Saturday, November 1, 2014

அப்பாவி மீனவர்மேல் பொய்வழக்குப் போட்டே!



அப்பாவி மீனவர்மேல் பொய்வழக்குப் போட்டே-தண்டணை
அறிவித்தார் மரணமெனும் செய்திதனைக் கேட்டே!
இப்பாவை எழுதுகிறேன் தமிழினமே கேளாய்!- சுரணை
இருக்கிறதா நம்மிடையே ! இருப்பதென்ன வாளாய்!
துப்பாக்கி போல்நாமும் வெடித்திடவே வேண்டும்-என்றே
துடிக்கிறது என்மனமும்! யாதுபலன்! மீண்டும்!
தப்பான ஆட்சிதானோ! மத்தியிலே நடத்தல்!-எதையும்
தடுக்கின்ற உணர்வின்றி நாட்களையேன் கடத்தல்!


ஆளுக்கு ஒருகட்சி தலமையது என்றே!-தமிழ்
ஆர்வலரும் சிதறிவிடல் நன்றலவே! இன்றே
நாளுக்கு நாளிங்கே நலிவுதானே உற்றோம் –வடவர்
நாட்டாலே என்னபெரும் நன்மைதனைப் பெற்றோம்!
தோளுக்கு மேலேறி சிங்களவன் சிரிக்க-குன்றா
சோகத்தை நம்மவரோ நாள்தோறும் தரிக்க!
வாளுக்குக் கூர்மயங்கி மழுங்கிவிடல் போன்றே!- இன்றே
வாழ்கின்ற நம்வாழ்க்கை உரியதொரு சான்றே!

புலவர் சா இராமாநுசம்

10 comments :

  1. ஒற்றுமை பணம் சேர்ப்பதில் மட்டுமே இன்றைய கட்சிகளிடம் உண்டு! வேதனைகளை விளக்கும் கவிதை! அருமை!

    ReplyDelete
  2. அய்யா அவர்களுக்கு முதலில் செலுத்துகிறேன்
    தமிழ் கூறும் மெய் வணக்கம்!
    இது போன்றதொரு வன்செயல் நடந்தால்?
    எனது மண்ணின் கவி பாவேந்தர் பாரதிதாசன் எப்படி எழுதுவாரோ?
    அது போன்று உள்ளது அய்யா உமது ஆதங்கக் கவிதை.
    வேதனையை வேர் வரை சென்று படம் பிடித்து பாடம் புகட்டி உள்ளீர்கள்.
    இந்தக் கவிதையை கேட்டாவது,
    அந்தக் "தூக்கு கயிறு" தன்னை தூக்கிட்டு மாளட்டும்.
    நன்றியுடன்,

    புதுவை வேலு
    http://www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete
  3. ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை அய்யா ,கொடுமை கொடுமைன்னு ஆட்சி மாற்றிக் காட்டியதற்கு இந்த தண்டனையா ?
    த ம 2

    ReplyDelete
  4. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete
  5. தமிழக அரசியலில் காட்சி மாறிகள் இருக்கும் வரை தமிழனுக்கு இந்த நிலைதான்...
    அருமையான கவிதை ஐயா...
    வடக்கு தமிழனைக் கண்டு கொள்ளுமா...

    ReplyDelete
  6. வணக்கம் !

    உள்ளக் குமுறலை பலரும் உணரும் வகையில் படைக்கப்பட்ட
    இக் கவிதை மனதை ஏதேதோ செய்கிறதே ! தங்களின் எண்ணம்
    எதுவோ அவை விரைவில் ஈடேற இறையருள் கிட்டட்டும் ஐயா !
    பகிர்வுக்கு மிக்க நன்றி .

    ReplyDelete
  7. பல தமிழர்களின் உள்ளக்குமுறலைச் சொல்லும் கவிதை....

    த.ம. +1

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...