Wednesday, July 30, 2014

பாரறிய பா ஜ கா பொங்கி எழுவாய்-நீயும் பக்சேவுக்குத் துணையானால் ஒருநாள் அழுவாய்!


ஊரறிய உலகறிய உண்மை தன்னை-ஐ.நா
உரைத்தபின்னும உணராது இருத்தல் என்னை!
பாரறிய பா ஜ கா பொங்கி எழுவாய்-நீயும்
பக்சேவுக்குத் துணையானால் ஒருநாள் அழுவாய்!
சீரழிந்து தமிழினமே அழிந்தே போக-இந்த
செயலாலே தமிழ்நாடே சுடுகா டாக!
வேரருந்து போய்விடுமே ஏக இந்தியா-உடன்
விளங்கியிதை செயல்படுமா நமது இந்தியா!

தனிநாடய் நாமிருந்தால் ஈழம் அழிய-பொங்கி
தடுத்திருப்போம் ஐயகோ !ஏற்றோம் பழியே!
இனிமேலும் இதுதொடரின் பாரத நாடே-தமிழ்
இனப்பற்றே வெறியாக விளையும் கேடே!
கனிமேலும் கனியவிடின் அழுகிப் போகும்-எதிர்
காலத்தில் கதையல்ல உண்மை ஆகும்!
பனிபோகும் கதிரவனின் வரவும் கண்டே-உலகு
பக்சேவை ஏற்றிவிடும் குற்றக் கூண்டே!

ஒசாமா பின்லேடன் ஒழிந்தான் என்றே-மகிழும்
உலகமே உமக்கும்நான் சொல்வேன் ஒன்றே!
ஒசாமா சாகவில்லை இலங்கை மண்ணில-அவன்
உலவுகின்றான் பக்சேவாய் காணக் கண்ணில்!
கூசாமல் எம்மவரைக் கொன்றே விட்டான்-பெரும்
கொலைக் களமாய் ஈழத்தை ஆக்கிவிட்டான்!
பேசாமல் போர்குற்ற வாளி யென்றே-நீர்
பிடித்துள்ளே போட்டாலே தொழுவோம் நன்றே!

கண்ணாடி வேண்டுமா கைப்புண்ணைப் பார்க்க-ஐ.நா
காட்டிய அறிக்கையை ஆய்வுடன் நோக்க!
மண்ணோடு அவனாட்சி மக்க வேண்டும்-தமிழ்
மக்களவர் ஒன்றாக அணிதிரள ஈண்டும்!
எண்ணாமல் இரங்காமல் அரக்கனவன் கொலைகள்-நாளும்
ஈழத்தில் கொன்றது எத்தனை தலைகள்!
உண்ணாமல் உறங்காமல் இருக்கின்றார் இன்னும்-உயிர்
உடலோடு நடைப்பிணமே தெளிவாக எண்ணும்!

புலவர் சா இராமாநுசம்

Thursday, July 24, 2014

மலராத மொட்டுகளை கசக்கி முகரும் –எவரும் மாபாவி! மனநோயர்! என்றே பகரும்!



பத்துவயதுக்கு உட்பட்ட சிறுமி தம்மை –நாளும்
பாலியல் பலத்காரம் செய்யும் உம்மை!
கொத்துகறி போட்டாலும் தவறே இல்லை-காமக்
கொடுயோர்க்கு தண்டணை! அதுவே எல்லை!

மலராத மொட்டுகளை கசக்கி முகரும் –எவரும்
மாபாவி! மனநோயர்! என்றே பகரும்!
புலராத விடியல்போல் இருளே சூழும்-அந்த
புண்பட்ட இளங்குறுத்து எவ்வண் வாழும்!

காமுகரே! காமுகரே! வேண்டாம் கொடுமை –வாழும்
காலம்வரை வருந்துகின்ற பழியாம்! மடமை!
ஆமிதுவே! அறிவீரே! திருந்தப் பாரீர்-பெற்ற
அன்னையவள் பெண்தானே ! எண்ணிக் காரீர்!

செய்தித்தாள் செப்புவது நாளும் இதையே- என்ன
செய்வதெனத் தெரியாமல் திகைத்தல் விதியே!
உய்தித்தான் வந்திடுமா….? ஏங்கும் உள்ளம்- மனித
உருவத்தில் மிருகமா….? துயரே கொள்ளும்!

