Friday, October 24, 2014

திரைகடல் ஓடு என்றாரே திரவியம் தேடு என்றாரே!



திரைகடல் ஓடு என்றாரே
   திரவியம் தேடு  என்றாரே
குறையிலா வழியில் அதைப்பெற்றே
   கொள்கையாய் அறவழி தனைக்கற்றே
நிறைவுற அளவுடன் நீதிசேர்ப்பீர்
   நிம்மதி அதனால் வரும்பார்ப்பீர்
கறையிலா கரமென புகழ்ப்பெறுவீர்
   கண்ணியம் கடமை எனவாழ்வீர்

வையம் தன்னில் வாழ்வாங்கும்
   வாழின்! வாழ்வில் பெயரோங்கும்
செய்யும் எதையும்  தெளிவாகச்
   செய்யின் வருவது களிவாகப்
பொய்யோ புரட்டோ செய்யாமல்
   போலியாய் வேடம் போடாமல்
ஐயன் வழிதனில் செல்வீரே
   அன்பால் உலகை வெல்வீரே!

தீதும் நன்றும் பிறர்தம்மால்
   தேடி வாரா! நம்மாலே
நோதலும் தணிதலும் அவ்வாறே
   நவின்றனர் முன்னோர் இவ்வாறே
சாதலின் இன்னா திலையென்றே
   சாற்றிய வள்ளுவர் சொல்ஒன்றே
ஈதல் இயலா நிலைஎன்றால்
  இனிதாம் அதுவும் மிகஎன்றார்!

எல்லா மக்களுக்கும் நலமாமே
   என்றும் பணிவாம் குணந்தாமே
செல்வர் கதுவே பெருஞ்செல்வம்
   செப்பிடும் குறளாம் திருச்செல்வம்
நல்லா ரவரெனப் புகழ்பெற்றே
   நாளும் நாளும் வளமுற்றே
பல்லார் மாட்டும் பண்பாலே
  பழகிட வேண்டும் அன்பாலே

                              புலவர்  சா இராமாநுசம்

Thursday, October 23, 2014

நன்றி! நன்றி! தமிழ்மணத்திற்கு!



உறவுகளே!
வலைப் பதிவுகளை திரட்டித் தருவதில் முதன்மையாக விளங்கும் தமிழ்மணம் திரட்டியில், கடந்த சில நாட்களாக ஆபாசமான தலைப்புகளில் பதிவுகள் வருவதைக் கண்டு பலரும் எதிர்ப்பு தெரிவிக்க அதனை மிகவும் பெருந்தன்மையோ ஏற்றுக்
கொண்டு, அப்பதிவுகளை நீக்கி வருத்தம் தெரிவித்துள்ளது கண்டு
தமிழ்மண நிர்வாகிகளை பாராட்டி , நன்றியோடு வணங்கி வாழ்த்தினைத் தெரிவித்தும் கொள்கிறோம்!

புலவர்  சா  இராமாநுசம்

தரங்கெட்டுப் போவதுவோ! தமிழ்மணமும் தானோ-கூசும் தலைப்புகளில் பதிவுகளை போடுவதும் ஏனோ!



தரங்கெட்டுப் போவதுவோ! தமிழ்மணமும் தானோ-கூசும்
தலைப்புகளில் பதிவுகளை போடுவதும் ஏனோ
கரம்பற்றிக் கேட்கின்றோம் கண்ணியமும் இதுவா-என்ன
காரணமோ தெரியவில்லை! போதைதரும் மதுவா

மனம்நோகப் பலபேரும் எழுதிவிட்ட பின்பும் –குறை
மாறவில்லை என்றாலே வளராதோ துன்பும்
தினம்போல தவறாது வலையுலகில் வந்தீர் –பதிவைத்
திரட்டுயென தொகுப்பாக முறைப்படித்தித் தந்தீர்

நன்றியதில் மாற்றமில்லை வாழ்த்துகின்றோம் உம்மை-இன்று
நடக்கின்ற முறைகண்டு வருந்துகின்ற எம்மை
என்றும்போல் அரவணைத்து கு(க)றைநீக்க வேண்டும் –நாமே
இணைந்தால்தான் பதிவுலகு வளர்ந்திடுமே யாண்டும்

புலவர் சா இராமாநுசம்

Monday, October 20, 2014

வலைவழிப் பலரும் வந்தீர்கள் –என்னை வாழ்த்தியே அன்பைத் தந்தீர்கள்!


