Saturday, June 20, 2015

பிறப்பு வாழ்வில் ஒருமுறைதன்-மேலும் இறப்பு வழ்வில் ஒருமுறைதான்!



பிறப்பு வாழ்வில் ஒருமுறைதன்-மேலும்
இறப்பு வழ்வில் ஒருமுறைதான்!
இருப்பது நாமே எதுவரையில்-இதை
எவரும் அறியார் இதுவரையில்!
சிறப்பு பெறநாம் வாழ்ந்தோமா-என
சிந்தனை தன்னில் ஆழ்ந்தோமா!
வெறுப்பா மற்றவர் நமைநோக்க-பெரும்
வேதனை வந்து நமைதாக்க!


எண்ணிப் பாரீர் மனிதர்களாய்-பல்
இதயம் வாழ்த்த புனிதர்களாய்!
மண்ணில் வாழ்ந்த காலத்தே-பிறர்
மனதில் திகழ ஞாலத்தே!
கண்ணிய முடனே வாழ்ந்தோமா-நம்
கடமை அதுவென ஆய்ந்தோமா!
பண்ணிய பாபம் ஏதுமிலை-எனில்
பயப்பட வாழ்வில் எதுவுமிலை!

மரணம் நம்மைத் தேடிவர-கேட்ட
மக்கள் அனைவரும் ஓடிவர!
வரமே பெற்றோம் நாமென்றே-அங்கு
வந்தோர் வாழ்த்த மிகநன்றே!
கரமே குவித்துக் கண்ணீரை-அவர்
காணிக்கை யாக்கப் பண்ணிரேல்!
தரமாம் உமது வாழ்வாகும்-பெயர்
தரணியில் என்றும் நிலையாகும்!

புலவர் சா இராமாநுசம்

Thursday, June 18, 2015

ஏதேதோ நடக்குது நாட்டுனிலே –முழுதும் எழுதிட முடியுமா பாட்டினிலே!



ஏதேதோ நடக்குது நாட்டுனிலே –முழுதும்
எழுதிட முடியுமா பாட்டினிலே-நடக்கும்
தீதேதோ தெரியாது வாழுகின்றோம்-போகும்
திசைகாணா துயர்தன்னில் வீழுகின்றோம்-மேலும்
போதாதா விலைவாசி விண்ணைமுட்ட –தினம்
புலம்பிட மக்களும் கண்கள்சொட்ட! –அதனை
ஒதாது இருந்திட இயலவில்லை-ஏதோ
உள்ளத்தை வருத்திட இந்ததொல்லை


பகல்கொள்ளை படுகொலை பெருகிப் போச்சே-நாளும்
பயத்துடன் வாழ்கின்ற நிலையு மாச்சே!-வேறு,
புகலென்ன ! வழியின்றி! வருந்த லாச்சே-நாடும்
போவதோ காடாக! மாற லாச்சே!-மேலும்
மழையில்லை! இட்டபயிர் அழிந்து போக-கண்டே
மனம்குமுற, விவசாயி நொந்து சாக!-நீதியில்,
பிழையன்றோ ? ஆள்வோரே எண்ணி பாரீர்- ஏழைப்
பேதையர் அன்னாரைக் காக்க வாரீர்!

புலவர் சா இராமாநுசம்

Tuesday, June 16, 2015

மாண்பு மிகு மத்திய அரசே! தமிழில் அழகான சொல் மனிதநேயம் என்பது !



கோடிகளில் ஊழல் செய்து .தப்பி ஓடி வெளிநாட்டில் .தேடப்படும் குற்ற வாளியாக அறிவிக்கப் பட்ட கேடிகளுக்குக் காட்டப்படும் மனிதநேயம், இராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் முதலானோர் குற்றம் சாட்டி ,துக்குத் தண்டனை பெற்று பின் ஆயுள் தண்டணையாக மாற அதற்குரிய காலத்தை அவர்கள் அனுபவித்து ஆண்டுகள் கடந்தும், கருணை அடிப்படையில் தமிழக அரசு அவர்களை விடுதலை செய்த பின்பும் இன்னும் சிறையில் வாடிக் கொண்டிருப்பதற்கு பெயர் என்ன!

