Monday, May 12, 2014

முல்லைப் பெரியார் அணைமட்டும்-அந்த முரடர்கள் செயலால் முடங்கட்டும்!





எழுவாய்த்  தமிழா  எழுவாயா-அணையை
     இழந்த   பின்னர்  அழுவாயா!
வழுவாய்ச்  சொல்லியே  துடிக்கின்றார்-நீர்
     வழங்கிட  பொய்பல  தொடுக்கின்றார்!
தொழுவாய்  எதற்கு  வடநாடே-அவர்
    துணையால்  நடப்பதே  இக்கேடே!
கழுவாய்  எதிர்ப்புப்  போராட்டம்- இங்கே
     கண்டவர்  புத்தி  மாறட்டும்

முல்லைப்  பெரியார்  அணைமட்டும்-அந்த
     முரடர்கள்   செயலால்  முடங்கட்டும்!
எல்லைப்  போரே  நடந்திடுமே-நம்
    ஏக  இந்தியா  உடைந்திடுமே
தொல்லை மத்தியில்  எவர்வரினும்-உடன்
     தொடுப்போம் அறப்போர்  துயர்தரினும்
இல்லை  என்றால்  பெருந்தீங்கே இங்கு,
     ஏற்படும்!  தீர்ப்பால்!  பயனெங்கே

திட்டம்  இட்டே   செய்கின்றார்-அவர்
    தினமும்  பொய்மழை   பெய்கின்றார்
கொட்டம்  இனிமேல்  செல்லாதே-தமிழன்
    குமுறும்  எரிமலை!  பொல்லாதே!
சட்டம்  நமக்கே சாதகமாய்- தீர்ப்பு
     சரியென  வந்தும்  பாதகமாய்
பட்டே  அறிவும் வரவில்லை!   -இதுவே
     பண்பா ?  பகையா!? தெரியவில்லை!


அனைவரும்  ஒன்றாய்  சேருகின்றார்-நம்
     அணையை  உடைக்கக்  கோறுகின்றார்
இனியென  தமிழகம்  திரளட்டும்-நம்
      எழுச்சியை  உலகம்  உணரட்டும்
தனியொரு  புதுயுகம்  தோன்றட்டும்-பின்
      தக்கதோர்  பாடம்  கற்கட்டும்
மனித நேயமே அற்றவர்கள்-பாபம்
      மனதில்  நோயே  உற்றவர்கள்

உதிரிப்  பூவாய்  கட்சிகளே-இங்கே
    உள்ளது  சரியா  கட்சிகளே
எதிரிகள்  அனைவரும்  ஒன்றாக-அங்கே
    இருப்பதைக்  காண்பீர்  நன்றாக
சதிபல  அன்னவர்  செய்கின்றார்-ஏற்ற
    சமயம்  இதுவென  முயல்கின்றார்
மதிமிகு  தமிழா  எழுவாயாநம்
    மானத்தை  உரிமையைக்  காப்பாயா

                         புலவர் சா இராமாநுசம்

12 comments :

  1. கொட்டம் என்றும் தொடராமல் இருக்க, தமிழகம் ஒற்றுமையாய் திரள வேண்டும் ஐயா...

    ReplyDelete
  2. வருகிற தேர்தல் முடிவுகளால் அவர்கள் கொட்டம் அடக்கப் படுவது நிச்சயம் அய்யா !
    த ம 2

    ReplyDelete
  3. "எழுவாய்த் தமிழா எழுவாயா-அணையை
    இழந்த பின்னர் அழுவாயா!" என
    விழிப்புணர்வை
    வெளிப்படுத்திவிட்டீர்கள் ஐயா!

    ReplyDelete
  4. தெலுகு தேசம் பரவாயில்லை. இந்த விஷயத்தில் கன்னட தேசமும், மலையாள தேசமும்தான் சுயநலமாய் பாடாய்ப் படுத்துகின்றன. :))))

    ReplyDelete
  5. இது தமிழர்களின் ப்ரச்சினை என்று யார் சொன்னது.ஜல்லிகட்டு ஒரு சில கிராமங்களில் ஒரு வகுப்பினரின் காட்டுமிறாண்டித்தனம்.முல்லைப்பெரியார் நீர் சில தென் மாவட்டங்களிலுள்ள அனாமத்துகளுக்கு கிடைக்கும் பிச்சை.இதர்க்குபோய் தமிழகமே போரடவேண்டுமா?நங்களென்ன வேலைவெட்டி இல்லாதவர்களா?கேட்கிறது ஒரு கூட்டம்.என்ன பதில்?தமிழனுக்கென்று தனி குணம் உண்டாம்!

    ReplyDelete
  6. அருமையான எழுச்சிக் கவிதை புலவர் ஐயா.

    ReplyDelete
  7. மதிமிகு தமிழா எழுவாயா –நம்
    மானத்தை உரிமையைக் காப்பாயா//
    இல்லையென்றால் இன்னும் தன்மானத்தை தழிழன் மானத்தை இழக்க வேண்டும்

    ReplyDelete
  8. மதிமிகு தமிழா எழுவாயா –நம்
    மானத்தை உரிமையைக் காப்பாயா//

    தேர்தல் முடிவுகள் இதற்கு பதில் சொல்லுமா? ஐயா?!! காத்திருப்போம்! நல்லதொரு முடிவை நோக்கி!

    அருமை ஐயா!

    ReplyDelete
  9. //மதிமிகு தமிழா எழுவாயா –நம்
    மானத்தை உரிமையைக் காப்பாயா//

    இனியாவது தமிழர்கள் கட்சிபேதமின்றி ஒருமித்து குரல் கொடுக்கவேண்டும் என்பதை அழகாய் சொன்னீர்கள். நன்றி!

    ReplyDelete
  10. ஸ்ரீராம் சொல்வது உண்மை.
    ஒப்பந்தப்படி நீர் விடுவதில்லை என்ற குற்றச் சாட்டு ஆந்திரத்தின் மீது இருந்தாதாக நினைவு இல்லை
    உரியவர் காதில் விழுந்து நல்ல விளைவுகள் நடக்கும் என்று நம்புவோம்.

    ReplyDelete
  11. நல்லது நடக்கட்டும்....

    எழுச்சி தரும் கவிதை.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...