Thursday, December 28, 2017

கவிதனில் உயர்ந்த கம்பனைப் பாரீர் கற்பனை வளமது கற்றிட வாரீர்!



கவிதனில் உயர்ந்த கம்பனைப் பாரீர்
      கற்பனை வளமது கற்றிட வாரீர்!
புவிதனில் பலரும் படித்திட அவரே
      புலமைக்கும் நிகரென உண்டா? எவரே
செவிதனில் இசையென விழுகிற சந்தம்
     செம்மொழி உளவரை அதற்கிலை அந்தம்
நவிலவும் எளிய நற்றமிழ் சொற்கள்
      நாவலர் சுவைக்கும் கற்கண்டாம் கற்கள்!

ஆயிர மாயிரம் பாடலைப் பாடி
      அரியநல் உவமைகள் ஆய்வுற நாடி
பாயிரம் தம்மொடு அமைந்த காவியம்!
       பண்பினை விளக்கும் பைந்தமிழ் ஓவியம்!
தாயென போற்றும் தமிழ்மொழி தன்னில்
       தன்னிக ரற்றுத் தழைப்பதை எண்ணில்
வாயினில் விளக்கிட வார்த்தைகள் இன்றே!
       வாழும் இலக்கியம் தனிலிதும் ஒன்றே

கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும்
      கவிதை வரையும் வல்லமை புரியும்!
உம்பரும் போற்றும் உன்னதக் கதையே
      ஒருவனுக் கொருத்தியாம் சாற்றும், இதையே
அன்பர்கள் ஆய்ந்து குறைநிறை காண்பதும்
      அடிக்கடிப் பட்டி மன்றங்கள் பூண்பதும்
இன்புற நடைபெறும் ஏற்புடை நிகழ்ச்சியே!
      எல்லையில் கம்பனின் கற்பனை புகழ்ச்சியே

தலைமுறை பலவும் தாண்டிய போதும்
      தன்னிலை தன்னில் அழிவிலா தேதும்
நிலைபெற நின்றே இன்றும் வாழும்
      நிகரில் இலக்கிய மணத்தொடு சூழும்
கலைமிக கற்பனைக் களஞ்சியம் என்றே
     கற்பவர் கற்றவர் போற்றிட நன்றே
மலையென மக்கள் மனதில் தங்கிட
     மறையாது என்றும் மகிழ்ச்சி பொங்கிடும்

                        புலவர் சா இராமாநுசம்

11 comments :

  1. அருமை ஐயா இரசிக்க வைத்த கவி வரிகள்
    த.ம.பிறகு

    ReplyDelete
  2. ரசித்தேன் புலவர் ஐயா.

    ReplyDelete
  3. கம்பன் தமிழ் சொல்லவும் வேண்டுமோ? உங்கள் கம்பன் அனுபவத்தை தீந்தமிழ் வரிகளாக்கி விட்டீர்கள் அய்யா.

    ReplyDelete
  4. ஆனால் கம்பர் சமுத்திரத்தை பூனை நக்கியது போல் என்று சொல்லி யிருக்கிறாராமே

    ReplyDelete
  5. தலைமுறை தாண்டியும் இன்று பேசப்படும் விஷயமாய் ஆதிக்கத்தில் இருக்கிறது உங்கள் கவி அருமை ஐயா

    ReplyDelete

  6. கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும்
    கவிதை வரையும் வல்லமை புரியும்!
    அருமை ஐயா!

    இந்தப் புத்தாண்டு இனிய புத்தாண்டாய்
    எந்த உறவுக்கும் அமைய வேண்டுமென
    அந்த இறைவனை வேண்டி நிற்கிறேன்!

    ReplyDelete
  7. நாள்தோறும் தவறாமல் கிடைக்கும் தங்களின் கவிதையும் கம்பன் கவிதையைப் போன்றதேதான்! சடையப்பருக்குப் பதில் வாசகராகிய நாங்கள் உங்களை ஆதரிக்கிறோமல்லவா? தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    -இராய செல்லப்பா சென்னையில் இருந்து.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...