Sunday, April 24, 2016

பத்து மணிக்கே பகல் தன்னில் -நம் பாதம் பட்டால் சுடும் மண்ணில் !



கோடைக் காலம் வந்து துவே -எங்கும்
கொளுத்திட  வெய்யில்  தந்த துவே !
ஆடை முழுதும் நனைந் திடவே -உடல்
ஆனதே குளித்த தாய் ஆகிடவே !
ஓடை போல நிலமெல் லாம்- காண
உருவம் பெற்று வெடித் தனவே !
வீ(ட்)டை விட்டே வெளி வரவே -மனம்
விரும்பா நிலையை அனல் தரவே !

பச்சைப் பயிரும் பொசுங்கி டவே -அற
பசுமை முற்றும் நீங்கி டவே !
உச்சியில் வெய்யில் வந்த தெனில் -நம்
உடம்பைத் தீயென தொட்ட தனல் !
மூச்சை இழுத் தால் அக்காற்றும் -அந்த
மூக்கை சுடவே அனல் மாற்றும் !
சேச்சே என்ன வெயி லென -வெதும்பி
செப்பிட வார்தை செவி விழுமே !

பத்து மணிக்கே பகல் தன்னில் -நம்
பாதம் பட்டால் சுடும் மண்ணில் !
எத்தனை வேகம் காட்டு கின்றார் -ஓட
எங்கே நிழலெனத் தேடு கின்றார் !
இத்தனை நாள் போல் வீட்டோடு -இன்றும்
இருந்தால் எதற்கு இந்தச் சூட்டோடு !
பித்தனைப் போலவர் தமக் குள்ளே-துயரில்
புலம்பிட கேட்குதே செவிக் குள்ளே !

வற்றிய நீர்நிலை இல் லாமே -நீண்டு
வளர்ந்த புல்பூண் டெல் லாமே !
பற்றி எரிய முற்ற றாக -மேலும்
பறந்திடக் காற்றில பஞ் சாக !
வெற்றிடம் தன்னில் கால் நடைகள் -அந்தோ
வெறுமையாய் வாயை மென்றி டவே !
சுற்றி சுற்றி மேய்ந் தாலும் -ஏதுமின்றி
சுருண்டது அந்தோ பசி யாலே !

புலவர் சா இராமாநுசம்

மீள்பதிவு)

7 comments :

  1. ஐயா பாடல் போலவே உள்ளது வரிகள்...
    அருமை ஐயா...

    ReplyDelete
  2. சாதாரணமாக இல்லாத அளவுக்கு பெங்களூரிலும் வெயிலின் கொடுமை அனல் கொடுமை இன்னும் அதிகமாகலாம் என்பதே வாநிலை அறிக்கையின் சாராம்சம்

    ReplyDelete
  3. இந்த கோடை மிகவும் கொடியதாய் அமைந்துவிட்டது. தினமும் வெயிலில் அலைந்து வியர்க்குரு போன்றவை துன்புறுத்துகிறது. சிறப்பாய் கோடையை சித்தரித்த மரபுக் கவிதை அருமை! வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
  4. இன்றைய வெயிலுக்கு பொருத்தமான வரிகள்தான் ஐயா
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  5. கோடையின் கொடுமையை கொட்டித் தீர்த்தீர்கள்.தேர்தல் அனல் அதனைவிட அமர்க்களமாக இருக்கிறது.

    ReplyDelete
  6. இனி வரூங்காலங்களில் கோடையின் கொடுமைஅதிகரித்துக் கொண்டேதான் செல்லும் போலிருக்கிறது ஐயா
    அருமை
    தம +1

    ReplyDelete
  7. வாழ்நாளில் பார்த்ததில்லை என்பார்களே, அதனை நான் உணர்கிறேன். இவ்வாறான வெயிலை இதுவரை பார்த்ததேயில்லை. வெளியில் உக்கிரம் எப்போது குறையப்போகிறதோ?

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...