Monday, August 28, 2017

கீழோ ராயினும் தாழஉரை கேடோ! குறையோ! அல்ல! நிறை!



நினைத்து நினைத்துப் பார்க்கின்றேன்
     நினைவில் ஏனோ வரவில்லை!
அனைத்தும் மனதில் மறைந்தனவே
    அறிவில் குழப்பம்  நிறைந்தனவே!
தினைத்துணை  அளவே செய்நன்றி
    தேடிச் செய்யின் மனமொன்றி!
பனைத்துணை யாகக் கொள்வாரே
    பயனறி உணரும் நல்லோரே!

அடுத்தவர் வாழ்வில் குறைகண்டே
     அன்னவர் நோக அதைவிண்டே!
தொடுத்திடும் சொற்கள் அம்பாக
     தொடர்ந்து அதுவே துன்பாக!
கெடுத்திட வேண்டுமா நல்லுறவை
     கேடென தடுப்பீர் அம்முறிவை!
விடுத்திட வேண்டும் அக்குணமே
     வேதனை குறையும் அக்கணமே!

கீழோ ராயினும் தாழஉரை
   கேடோ! குறையோ! அல்ல! நிறை!
வீழ்வே அறியா பெரும்பேறே
   விளைவு அதனால் நற்பேரே!
பேழையில் உள்ள பணத்தாலே
   பெருமையும் வாரா குணத்தாலே!
ஏழைகள் பசிப்பிணி போக்கிடுவீர்
   இணையில் இன்பம் தேக்கிடுவீர்!

மக்கள் தொண்டு ஒன்றேதான்
   மகேசன் தொண்டு என்றேதான்!
தக்கது என்றே சொன்னாரே
   தன்நிகர் இல்லா அண்ணாவே!
எள்ளல் வேண்டா எவர்மாட்டும்
   இனிமை ஒன்றே மகிழ்வூட்டம்!
சொல்லல் யார்க்கும் எளிதன்றோ
   சொன்னதை செய்தல் அரிதன்றோ!

                  புலவர் சா இராமாநுசம்

9 comments :

  1. ரசித்தேன். தம முதலாம் வாக்கு.

    ReplyDelete
  2. ரசித்தது/எள்ளல் வேண்டா எவர்மாட்டும்
    இனிமை ஒன்றே மகிழ்வூட்டம்!
    சொல்லல் யார்க்கும் எளிதன்றோ
    சொன்னதை செய்தல் அரிதன்றோ!/

    ReplyDelete
  3. ரசித்தோம்! ஐயா!

    தம 2

    ReplyDelete
  4. ரசித்தேன் ஐயா அருமை
    த.ம. 3

    ReplyDelete
  5. கவிதையை இரசித்தேன் ஐயா!

    ReplyDelete
  6. எனக்குப் புரியிறமாதிரி எழுதியிருக்கிறீங்க.. மிக அருமை..

    ReplyDelete
  7. அது அரிதுதான் அய்யா :)

    ReplyDelete
  8. சொல்லுவது யாவருக்கும் எளிதுதான் ஐயா. உங்களது ஆதங்கத்தை அருமையாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

    ReplyDelete
  9. மக்கள் தொண்டு ஒன்றேதான்
    மகேசன் தொண்டு என்றேதான்!//

    அதை மறந்து தம் மக்கள் தொண்டு தான் மகேசன் தொண்டு என்று புரிந்து கொண்டவர்களை என்ன செய்வது?

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...