மாண்பு மிகு மத்திய அரசே! தமிழில் அழகான சொல் மனிதநேயம் என்பது ! அருள் கூர்ந்து அதனை இழிவு படுத்தாதீர்கள்
என மெத்தப் பணிவன்போடு வேண்டுகிறேன்

புலவர்  சா  இராமாநுசம்

Monday, June 15, 2015

பறித்தாரே அணுவளவும் இரக்க மின்றே பாவிகளாம் அரக்கரென சொல்ல நன்றே!

 

எரித்தார்கள் உயிரோடு என்றச் செய்தி
இதயத்தை இரணமாக்க துயரம் எய்தி!
மரித்தாரும் தந்திட்ட வாக்கு மூலம்
மனம்விட்டு மறையாது நீண்ட காலம்!
முறித்தாராம் எழுத்தாளர் உரிமை மற்றும்
முறையற்ற அச்சத்தால் நீதி அற்றும்!
பறித்தாரே அணுவளவும் இரக்க மின்றே
பாவிகளாம் அரக்கரென சொல்ல நன்றே!


புலவர் சா இராமாநுசம்

Saturday, June 13, 2015

தீதும் நன்றும் பிறராலே தேடி வாரா! நம்மாலே!



தீதும் நன்றும் பிறராலே
தேடி வாரா! நம்மாலே!
நோதலும் தணிதலும் அவ்வாறே
நவின்றனர் முன்னோர் இவ்வாறே!
சாதலின் இன்னா திலையென்றே
சாற்றிய வள்ளுவர் சொல்ஒன்றே!
ஈதல் இயலா நிலைஎன்றால்
இனிதாம் அதுவும் மிகஎன்றார்!


எல்லா மக்களுக்கும் நலமாமே
என்றும் பணிவாம் குணந்தாமே!
செல்வர் கதுவே பெருஞ்செல்வம்
செப்பிடும் குறளாம் திருச்செல்வம்!
நல்லா ரவரெனப் புகழ்பெற்றே
நாளும் நாளும் வளமுற்றே!
பல்லார் மாட்டும் பண்பாலே
பழகிட வேண்டும் அன்பாலே!

புலவர் சா இராமாநுசம்

Friday, June 12, 2015

ஈன்றாள் பசியைக் கண்டாலும்-உம்முடை இதயம் வேதனைக் கொண்டாலும்!



அச்சம் அகற்றி வாழ்வார்க்கு-வேறு
அரணே எதுவும் வேண்டாமே!
இச்சை அடக்கி வாழ்வார்க்கு-ஏதும்
இன்னல் வாரா ஈண்டாமே!
பச்சைக் கீரைக்கும் உப்பின்றி-மிகவும்
பழைய சோற்றுக்கும் வழியின்றி
பிச்சை எடுத்து வாழ்ந்தாலும்-கல்வி
பெற்றிட முனைவது நன்றாகும்!


ஈன்றாள் பசியைக் கண்டாலும்-உம்முடை
இதயம் வேதனைக் கொண்டாலும்!
சான்றோர் பழிக்கும் வினைவேண்டா-எனவும்
சாற்றிய குறளின் வழியிண்டே!
ஆன்றோர் கூறும் நெறிதன்னில்-நன்கு
அறிந்து நடப்பின் துயருன்னில்
தோன்றா வகையில் நிலைதருமே-என்றும்
தோல்வி காணா வளம்பெறுமே!

புலவர் சா இராமாநுசம்

Thursday, June 11, 2015

ஐயன் வழிதனில் செல்வீரே அன்பால் உலகை வெல்வீரே!



திரைகடல் ஓடு என்றாரே
திரவியம் தேடு என்றாரே!
குறையிலா வழியில் அதைப்பெற்றே
கொள்கையாய் அறவழி தனைக்கற்றே!
நிறைவுற அளவுடன் நிதிசேர்ப்பீர்
நிம்மதி அதனால் வரும்பார்ப்பீர்!
கறையிலா கரமென புகழ்பெறுவீர்
கண்ணியம் கடமை எனவாழ்வீர்!


வையம் தன்னில் வாழ்வாங்கும்
வாழின்! வாழ்வில் பெயரோங்கும்!
செய்யும் எதையும் தெளிவாகச்
செய்யின் வருவது களிவாகப்!
பொய்யோ புரட்டோ செய்யாமல்
போலியாய் வேடம் போடாமல்!
ஐயன் வழிதனில் செல்வீரே
அன்பால் உலகை வெல்வீரே!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...