்... ரசிக்க வைக்கும் கவிதை ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. குறுந்தொகைக்குள் நுழைந்தது போன்ற உணர்வு...

    ReplyDelete
  5. புலவர் ஐயா.... இது உங்களின் மனைவி கல்லுர்ரியில் படிக்கும் பொழுது எழுதிய கவிதை தானே....?

    பெண்ணின் உணர்வுகளைப் புட்டு புட்டு வைத்துவிட்டீர்கள்.
    அருமையான கவிதை.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அருணா! அவள் மருத்துவக் கல்லூரி! நான் புலவர் கல்லூரி!

      Delete
  6. ரசிக்க வைக்கும் கவிதை ஐயா
    நன்றி

    ReplyDelete
  7. ஒவ்வொரு வரிகளும் அற்புதமாக இணைந்திருக்கும் இக்
    கவிதை வரிகளைக் கண்டு வியந்தேன் ஐயா !

    ReplyDelete
  8. தலைவியின் துயர் சொல்லும் அருமையான ஆக்கம்......

    படித்து ரசித்தேன் புலவர் ஐயா.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...