Saturday, February 3, 2018

மறவாது எழுதுவேன்! மரபில் கவிதை –என் மனமென்னும் தோட்டத்தில், போட்டீர் விதையே!





மறவாது  எழுதுவேன்!  மரபில்  கவிதைஎன்
    மனமென்னும் தோட்டத்தில், போட்டீர்  விதையே!
இறவாது  வாழ்வது  அதுதான்  என்றேபலர்
 இயம்பிட, உள்ளத்தில்  ஏற்றேன்  இன்றே!
தரமாக  தந்திட  முயல்வேன்  நானேஅன்னை
     தமிழ்தானே  நமக்கெல்லாம்  திகட்டாத்  தேனே!
வரமாக வழங்கிடும்  மறுமொழி  தம்மைநீரும்
     வழங்கிட, வளர்ந்திட, வணங்குவேன்  உம்மை!

உள்ளத்தில்  எழுகின்ற  எண்ண தாமேதிரண்டு
     உருவாக, கருவாகி, கவிதை  ஆமே!
பள்ளத்தில் வீழ்ந்திட்ட  நீர்போல்  தேங்கிபின்னர்
     பாய்கின்ற நிலைபோல  நெஞ்சில்  தாங்கி,
கொள்ளத்தான்  எழுதிட முயல்வேன் !மேலும்அதில்
      குறைகண்டே  சொன்னாலும்  திருத்தி,  நாளும்!
எள்ளத்தான்  சொன்னாலும் வருந்த  மாட்டேன்மேலும்
      எவர்மனமும்  புண்பட  கவிதைத்  தீட்டேன்!

தனிமைமிகு  இருள்தன்னில்  தவிக்க லானேன்முதுமை
       தளர்வுதர  அதனாலே முடங்கிப்  போனேன்!
இனிமைமிகு  உறவுகளே  நீங்கள்  வந்தீர்நானும்
       இளமைபெற  மறுமொழிகள்  வாரித்  தந்தீர்!
பனிவிலக  வெம்மைதரும் கதிரோன்  போன்றேஎனைப்
       பற்றிநின்ற  துயர்படலம்  விலகித்  தோன்ற!
நனியெனவே  நலமிகவே  துணையாய்  நின்றீர்வாழ்
 நாள்முழுதும்  வணங்கிடவே  என்னை  வென்றீர்!

7 comments :

  1. நன்றிப்பா அருமை ஐயா
    தாங்கள் இன்னும் பல கவிமழை பொழிவீர்கள். வாழ்க நலம்

    ReplyDelete
  2. அருமை ஐயா. தொடரட்டும் கவிதை மழை.

    ReplyDelete
  3. மிக அருமையாக இருக்கிறது. நேற்று முழுவதும் உங்கள் புளொக் திறக்கவில்லையே.. ஏதோ எரர் காட்டியது..

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா!

    முயற்சியால் முன்வரலாம் மூப்புதடை யில்லை!
    அயற்சிபோகும் பாபுனைவீ ராம்!

    உங்களால் முடியும் ஐயா! அருமையான பா படைத்தீர்கள்.
    இன்னும் தொடருங்கள்!..

    ReplyDelete
  5. அருமை ஐயா
    அருமை
    தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  6. தங்கள் பணி தொடருங்கள்
    நாமும் தொடருவோம்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...