Thursday, October 30, 2014

இனிய உறவுகளே! வணக்கம்!



     இனிய  உறவுகளே!  வணக்கம்!

                 தம்பி முத்துநிலவன் அவர்கள்  தன் வலையில், முகநூல்  பதிவுலகை
அழிக்கிறதா  என்ற  தலைப்பில்  ஓர்  ஆய்வுக்  கட்டுரை  எழுதியுள்ளார். அவருக்கு என் வாழ்த்துகள்!  அவர் கேள்வி சரியானதே! முடிவில் அவர்  கொண்ட அச்சத்திற்கு, உரிய  முடிவும்(பதிலும்)அவரே , கூறியுள்ளது, மிகவும் நன்று!
           
              என்னுடைய  கருத்தும்  அதுவே!  கடந்த  திங்கள்  நானும் , என்னுடைய
மனதில் தோன்றிய அச்சத்தின்  காரணமாக ஒரு  கவிதையை( என்வலையில்)
எழுதி, என்  ஆதங்கத்தை அதில்  வெளிப்படுத்தியுள்ளேன்  பலரும், ( குறிப்பாக பதிவர்கள்) படிக்க  வேண்டும் என்பதற்காக, அக்கவிதையை , மீள் பதிவாக
மீண்டும் இங்கே வெளியிடுகிறேன்!

வலையில் பலபேர் எழுதவில்லை –அவரே,
வாராக் காரணம் தெரியவில்லை!-தாமரை,
இலையில் நீரென வருகின்றார்!- பதிவும்
இருப்பதாய் ஒப்புக்கு தருகின்றார்!- சிலர்
நிலையில் மாற்றம் நன்றல்ல!-காலம்
நிலையில் ! அறிவோம்! இன்றல்ல!-எனினும்,
வலையில் எழுதியே வளர்ந்தோமே !–அதை
வளர்த்திடும் பணியில் தளர்ந்தோமே!



நன்றி மறப்பது நன்றல்ல-நமக்கே
நவின்றது வள்ளுவன் இன்றல்ல!-முகநூல்
சென்றது  ஏதும் தவறல்ல-கருத்தைச்
செப்பிட அதுவும் வேறல்ல!-ஆனால்
நின்றது வலைவழி வருவதுமே-என
நினைத்திட, பதிவிதும் தருவதுமே!-கடன்
என்றதே என்னுள் மனசாட்சி-அதனால்
எழுதினேன்! வந்திடல், மிகமாட்சி!

புலவர் சா இராமாநுசம்

19 comments :

  1. அருமையான கவிதை ஐயா. படித்து ரசித்தேன். முக நூலில் வருட கணக்கில் குப்பை கொட்டிக்கொண்டு இருந்தவன் தான் நான். சில மாதங்களுக்கு முன் நன்றாக பதிவு எழுதும் என் நண்பன் அல்ப்ரெட் (பரதேசி அட் நியூ யார்க் என்ற பெயரில் எழுதி வருகின்றார்) என்னிடம் நீ பதிவு எழுத வந்தே ஆக வேண்டும் என்று அன்பு கட்டளையிட .. அவருக்காக என்று நுழைந்தேன். மூன்று மாதத்தில் 200 பதிவுகள் இட்டுவிட்டேன். ஒவ்வொரு பதிவிலும் ஒரு மகிழ்ச்சி. இது முக நூலில் கிட்ட வில்லை. தற்போது முகநூலில் என்னை காணவில்லை என்ற நிலைமையே வந்து விட்டது. ரசித்து ருசித்து நம் எழுதும் ஒரு எழுத்தை உலகின் எங்கே ஒரு மூலையில் நமக்கு அறிமுகமில்லாத நபர் ஒருவர்.. சபாஷ்.. ரசித்தேன் .. சிரித்தேன் என்று சொல்லும் போது... நம் பெற்ற பிள்ளைகளை மற்றவர்கள் பாராட்டுவதை போல் ஓர் நினைப்பு. நண்பர் அல்ப்றேத்க்கு கோடி புண்ணியம், என்னை இங்கு அழைத்து வந்ததற்கு. தங்கள் தளத்திற்கு தொடர்ந்து வருவேன்.