புலவர் சா இராமாநுசம்

Tuesday, July 22, 2014

பழையகள்ளு புதியமொந்தை ஆன தென்றே –இன்று பாராள வந்தோரின் செயலும் ஒன்றே!



பழையகள்ளு புதியமொந்தை ஆன தென்றே –இன்று
பாராள வந்தோரின் செயலும் ஒன்றே
பிழையை நீக்கி நன்மைதர முயலவில்லை-எதிர்த்து
பேசுதற்கும் நாதியுண்டா! அதுதான் தொல்லை

வாக்குறுதி தந்த தெல்லாம் வெற்றுச் சொல்லே-ஏழை
வாழ்வதற்கு யார்வரினும் வாழியே இல்லே
நாக்குறுதி இல்லாதார் நாடகம் தானே-இங்கே
நடக்கிறது நாள்தோறும் வருந்தல் வீணே

ஆளுக்கொரு கருத்தென்று அமைச்சர்  சொல்ல-மோடி
அரசாங்கக் கட்டுப்பாடும் தளரும் மெல்ல
நாளுக்கொரு விளக்கமதில் ! நன்மையல்ல ஐயா –சற்று
நாவடக்கம் வேண்டும்! ஆய்வீர்! மெய்யா

விலைவாசி குறைவதற்கு ஏற்றவழி காண்பீர் –நாட்டில்
வீணாகும் நதிநீரை தடுக்கவழி பூண்பீர்!
தலையாய திட்டங்களை முன்னெடுத்து வருவீர் –மொழித்
தகராறு தலைதூக்கா உறுதிமொழி தருவீர்!

புலவர் சா இராமாநுசம்

Thursday, July 17, 2014

ஆடிப் பட்டம் தேடிவிதை-என்ற ஆன்றோர் பழமொழி என்மனதை



ஆடிப் பட்டம் தேடிவிதை-என்ற
    ஆன்றோர் பழமொழி என்மனதை
நாடி  வந்திட இக்கவிதை-ஐயா
    நவின்றேன் இங்கே காணுமிதை
தேடி நல்ல நாள்பார்த்தே-அதற்கு
   தேவை அளவே நீர்சேர்த்தே
பாடிப் பயிரிட எழுவாரே-உழவர்
   படையல் இட்டுத் தொழுவாரே


இன்றே ஆடிப் பிறப்பாகும்-போற்றி
     எழுதுதல் மிகவும் சிறப்பாகும்
ஒன்றே சொல்வேன் உழுவாரே-இவ்
     உலகம் ஏத்தி தொழுவாராய்
நன்றே ஏற்கும் நாள்வரையில்-ஏதும்
     நன்மை விளையா அதுவரையில்
அன்றே சொன்னார் வள்ளுவரே-நீர்
     அகத்தில் அதனைக் கொள்ளுவரே

உழவர் கைகள் மடங்கிவிடின்-இந்த
     உலக வாழ்வே முடங்கிவிடும்
வழுவே அறியா தொழிலன்றோ-வரும்
    வருவாய் ஒன்றும் நிலையன்றோ
எழவே முடியா நட்டத்தில்-அரசு
    எந்திரம் போடும் சட்டத்தில்
அழவே வாழ்கிறான் ஊர்தோறும்-தேடி
    அனைவரும் வருகிறார் நகர்தோறும்

இந்நிலை தொடரும் என்றாலே-அவர்
    இவ்விதம் நாளும் சென்றாலே
எந்நிலை ஏற்படும் நாட்டினிலே-அடுப்பு
    எரியுமா நமது வீட்டினிலே
அந்நிலை ஏற்படும் முன்னாலே-ஆளும்
     அரசு செய்யுமா சொன்னாலே
தந்நிலை மறக்க வேண்டாமே-செய்ய
     தவறின் பஞ்சம் ஈண்டமே

                         புலவர் சா இராமாநுசம்

Monday, July 14, 2014

அன்றும் இன்றும் ஒன்றே!



, இனிய உறவுகளே! வணக்கம்!

கடந்த,2013-பிப்ரவரி நான் எழுதிய கவிதை இன்றும் பொருந்துவதை காணுங்கள்!

