Saturday, June 25, 2011

தீயாக தீண்டியெனை வருத்து கின்றாய்

புலவர் கல்லூரியில் அகப்பொருள் இலக்கண வகுப்பில் தலைவி
பிரிவிடை ஆற்றா நிலையில் வருந்தி எழுதியதாக நான் வடித்த
கவிதை- எண் 2  புலவர் சா இராமாநுசம்

      தனவானாய்  ஆவதற்குப்  பொருளை  ஈட்ட-இங்கே
          தனிமையெனும்  பெரும்கொடுமை  என்னை  வாட்ட
      கனமான  மனத்துடனே  அவரும்  சென்றார்-என்ன
          காரணமோ  இதுவரையில்  வாரா  நின்றார்
      தினம்தோறும்  நான்பெற்ற  இன்பம்  தன்னை-நல்
          திரைகாட்டும்  படம்போல  காட்டி  என்னை
      நினைவேநான்  உனக்கென்ன  தீங்கா  செய்தேன்-சுடும்
          நெருப்பாகி  நாள்தோறும்  வாட்டு  கின்றாய்

      கொம்பில்லா  கொடியாக  என்னை  விட்டே-அந்த
          கோமகனும்  பொருள்தேடி  சென்ற  தொட்டே
      வெம்பியழும்  வேதனையைக்  கண்ட  பின்பா-மேலும்
          வேதனையை  தருவதென்ன  நல்லப்  பண்பா
      கம்பமில்லா  மின்விளக்காய்  விண்ணில்  தொங்கி-இரவின்
          காரிருளை  விரட்டிடுவாய்  ஒளியும்  பொங்கி
      அம்புலியே  உனக்கென்ன  தீங்கா  செய்தேன்-நீயும்
          அனலாகி  எனையேனோ  வருத்து  கின்றாய்

      அன்றன்று  பூத்தமலர்  பறித்து  வந்தே-தீரா
          ஆசையுடன்  கூந்தலிலே  சூடத்  தந்தே
      என்றும்நான்  பிரியேனென  சொல்லி  சொல்லி-தினம்
          எனகன்னம்  சிவந்துவிட  கிள்ளி  கிள்ளி
      சென்றவர்தான்  இன்றுவரை  வரவே  யில்லை-ஏதும்
          செய்யவழி  தெரியாமல்  திகைப்பின்  எல்லை
      தென்றலே  நானிருத்தல்  அறிந்த  பின்னும்-ஏன்
          தீயாக  தீண்டியெனை  வருத்து  கின்றாய்

                                                             புலவர் சா இராமாநுசம்

3 comments :

  1. -ஏதும்
    செய்யவழி தெரியாமல் திகைப்பின் எல்லை
    தென்றலே நானிருத்தல் அறிந்த பின்னும்-ஏன்
    தீயாக தீண்டியெனை வருத்து கின்றாய்/

    தீயாகும் தென்றலை தீஞ்சுவையாய்
    தீட்டிய கவிதைக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. ஐயா
    உங்களின் கவிதையில் தமிழ் ஊற்றென பெருக்கெடுத்து ஓடுகிறது
    அள்ளி பருகத்தான் சுயம் இல்லை என்னிடம்
    அருமை அருமை

    ReplyDelete
  3. நன்றி நன்றி
    இராமாநுசம்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...