Friday, June 17, 2011

கண்ணீர் கடிதம்

தாழ்ந்தாய் தமிழா தாழ்ந்தாய் நீ
   வீழ்ந்தாய் தமிழா   வீழ்ந்தாய் நீ
வாழ்ந்தாய் அன்று பலர் போற்ற
   வாழ்கிறாய் இன்று பலர் தூற்ற
சூழ்ந்ததே உன்னை பழி பாவம்
    சொன்னால் எதற்கு வீண் கோவம்
ஆழ்ந்ததே உலகில் நனிசோகம்நீ
    அடிமையா வருமா இனி வேகம்

அல்லல் பட்டு ஆற்றாது அவர்
    அழுகுரல் உனக்கு கேட்க லையா
கொல்லப் பட்ட உடல் தன்னை
    குழியில் புதைப்பதை பார்க் லையா
சொல்லப் பட்டது மிகை யில்லை
    சொன்னதே சேனல் துய ரெல்லை
உள்ளம் உண்டா இல் லையா
    உண்மைத் தமிழா சொல் லையா

ஓடிஓடி தேடுகி றார் தம்
     உறவினர் உடலைத் தேடு கிறார்
ஆடிப் போகுதே நம் உள்ளம்
     அருவியாய் கண்ணீர் பெரு வெள்ளம்
தேடி எங்கும் தெருத் தெருவாய்
   திரியும் அவர்நிலை கண் டாயா
கோடி எடுக்கவும் ஆள் இல்லை
   கொள்ளி வைக்கவும் ஆள் இல்லை

வேண்டாம் தமிழா வேண்டாமே
     வேதனை தீரா ஈண்டாமே
கூண்டாய் இறந்து போவோமா கை
     கூலிகள் உணர  சாவோ மா
மாண்டார் மானம் காத் தாரே
      மற்றவர் பின்னர் தூற் றாரே
ஆண்டோம் அன்று இவ் வுலகே
     அடைவோம் இன்று அவ் வுலகே
         
          வருவீரா????  எழுவீரா?????
                      அன்பன்
                   புலவர் சா இராமாநுசம்

7 comments :

  1. கண்ணீர் கடிதம் என
    தலைப்பிட்டுத் துவங்கினாலும்
    நமது அவல நிலையை மிகச் சரியாக
    படம்பிடித்துக் காட்டினாலும்
    எழுச்சி பெற அறைகூவி
    முடித்திருப்பது அருமை
    மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்
    அற்புதக் கவிதை
    தொடர வாழ்த்தி...அன்புடன்

    ReplyDelete
  2. அல்லல் பட்டு ஆற்றாது அவர்
    அழுகுரல் உனக்கு கேட்க லையா
    கொல்லப் பட்ட உடல் தன்னை
    குழியில் புதைப்பதை பார்க் லையா

    மரத்துப்போன மனங்களையும்
    சுயநலக் கொள்கைகளையும்
    கொண்ட ஆட்சியாளர்களை
    கொண்ட நாடு
    நம் நாடு

    தமிழர் நலம்
    என்பதெல்லாம் பொய்யா
    நல்ல அருமையான
    கவிதை தந்தீர்கள் ஐயா

    ReplyDelete
  3. அல்லல் பட்டு ஆற்றாது அவர்
    அழுகுரல் உனக்கு கேட்க லையா
    கொல்லப் பட்ட உடல் தன்னை
    குழியில் புதைப்பதை பார்க் லையா
    சொல்லப் பட்டது மிகை யில்லை
    சொன்னதே சேனல் துய ரெல்லை
    உள்ளம் உண்டா இல் லையா
    உண்மைத் தமிழா சொல் லையா//


    வேதனை வேதனை. சொல்முழுக்க சோகம். கண்ணீர்வந்தது கண்களில்.

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா,
    எப்படி இருக்கிறீங்க?
    nirupan.blogger@gmail.com
    இது தான் என்னுடைய மின்னஞ்சல் முகவரி,
    நேரம் இருக்கும் போது என்னோடு தொடர்பு கொள்ள முடியுமா?

    ReplyDelete
  5. ஆழ்ந்ததே உலகில் நனிசோகம்நீ
    அடிமையா வருமா இனி வேகம்//

    சால, உறு, கூர், களி....
    இவையெல்லாம்(உரிச் சொற்கள்) இயல்பாகவே, அதுவும் இந்த வயதிலும் உங்களுக்கு நினைவில் வருகிறதே.
    உங்கள் கவிதைக்கு முன்னே நாமெல்லாம் சிறு நாற்றுக்கள் ஐயா. தொடர்ந்தும் எழுதுங்கள்.

    ReplyDelete
  6. ஈழத் தமிழர்களுக்கான ஆதரவு வேண்டியும், தமிழ உறவுகளின் எழுச்சியினையும் எதிர்பார்த்துப் புனையப்பட்டுள்ள உங்களின் கவிதை- புரட்சிகரமான சிந்தனையினைத் தாங்கி வந்துள்ளது.

    ReplyDelete
  7. வணக்கம் ஐயா.இன்றுதான் உங்கள் பக்கம் முதன்முதலாக வருகிறேன்.இன்றே என்னைக் கலங்க வைத்துவிட்டீர்கள்.இதற்மேல் வார்த்தைகள் இல்லை இந்தக் கவிக்கு !

    நேரமிருக்கும் சமயம் என் பக்கமும் வந்து வாழ்த்த அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...