வலைவழிப் பலரும் வந்தீர்கள் –என்னை
வாழ்த்தியே அன்பைத் தந்தீர்கள்
இலைநிகர் அதற்கென மகிழ்கின்றேன்-நாளும்
இருகரம் கூப்பித் தொழுகின்றேன்
அலைபடும் கடற்கரை மணலாக-எரியும்
அணல்தனை அணைக்கும் புனலாக
நிலையென உம்முடை வரவுகளே-தேயா
நிலவெனக் கண்டேன் உறவுகளே


அன்பினை அடக்கிட தாளில்லை-என்றே
ஐயன் சொன்னது தவறில்லை
என்பினை போர்த்திடும் தோலாக-உம்மோர்
இன்னுரை அனத்தும் பாலாக
என்னுயிர் வளர்த்திடும் எருவாக –நெஞ்சில்
எழுவன,கவிதைக் கருவாக
இன்பினை மேலும் தருவீரே –என்னுடை
இதயத்து நன்றி பெறுவீரே!

புலவர் சா இராமாநுசம்

Sunday, October 19, 2014

இன்றென் பிறந்த நாளாகும்!



எட்டுப் பத்தொடு இரண்டாகும்-வயது,
இன்றென் பிறந்த நாளாகும்
பட்டுப் பட்டே பதப்பட்டேன்-துன்பப்
பட்டே நானும் சுகப்பட்டேன்
தொட்டுத் தாலி கட்டியவள்-நெஞ்சில்
துயரத் தீயை மூட்டுயவள்
விட்டுச் சென்றது ஒன்றேதான்-என்றும்
விலகா வேதனை இன்றேதான்


வையம் தன்னில் வாழ்வாங்கு-நான்
வாழ்ந்த வாழ்வு மனமோங்க
பொய்யும் புரட்டும் இல்லாமல்-பிறர்
புறத்தே எதுவும் சொல்லாமல்
ஐயன் வகுத்த வழியென்றே-முடிந்த
அளவில் நானும் பழியின்றே
செய்யும் பணிகளைச் செய்தேனே-நட்பே
சிறப்பென அன்பைப் பெய்தேனே

சிதலைத் தின்ற ஆல்போல-அடி
சிதைய அந்தோ! நாள்போல
மதலை விழுதே தாங்குமன்றே-பெற்ற
மகளீர் என்னையும் அதுபோன்றே
இதமாய் நாளும் தாங்கிடவே-வற்றா
இளமை மனதில் தேங்கிடவே
பதமாய் நடந்தே வாழ்கின்றேன்-கவிதை
படைப்பதே பணியெனச் சூழ்கின்றேன்

வலையில் கவிதைப் படிப்பவரே-எனை
வாழ்த்திக் கருத்தும் கொடுப்பவரே
அலையில் பட்ட துரும்பாக-ஓர்
ஆலையில் பட்டக் கரும்பாக
நிலையில் மனதும் நிலையாக-பெரும்
நிம்மதி! துயரம் அதுபோக
விலையில் பாசப் பந்தங்களே-உம்மால்
விளைந்தது! நன்றி! சொந்தங்களே

புலவர் சா இராமாநுசம்

Wednesday, October 15, 2014

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் எவராலும் காக்க இயலாது! அன்னோன்





இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
எவராலும் காக்க இயலாது! அன்னோன்
கெடுப்பாரும் இன்றியே தானேதான் கெடுவான்
கெட்டவன் அந்தோ! துயரமே படுவான்
துடுப்பதை இழந்திட்ட பரிதாபத் தோணி
துணையின்றி தனியாக உள்ளமே நாணி
விடுப்பானே ஆண்டிடும் உரிமையைக் கூட
வேதனை மண்டியே மனதினில் ஓட


தம்மிற் பெரியாரைத் தமராகக் கொண்டே
தன்னரசை நாள்தோறும் நடத்திடக் கண்டே
விம்மிதம் கொள்வாரே மக்களும் அவன்பால்
விருப்பியே புகழ்வாரே வியந்துமே அன்பால்
இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம்
இல்லாது ஆள்கின்ற மன்னர்பால் விசுவாசம்
உம்மென்று இல்லாமல் உவகையில் காட்டுவார்
ஒருவருக் கொருவர் உற்சாகம் ஊட்டுவார்

