அழியும் உலகம்
என்றேதான் -வலையில்
ஆய்வு
செய்தே இன்றேதான்!
மொழியும் செய்திகள்
பலபலவே –கருத்து
முரண்பட
அவைகள் மிகவுளவே!
விழிகளில் அச்சம்
தோன்றிடவும் –ஊர்
வீதியில்
விவாதம் நடந்திடவும்,
ஏனோ,
வழிபடும் கடவுளை
வணங்குகின்றார் –சிலர்
வருவது
வரட்டும் என்கின்றார்!
வாழவே விரும்புதல்
தவறில்லை –இங்கே
வாழ்பவர்
நிலையாய் எவருமில்லை!
சூழவே நாமும்
அறிந்தாலும் –பிறர்
சொல்வதைக்
கேட்டுத் தெரிந்தாலும்
வீழலே இன்னா
தென்றேதான் –எடுத்து
விளம்பினன்
வள்ளவன் அன்றேதான்!
என்றாலும்,
தாழவே உரைத்து ,
புனிதர்களாய் –நேயம்
தழைத்திட வாழ்வோம் மனிதர்களாய்!
உலகமே அழியின்
வாழ்வெதற்கு –அது
உண்மையா
பொய்யா ஆய்வெதற்கு?
கலவரம் போரொடு
ஊழல்தான் –எங்கும்
காணும்
உலகச் சூழல்தான்!
நிலவரம் இப்படிப்
போகையிலே –நான்
நினைத்துப்
பார்த்த வகையினிலே,
புதிய,
உலகம் தோன்றுதல்
நன்றாமே –நாம்
உணர்ந்து
வாழ்தலும் ஒன்றாமே!
புலவர் சா
இராமாநுசம்

