Showing posts with label அச்சம். Show all posts
Showing posts with label அச்சம். Show all posts

Saturday, December 22, 2012

ஒழிந்ததா மரண பயமேதான் –அடடா! உலகே மகிழ்வின் மயமேதான்!




ஒழிந்ததா  மரண  பயமேதான் அடடா!
   உலகே  மகிழ்வின்  மயமேதான்!
அழிந்ததா ? இல்லை!  அகிலம்தான்-என்ன
   ஆகுமோ  என்றத்  திகிலில்தான்!
எழுந்திட  பொழுதும்  விடிந்தனவே ஆனால்
   எதுவுமே  இன்றி  முடிந்தனவே!
மொழிந்திட  மேலும்  ஏதுமிலை வாழும்
    முறைப்படி  வாழ்ந்தால்  தீதுமிலை!

இயற்கையை  ஒட்டியே  வாழ்வோமா அதை
    எதிர்த்து  அழித்தே  வீழ்வோமா!?
செயற்கை  நம்முடை  சீரழிக்கும் தினமும்
     செய்தால்  அதுநம்   வேரழிக்கும்!
உலகம்  அழிதல்நம்   கையில்தான் நான்
     உரைப்பது  சற்றும்  பொய்யில்தான்!
கலகம், கயமை, போராட்டம் என
    காண்பது  முற்றிலும்  மாறட்டும்!

பிறந்தார்  இறப்பதில்  மாற்றமுண்டா இதில்
    பேதம்  ஏதும்  காண்பதுண்டா !
சிறந்தார்!  செயலால்!  என்றேதான் உலகம்
     செப்பிட  வாழ்தல்   நன்றேதான்!
இறந்தார்  என்றால்  பெருங்கூட்டம் நம்
    இல்முன்  கூடின்  அதுகாட்டும்!
வருந்தார்  இல்லை  ஒருவரென நாமும்
     வையத்தில்  வாழ்வோம்  ஒருவரென!

                                புலவர்  சா  இராமாநுசம்

Thursday, December 20, 2012

அழியும் உலகம் என்றேதான் -வலையில் ஆய்வு செய்தே இன்றேதான்!





அழியும்  உலகம்  என்றேதான்  -வலையில்
    ஆய்வு  செய்தே  இன்றேதான்!
மொழியும்  செய்திகள்  பலபலவே கருத்து
     முரண்பட  அவைகள்  மிகவுளவே!
விழிகளில்  அச்சம்  தோன்றிடவும் ஊர்
   வீதியில்  விவாதம்  நடந்திடவும்,
                     ஏனோ,
வழிபடும்  கடவுளை  வணங்குகின்றார் சிலர்
     வருவது  வரட்டும்  என்கின்றார்!

வாழவே  விரும்புதல்  தவறில்லை இங்கே
    வாழ்பவர்  நிலையாய்  எவருமில்லை!
சூழவே  நாமும்  அறிந்தாலும் பிறர்
     சொல்வதைக்  கேட்டுத்  தெரிந்தாலும்
வீழலே  இன்னா  தென்றேதான் எடுத்து
     விளம்பினன்  வள்ளவன்  அன்றேதான்!
                   என்றாலும்,
தாழவே  உரைத்து ,  புனிதர்களாய் நேயம்
        தழைத்திட  வாழ்வோம்  மனிதர்களாய்!

உலகமே  அழியின்  வாழ்வெதற்கு அது
    உண்மையா  பொய்யா  ஆய்வெதற்கு?
கலவரம்  போரொடு  ஊழல்தான் எங்கும்
    காணும்  உலகச்  சூழல்தான்!
நிலவரம்  இப்படிப்  போகையிலே நான்
    நினைத்துப்  பார்த்த  வகையினிலே,
                   புதிய,
உலகம்  தோன்றுதல்  நன்றாமே நாம்
    உணர்ந்து  வாழ்தலும்  ஒன்றாமே!
                   புலவர்  சா  இராமாநுசம்



இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...