Friday, August 28, 2015

எழுத்ததை அறிவிப்பான் இறைவனாம் என்றே-நீரும் எண்ணியே ஆசிரியர் பணிசெய்ய நன்றே!


எழுத்ததை அறிவிப்பான் இறைவனாம் என்றே-நீரும்
எண்ணியே ஆசிரியர் பணிசெய்ய நன்றே!
அழுத்தமாய் பசுமரத் தாணியைப் போன்றே-நாளும்
ஆற்றிட வந்தீராம் சேவையாம் இன்றே!
செழித்திட உலகது வேண்டுதல் நன்றே-எனது
சிரம்தாழக் கரம்கூப்பி செப்புதல் ஒன்றே!
அழியாது இயற்கையைக் காப்பீரா மென்றே-வகுப்பு
அறைதனில் மாணவர் முன்னாலே நின்றே!


பருவங்கள் மாறிட உலகமே மாறும்-இதையே
படிக்கின்ற மணவர் உணரவே கூறும்!
வருங்கால உலகமே அன்னாரின் கையில்-அதையே
வகுப்பது வகுப்பறை அறிவீரா பொய்யில்!
தருகின்ற அழிவிற்கு ஜப்பானே சாட்சி-முன்னர்
தமிழ்நாடு கண்டதும் அழியாத காட்சி!
திருமிகு இப்பணி செய்திடின் நீரும்-நல்ல
திருப்பணி யாகவே மலர்ந்திடும் பாரும்!

பலவாறு பருவங்கள் மாறிட யிங்கே-தினமே
பார்கின்றோம் யார்செய்த தவறுதான் எங்கே?
நிலமகள் நடுங்கியே குலுங்கிட அந்தோ-தமது
நெடும்வாயே திறந்துயிர் விழுங்கிட தந்தோம்!
அலையாக பேராழி புகுந்திட உள்ளே-உலகு
அழிகின்ற காட்சிகள் திரையது சொல்ல!
விலையாக அழிப்பதோ நாள்தோறும் தன்னை-மேலும்
விடுவாளா எண்ணுங்கள் இயற்கையாம் அன்னை!

சுற்றும் சூழலும் கெட்டேதான் போச்சே-தினமே
சுற்றிடும் உலகெங்கும் மாசாக ஆச்சே!
கற்றும் பாடமே தெளியவே இல்லை-என்ன
காரணம் யாருக்கும் புரியவே இல்லை!
பெற்றவள் இயற்கையாம் அன்னையைக் காத்தே-என்றும்
பேணுவோம் உலகென்னும் நம்பெரும் சொத்தே!
மற்றெவர் போனாலும் மாணவர் சேவை–உலக
மக்களின் வாழ்வுக்குச் செய்திடும் சேவை!

புலவர் சா இராமாநுசம்

19 comments :

  1. திருமிகு இப்பணி செய்திடின் நீரும்-நல்ல
    திருப்பணி யாகவே மலர்ந்திடும் பாரும்!
    நற்கருத்தை சொன்ன வரிகள் ஐயா.

    ReplyDelete
  2. அவசியான கருத்தை அருமையான கவியாகச்
    சொல்லிச் சென்றவிதம் மனம் கவர்ந்தது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அருமையான ஆக்கம் ஐயா நலமா ?
    தமிழ் மணம் 3

    ReplyDelete
  4. சுற்றும் சூழலும் கெட்டேதான் போச்சே-தினமே
    சுற்றிடும் உலகெங்கும் மாசாக ஆச்சே!
    கற்றும் பாடமே தெளியவே இல்லையே....அய்யா...

    ReplyDelete
  5. இயற்கை அன்னைக்கோர் ஆராதணை!
    அழகு ஒளி இருளை நீக்கட்டும்.
    அருமை அய்யா!
    தமிழ் மணம் 6
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  6. ஆழ்ந்த பொருளுடன் அருமையான கவிதை ஐயா!
    வாழ்த்துக்கள்!

    த ம. 7

    ReplyDelete
  7. ஆசிரியர்களின் சிறப்புகள், அருமையாக கவிதையில்!

    நன்று!

    ReplyDelete
  8. வகுப்பது வகுப்பறை அறிவீரா ....காரணப் பெயர் அறிந்தேன் அய்யா :)

    ReplyDelete
  9. அருமையான கவிதை ஐயா.

    ReplyDelete
  10. மாணவர்களின் பொறுப்பை கவிதையாகத் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  11. அழகான கவிதை... அற்புதமான பொருள்...
    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...