Wednesday, October 31, 2012

விளக்கெரிய எண்ணையின்றேல் திரியெரிந்துப் போகும் விளங்வில்லை உனக்கென்றால் விதிமுடிவே ஆகும்



தலைவாரிப் பூச்சூடி தண்நிலவே முன்னால்
  தடுமாற என்னுள்ளம் தவித்திடுமே உன்னால்
அலைமோதும் கரைபோல அணுவணுவாய் நெஞ்சம்
  அழிகின்ற நிலைதன்னைக் காணாயோ கொஞ்சம்
இலைமீதே தத்தளிக்கும் நீர்த் துளியேபோல
  என்னுயிரும் தள்ளாடி நீங்குமெனில் சால
நிலைமீறிப் போவதற்குள் நின்றென்னைப் பாராய்
  நீங்காத வேதனையை நீமாற்ற வாராய்!

துள்ளுகின்ற காரணத்தால் கரையடைத்த மீனோ
  துள்ளியுந்தன் இருவிழியில் புகலடைந்த தேனோ
தெள்ளுகின்றத் தீந்தமிழே தேவையில்லை வீணே
  தேன்மொழியே தக்கதல்ல தவிர்திடுவாய் நாணே
எள்ளுகின்ற நிலையெனக்கு நீதருதல் நன்றோ
  என்னிடத்து உன்கருத்தை அறிவதுதான் என்றோ
உள்ளமதைக் காட்டயெனில் ஓரவிழி போதா
  உரைத்திடுவாய் கனியிதழைத் திறப்பதென்ன தீதா

இடைகாட்டி மின்னலதைப் போட்டியிலே வென்றே
  இருவென்று சொன்னாயோ விண்ணினிலேச் சென்றே
படைகூட்டிப் போர்த்தொடுக்கப் பழிதனிலே நின்றே
  பளிச்சிட்ட மின்னலதோ பதுங்குவதேன் இன்றே
நடைகாட்டிப் பெருமையுற அன்னமெனும் புள்ளும்
  நாடியுனை அடைந்திட்டால் நாணமிகக் கொள்ளும்
கடைகூட்டிக் கருமணியால் காணிலது போதும்
  கற்பனையில் நாளெல்லாம் இன்பம்அலை மோதும்!

குளக்கரையில் உனைநினைத்து நானிருக்கும் நேரம்
   குடம்தாங்கும் இடைதுவள நீநடப்பாய் ஓரம்
உளக்கரையோ அணுவணுவாய் தானிடிந்துச் சாயும்
   உணர்வற்றே நானிருக்க ஒளிமங்கி ஓயும்
அளக்கரிய என்அன்பை  அறிவதுதான் என்றோ 
   அரிவையுந்தன் ஆசைகளை மறைப்பதுவும் நன்றோ
விளக்கெரிய எண்ணையின்றேல் திரியெரிந்துப் போகும்
   விளங்வில்லை உனக்கென்றால் விதிமுடிவே ஆகும்

தேய்வதென்ன வளர்வதென்ன தெரிவதென்ன விண்ணில்
   தெரிவையுந்தன் முகத்தினிக்கே ஒப்பெனவே எண்ணில்
ஓய்வதென்னத் திங்களுக்கு ஒருமுறைதான் மண்ணில்
   ஒளிதன்னைப் பாச்சுகின்ற அம்புலிதான்  கண்ணில்
ஆய்வதென்ன அறைவதென்ன ஒப்பிலையாம் என்றே
   அழிவதுமே வளர்வதுமே ஆனநிலை இன்றே
பாய்வதென்ன உன்வரவால் என்னுளத்தில் இன்பம்
   பார்க்கவில்லை நீயென்றால் படுவதெல்லாம் துன்பம்
         
                        புலவர் சா இராமாநுசம்

            கல்லூரியில்  படித்தபோது எழுதிய கவிதை!

21 comments :

  1. தேய்வதென்ன வளர்வதென்ன தெரிவதென்ன விண்ணில்
    தெரிவையுந்தன் முகத்தினிக்கே ஒப்பெனவே எண்ணி-----//அருமையான வரிகள்

    ReplyDelete
  2. மிகவும் அருமை நன்றி சகோ

    ReplyDelete
  3. ஒவ்வொரு வரிகளும் அற்புதம்.வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. அகத்தின் ஆழத்திலிருந்து மிதந்துவந்த கவிதையில் அகச்சுவை பளிச்சிடுகிறது ஐயா!

    ReplyDelete
  5. அழகு வரிகள் அய்யா... உங்களின் மொழிநடை தனி அழகு தான்...

    ReplyDelete
  6. மிகச் சிறப்பான கவிதை.

    ReplyDelete
  7. வார்த்தைக் கோர்வைகளைக் கண்டு வியக்கிறேன் ஐயா

    ReplyDelete
  8. ஒவ்வொரு வரியும் அருமை ஐயா...

    சிறப்பான பகிர்வு...

    மிக்க நன்றி...

    ReplyDelete
  9. இளமைத் துள்ளலுடன் விளங்கும் கவிதையைப்
    படித்ததுமே நிச்சயம் இது கல்லூரிக்கால
    கவிதையாகத்தான் இருக்கும் என நினைத்தேன்
    மனம் கொள்ளை கொண்ட கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. அருமையான கவிதை! சந்த நயம் அருமைஐயா! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...