ஊரறிய உலகறிய உண்மை தன்னை-ஐ.நா
உரைத்தபின்னும உணராது இருத்தல் என்னை!
பாரறிய பா ஜ கா பொங்கி எழுவாய்-நீயும்
பக்சேவுக்குத் துணையானால் ஒருநாள் அழுவாய்!
சீரழிந்து தமிழினமே அழிந்தே போக-இந்த
செயலாலே தமிழ்நாடே சுடுகா டாக!
வேரருந்து போய்விடுமே ஏக இந்தியா-உடன்
விளங்கியிதை செயல்படுமா நமது இந்தியா!
தனிநாடய் நாமிருந்தால் ஈழம் அழிய-பொங்கி
தடுத்திருப்போம் ஐயகோ !ஏற்றோம் பழியே!
இனிமேலும் இதுதொடரின் பாரத நாடே-தமிழ்
இனப்பற்றே வெறியாக விளையும் கேடே!
கனிமேலும் கனியவிடின் அழுகிப் போகும்-எதிர்
காலத்தில் கதையல்ல உண்மை ஆகும்!
பனிபோகும் கதிரவனின் வரவும் கண்டே-உலகு
பக்சேவை ஏற்றிவிடும் குற்றக் கூண்டே!
ஒசாமா பின்லேடன் ஒழிந்தான் என்றே-மகிழும்
உலகமே உமக்கும்நான் சொல்வேன் ஒன்றே!
ஒசாமா சாகவில்லை இலங்கை மண்ணில-அவன்
உலவுகின்றான் பக்சேவாய் காணக் கண்ணில்!
கூசாமல் எம்மவரைக் கொன்றே விட்டான்-பெரும்
கொலைக் களமாய் ஈழத்தை ஆக்கிவிட்டான்!
பேசாமல் போர்குற்ற வாளி யென்றே-நீர்
பிடித்துள்ளே போட்டாலே தொழுவோம் நன்றே!
கண்ணாடி வேண்டுமா கைப்புண்ணைப் பார்க்க-ஐ.நா
காட்டிய அறிக்கையை ஆய்வுடன் நோக்க!
மண்ணோடு அவனாட்சி மக்க வேண்டும்-தமிழ்
மக்களவர் ஒன்றாக அணிதிரள ஈண்டும்!
எண்ணாமல் இரங்காமல் அரக்கனவன் கொலைகள்-நாளும்
ஈழத்தில் கொன்றது எத்தனை தலைகள்!
உண்ணாமல் உறங்காமல் இருக்கின்றார் இன்னும்-உயிர்
உடலோடு நடைப்பிணமே தெளிவாக எண்ணும்!
புலவர் சா இராமாநுசம்