    ReplyDelete
  2. உண்மை நிலை இது தான். அனைவரும் உணர்நதால் சரி.

    ReplyDelete
  3. மிக்க நன்றி! நண்பரே!

    ReplyDelete
  4. மிக்க நன்றி! மகளே!

    ReplyDelete
  5. நிறைய நல்ல வலைப்பதிவர்கள் சுத்தமாக ஒதுங்கி விட்டார்கள். உதாரணமாக 'பாமரன் பக்கங்கள்' வாசு பாலாஜி.

    'எங்களை'ப் பொறுத்தவரை நன்றாக இருக்கிறதோ இல்லையோ... இடைவெளி விடாமல் எழுதிக் கொண்டுதான் இருக்கிறோம்! :))))

    ReplyDelete
  6. அய்யா ,நீங்கள் அன்று சொன்னது அர்த்தமுள்ளது என்று சகோ .முத்து நிலவன் பதிவில் இருந்து நிரூபணமாகியுள்ளது !
    த ம 4

    ReplyDelete
  7. தங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன் அய்யா

    ReplyDelete
  8. அருமையானக் கருத்து ஐயா ! ஆம் நிறையப் பேர் முக நூலில் தான் இருக்கின்றனர். நாங்கள் வலையில் தான் சிக்கி உள்ளோம். நண்பர்கள் விசுவும் ஸ்ரீராமும் சொல்வதை வழி மொழிகின்றோம் ஐயா!

    ReplyDelete

  9. அய்யா இந்த வரிகள் என்னைத் தாக்குவது போல் இருக்கிறதே ஆனால் நான் முகநூலுக்கு செல்லவில்லை. வேலைப்பளுவும் நேரமின்மையுமே காரணம். தயவு செய்து மன்னித்தருளுங்கள்.

    ReplyDelete

  10. வணக்கம்!

    தமிழ்மணம் 6

    முகநுால் குறித்து மொழிந்திட்ட பாடல்
    புகுமே மனத்துள் பொலிந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  11. வணக்கம் !

    அருமையான நற் கருத்து !இதை அனைவரும் உணர்தல் வேண்டுமிங்கே !பகிர்வுக்கு நன்றி ஐயா .

    ReplyDelete
  12. நான் கூட வலைப்பூ பக்கம் வருவது குறைந்து வருகிறது ஐயா... இனி வருவேன்...

    ReplyDelete
  13. இன்றைய நிலையைப் படம்பிடித்த கவிதை

    ReplyDelete
  14. வணக்கம் ஐயா...

    வலையில் மீன்பிடிக்கா முக அலையில் சிக்கியிருந்தேன்
    நிலையை அறிந்து கொண்டு நீரோட்டம் தேடி வந்தேன் ... இனி வலையிலே முழு கவனமும் சிந்தனை சிதராது படகோட்ட பயணப்பட்டேன்...

    ReplyDelete
  15. இன்றைய நிதர்சன கவிதை அருமை ஐயா நானும் இப்போது கொஞ்சம் முகநூலில் ஈ ஓட்டுகின்றேன்.ஹீ வலையில் தொடர்வேன் ஐயா இங்குதான் நம் கருத்துக்கு அதிக மரியாதை.

    ReplyDelete
  16. பலர் இப்படி முகப்புத்தகத்தில் மூழ்கி விட்டார்கள்.....

    மீண்டும் வரட்டும்..... மீண்டு வரட்டும்....


    ReplyDelete
  17. உண்மைதான் ஐயா
    கவலைக்கு உரிய விசயம்தான்
    வலைப் பதிவர்கள் இக்கருத்தினை உணர்ந்து
    வலைப் பக்கம் வருகை தந்து வலையினைப் போற்ற வேண்டும்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...