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல வேந்தர்
சரியாக நீதியில் ஆண்டிட மாந்தர்
அமரின்றி அனைவரும் அமைதியில் வாழ்வார்
ஆண்டவன் அவனென்று ஆனந்தம் சூழ்வார்
தமரென்றே எல்லோரும் தம்முள்ளே உறவே
தக்கது என்பாரே! அறியாராம் கரவே
இமையோரும் காணத இன்பத்தைப் பெறுவர்
இறைவாநீ என்றுமே மன்னனை தொழுவர்!

பல்லோரின் பகையாலே பாதகம் இல்லை
பலமிக்க மன்னர்க்கு வாராது தொல்லை
நல்லோரின் துணையின்றி நாடாள முயலா
நல்லது கெட்டது அறிந்திட இயலா
வல்லவ ரானாலும் வழிதவறிப் போக
வாய்ப்புண்டு அதனாலே தீமைகள் ஆக
சொல்லவும் தடுக்கவும் பெரியாரின் துணையே
பெரிதென்று அறிவீரே அதற்கில்லை இணையே!

புலவர் சா இராமாநுசம்










Monday, October 13, 2014

முகநூலில் வந்தவை!





இனிய உறவுகளே!

நாம் சில நேரங்களில் பிறருக்கு நல்லது செய்வதாக எண்ணிக் கொண்டு செய்யும் செயல்களே அவர்களுக்கு கெடுதலாக அமைந்து விடும்! அதாவது யாருக்காக, எதற்காக நாம் செய்கிறோமோ அச் செயலின் பண்புநலன்களை(விளைவினை) எண்ணி ஆய்வு செய்யாமல்
செய்தால்! வரும் என்பது வள்ளுவர் கருத்து!

நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை- குறள்

மனித வாழ்க்கையில் கெடுதல் , என்பது நமக்கு வருவதும் அதனால்
துன்பம் கொள்வதும் , இயல்பே! அதனைத் தடுக்கத்தானே நாம் முயல்வோம்! எதனால் கெடுதல் வந்தது என, நாம் ஆய்வதற்கு முன்
வள்ளுவர் சொல்வதைக கேட்போமா!
கெடுதல் , நாம் செய்யத் தகாத செயல்களைச் செய்வதனாலும்
வரும், உரிய நேரத்தில் செய்ய வேண்டிய செயல்களை ,நாம் செய்யத்
தவறினாலும் வரும் என்பதே அவர் கருத்து

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும் 
.
 நாம் சிலநேரங்களில் சிலர் செய்யும் செயலைப் பார்த்து இவை , அறிவுள்ளவன் செய்யும் செயலாக இல்லையே என்று அலுத்துக் கொள்வதுண்டு! அதுபோல வள்ளுவரும் நாகரீகமாக தம் கருத்தை வெளிப்படுத்துகிறார்!
அதாவது, பிற, உயிர்களின் துன்பத்தைத் தன் துன்பமாகக் கருதி உதவ முன் வராவிட்டால் அறிவிருந்தும் பயனில்லை என்பதாம்!
 
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தம்நோய்போல் போற்றாக் கடை.- குறள்

பிறந்தவன் ஒரு நாள் இறப்பது உறுதி ! அதுதான் இயற்கை! இதில்
மாற்றமில்லை! அதுபோல், இறந்தவன் மீண்டும் எழுவதில்லை என்பதும் உண்மை தானே !இதனை அறிந்தவர்தானே நாமெல்லாம்!
ஆனால் இரண்டுக்கும் இடைப்பட்டக் காலத்தில் வாழ்ந்து மடிகின்ற
நமக்குள், எத்தனை பேதங்கள்! சண்டைகள் ! வேறுபாடுகள் ! போன்ற
பலவும், வருதால் கண்ட பலன் என்ன! யாரேனும் பதில் சொல்ல இயலுமா!

உறங்கியவன் , விழித்தெழுவது எவ்வளவு இயற்கையானதோ,அதுபோல வாழ்கையில் விழுந்தவனும் (நினைத்து) தானும் எழ வேண்டும்! முயல வேண்டும் ! வெற்றி உறுதி!

புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...