ஏழரை நாட்டுச் சனிபோல-இன்றும்
ஏறின பெட்ரோல் விலைசால!
ஏழைகள், நடுத்தர வர்க்கம்தான்-அவர்
என்றும் காண்பது நரகம்தான்!
வாழைக்கு கூற்றம் காய்போல-நம்
வழங்கிய வாக்கும் அதுபோல!
கோழைகள் ஆனோம் பயனென்ன!?-இக்
கொடுமைக்கு விடிவு இனியென்ன?

பால்விலை ஏறிற்று என்செய்தோம்-நாம்
பதறியும் கதறியும் பயனுண்டா!
தோல்வியே என்றும் தொடர்கதையே-சுமை
தோளொடு நடப்பது தலைவிதியே!
பேருந்து கட்டணம் ஏறிற்றே-மக்கள்
பேசியும் புலம்பியும் மாறிற்றா?
பேருந்து கண்டதும் ஓடுகின்றோம்-இடம்
பிடித்திட முயன்று தேடுகின்றோம்!

மின்விசைக் கட்டணம் விண்முட்ட-துயர்
மேலும் தேளாய் நமைகொட்ட!
என்வினை இதுவோ என்றேங்கி-தினம்
இல்லறம் நடத்தக் கடன்வாங்கி!
தன்வினை ஆற்ற இயலாமல்-நாம்
தவிப்போம் ஏதும் முயலாமல்!
பொன்நிகர் வாக்கை இனியேனும்-நீர்
போடுமுன் சிந்திக்கத் துளியேனும்!

புலவர் சா இராமாநுசம்

Thursday, July 3, 2014

அன்றும் இன்றும் ஒன்றே! அறிவோம் நாமும் நன்றே!


உறவுகளே!
11-3-2013 , அன்று நான் கச்சத்தீவு பற்றி எழுதிய கவிதையே
இதுவாகும் இன்றும் அது பொருந்துவதைப் பாருங்கள்!

மனித நேயம் இல்லையா
மத்திய அரசே சொல்லையா?

தினமேத் தொல்லைப் படுகின்றான்
தேம்பியே மீனவன் கெடுகின்றான்
மனமே இரங்க வில்லையா
மனதில் அரக்கனா சொல்லையா!

சுண்டைக் காய்போல் அந்நாடே
சொன்னால் வெட்கம் பெருங்கேடே
அண்டையில் இருந்தேத் தரும்தொல்லை
அளவா? அந்தோ துயரெல்லை!

கச்சத் தீவைக் கொடுத்தீரே!
காரணம் எதுவோ ?கெடுத்தீரே!
அச்சப் பட்டே மீனவனும்
அல்லல் படுவதைக் காண்பீரே!

படகொடுப் பிடித்தே மீனவரைப்
பாழும் சிறையில் தள்ளுகின்றான்!
இடமிலை மீனவர் உயிர்வாழ
எண்ணமும் உமக்கிலை அவர்வாழ!

மாநில அரசையும் மதிப்பதில்லை!
மத்திய அரசுக்கோ செவியில்லை!
நாமினி செய்வதை ஆய்வோமா?
நல்லது நடப்பின் உய்வோமா?

கடிதம் எழுதினால் போதாதே
காரியம் அதனால் ஆகாதே!
முடிவது எதுவென எடுப்பீரா
முடங்கிட மீனவர் விடுப்பீரா?

அலைகடல் தானே அவன்வீடாம்
அந்தோ! இன்றது சுடுகாடாம்!
நிலைமை அப்படிப் போகுமன்றோ
நிம்மதி, அமைதி ஏகுமன்றோ?

புலவர் சா இராமாநுசம்

Monday, June 30, 2014

அன்பின் இனிய உறவுகளே!



அன்பின் இனிய உறவுகளே!
வணக்கம்! நலமா
கடந்த பத்து தினங்களுக்கு மேலாக இரத்தக் கொதிப்பு அதிகரித்து
சில நாட்கள் மருத்துவ மனையில் ஓய்வெடுக்க நேரிட்டதால் முகநூல்,வலை பக்கம் வரவோ பதிவுகளைப் படிக்கவோ இயலவில்லை
தற்போது, சற்று நலமே!


புலவர்   சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...