Wednesday, November 1, 2017

இதுவென் பதிவே கணக்கென அறியேன் புதுமலர் போன்றே பூத்திட காத்திட !




இதுவென்  பதிவே  கணக்கென அறியேன்
புதுமலர்  போன்றே  பூத்திட  காத்திட
மதுநிகர்  மறுமொழி தந்தெனை  வாழ்த்திட
நிதியெனத்  தந்தவர்  நீங்களே ஆகும் !

என்னிரு  கரங்களை  என்றும்  கூப்பியே
மன்னிய  உலகில்  மன்னும்  வரையில்
எண்ணியே  தொழுவேன்   இணையில்  உறவுமை
கண்ணின்  மணியெனக்  கருதியே வாழ்வேன்  !

சுயநலம்  கருதா  சொந்தங்கள்  நீரே
பயனெதிர்  பாரா  பண்பினர்  நீரே
நயமது மிக்க நண்பினர்  நீரே
செயல்பட  என்னைச்  செய்தவர்  நீரே !

எண்பதைத் தாண்டியே ஆறென இருப்பதும்
உண்பதும்  உறங்கலும்  உம்மிடை இருப்பதும்
என்புடை தோலென  என்னெடு  இருப்பதும்
அன்புடை  உம்மோர்  ஆதர   வன்றோ !

இனியும்  வாழந்திட  என்வலை  வருவீர்
கனியென  இனித்திடக்  கருத்தினைத் தருவீர்
பனிமலர்  போன்றே  குளுமையும்  தோன்ற
நனிமிகு  நாட்களும்! வாழ்வேன்  நன்றி!நன்றி!
                        
புலவர் சா இராமாநுசம்

11 comments :

  1. தொடர்ந்து கவிமழை பொழியுங்கள் ஐயா உங்களுக்கென்று நல்ல உள்ளங்கள் பலர் உண்டு வலையுலகில் கவலை வேண்டாம்
    த.ம.1

    ReplyDelete
  2. நன்றி பாராட்டுவது உங்கள்பெருந்தன்மை.

    ReplyDelete
  3. கில்லர்ஜி மற்றும் ஸ்ரீராம் அவர்களின் கருத்துகளை வழிமொழிகின்றோம் ஐயா

    ReplyDelete
  4. ஒவ்வொருநாளும் தங்களின் கவிமழையில் நனையக் காத்திருக்கிறோம் ஐயா
    தம+1

    ReplyDelete
  5. மகிழ்வான கவிதை ஐயா, மனம் தளராமல் தொடர்ந்து எழுதுங்கோ... சிலசமயம் முடியாவிட்டாலும் மற்றும்படி நாம் வருவோம்...

    ReplyDelete
  6. நாங்கள் இருக்கோம்.. எங்களுக்கு நீங்க இருக்கீங்க...

    ReplyDelete
  7. தங்கள் கவிதைகளைப் படிப்பதே ஒரு தனியான அனுபவம்!

    இறுதிநாள் வரை 'டியர் ரீடர்' என்ற பகுதியை சுயராஜ்யா/கல்கி-யில் தவறாது எழுதிவந்தார் மூதறிஞர் ராஜாஜி அவர்கள். அவரைப் போலவே தாங்களும் விடாமல் எழுதிக்கொண்டிருக்க வேண்டும். நிச்சயம் நாங்கள் படிப்போம். கவலை வேண்டாம்!

    -இராய செல்லப்பா சென்னையில் இருந்து.

    ReplyDelete
  8. எல்லா வாழ்த்துகளையும் அன்போடு ஏற்கும் உங்கள் பண்பைப்பாராட்டுகிறேன்

    ReplyDelete
  9. தொய்வே யின்றித் தினமும் புதிதாய்
    தோயும் அமுதாய் தேனின் சுவையாய்
    அய்யா எழுதும் கவிதை படித்தால்
    ஆரா வமுதம் அருந்திடல் போலாம்
    பொய்யா மழைபோல் பெய்யும் தமிழில்
    பொங்கிப்பெருகும் கவிதை வெள்ளம்
    உய்வோம் உங்கள் கவிதைகள் கண்டு
    உலகத் தமிழர் பெருமை கொண்டு

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...