Showing posts with label கவிதை புனைவு விளக்கம். Show all posts
Showing posts with label கவிதை புனைவு விளக்கம். Show all posts

Thursday, October 30, 2014

இனிய உறவுகளே! வணக்கம்!



     இனிய  உறவுகளே!  வணக்கம்!

                 தம்பி முத்துநிலவன் அவர்கள்  தன் வலையில், முகநூல்  பதிவுலகை
அழிக்கிறதா  என்ற  தலைப்பில்  ஓர்  ஆய்வுக்  கட்டுரை  எழுதியுள்ளார். அவருக்கு என் வாழ்த்துகள்!  அவர் கேள்வி சரியானதே! முடிவில் அவர்  கொண்ட அச்சத்திற்கு, உரிய  முடிவும்(பதிலும்)அவரே , கூறியுள்ளது, மிகவும் நன்று!
           
              என்னுடைய  கருத்தும்  அதுவே!  கடந்த  திங்கள்  நானும் , என்னுடைய
மனதில் தோன்றிய அச்சத்தின்  காரணமாக ஒரு  கவிதையை( என்வலையில்)
எழுதி, என்  ஆதங்கத்தை அதில்  வெளிப்படுத்தியுள்ளேன்  பலரும், ( குறிப்பாக பதிவர்கள்) படிக்க  வேண்டும் என்பதற்காக, அக்கவிதையை , மீள் பதிவாக
மீண்டும் இங்கே வெளியிடுகிறேன்!

வலையில் பலபேர் எழுதவில்லை –அவரே,
வாராக் காரணம் தெரியவில்லை!-தாமரை,
இலையில் நீரென வருகின்றார்!- பதிவும்
இருப்பதாய் ஒப்புக்கு தருகின்றார்!- சிலர்
நிலையில் மாற்றம் நன்றல்ல!-காலம்
நிலையில் ! அறிவோம்! இன்றல்ல!-எனினும்,
வலையில் எழுதியே வளர்ந்தோமே !–அதை
வளர்த்திடும் பணியில் தளர்ந்தோமே!



நன்றி மறப்பது நன்றல்ல-நமக்கே
நவின்றது வள்ளுவன் இன்றல்ல!-முகநூல்
சென்றது  ஏதும் தவறல்ல-கருத்தைச்
செப்பிட அதுவும் வேறல்ல!-ஆனால்
நின்றது வலைவழி வருவதுமே-என
நினைத்திட, பதிவிதும் தருவதுமே!-கடன்
என்றதே என்னுள் மனசாட்சி-அதனால்
எழுதினேன்! வந்திடல், மிகமாட்சி!

புலவர் சா இராமாநுசம்

Thursday, May 3, 2012

பிழையெனில் பொறுத்திடுக! ஈழம் வெல்ல!



உண்மையான எண்ணமுடன் கேட்க வேண்டும்-ஈழம்
    ஓட்டுக்கே கேட்பவரை ஒதுக்க வேண்டும்!
வெண்மைமிகு உள்ளமுடன் செயலும் வேண்டும்-மிக
     வேகமுடன் அதற்காக முயல வேண்டும்!

வெம்பித்தான் கிடக்கின்றார் ஈழக் குடிகள்-அவர்
    வேதனைக்கு வைக்காதீர் மேலும் வெடிகள்!
நம்பிக்கை வரும்படியாய் செயலும் வேண்டும்-எனில்
     நாடகமா..?என்றேதான் சொல்வார் மீண்டும்!

அடிபட்டார் திட்டுவதும் இயல்பு தானே-இதை
    அரசியலாய் ஆக்கினால் அனைத்தும் வீணே!
கொடிகட்டி ஆள்வதற்கே ஈழம் என்றே-எவர்
    குரல்கொடுக்க வந்தாலும் ஒழிப்போம் நன்றே!

உலகத்து நாடுகளின் கவனம் நன்றே-ஈழம்
   உருவாக ஏற்றதொரு சூழல் இன்றே!
திலகம்போல் தெளிவாக மிளிரக் கண்டோம்-வெற்றி
    தேவதையும்  தேடிவர வழிதான்! விண்டோம்!

ஒட்டுமொத்த தமிழகமே ஒன்றாய் சேரின்-மேலும்
    உலகத்து தமிழர்களும் ஓங்கக் கூறின்
கிட்டிவிடும் ஈழம்தான் ஐயம் இல்லை!-படு
    கிழவன்நான் சொல்வது பொய்யா? இல்லை!

எதிர்காலம் கயவர்களை காட்டி விடுமே-அந்த
    எத்தர்களின் வாழ்வு மேலும் கெடுமே!
புதிரல்ல! புரிந்துவிடும் காலம் செல்ல-இது
    பிழையெனில் பொறுத்திடுக! ஈழம் வெல்ல!

                         புலவர் சா இராமாநுசம்
  



இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...